Wednesday, April 21, 2010

என்னை சந்திக்க வருபவர்களு‌க்கு தொ‌ல்லை கொடு‌க்‌கிறா‌ர்க‌ள்: நளினி புகார்

வேலூர் சிறையில் என்னை சந்திக்க வருபவர்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று சிறைத்துறை தலைவருக்கு நளினி புகார் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி க‌ட‌ந்த 6ஆ‌ம் தே‌தி சிறைத்துறை தலைவருக்கு ஒரு கடிதம் கைப்பட எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''நான் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இருக்கிறேன். அதில் 13 ஆண்டு காலம் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் ஆயுள் சிறைவாசியாக இருந்து வருகிறேன். எனது கணவரும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கிறார்.

இதுவரை சட்டப்படியும், சிறை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டே நடக்கிறேன். எந்த விதமான கெட்ட பழக்கங்களுக்கும் நான் அடிமை இல்லை. தவிர சிறை ஊழியர்களுக்கு கையூட்டு கொடுத்து அவர்களிடம் தேவையானவைகளை சாதிக்கும் பழக்கமும் எனக்கு இல்லை. இதனால் நான் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறேன்.

என்னை பார்க்க வருபவர்களை பல மணிநேரம் காக்க வைத்து இழுத்தடிப்பது. எனது அம்மா, மாமனார், மாமியார் போன்ற வயதானவர்களை 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் காக்க வைத்து திரும்ப அனுப்பி விடுவது, அனுமதி மறுப்பது, விரட்டி அடிப்பது, அவதூறாக பேசுவது என்று எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கிறேன்.

எனது நேர்காணலில் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு சோதனை என்ற பெயரில் நாசம் செய்வது, துணிகளை கிழிப்பது, கொண்டுவரும் பைகளை கிழிப்பது என்று அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறிக்கொண்டே போகிறது.

இதுவரை 19 ஆண்டுகளில் ஒருமுறை கூட சிறை விதிகளுக்கு புறம்பான பொருட்களை கொண்டு வந்ததும் இல்லை. எனது நேர்காணலில் எனது உறவினர்களை சோதனை செய்து கண்டு பிடித்ததும் இல்லை.

இந்த சிறையில் 'ஏ' வகுப்பு சிறைவாசிகளுக்கான தனி மனு அறையும் கிடையாது. என்னை சந்திக்க வரும் குழந்தைகளையும் நான் தொடவும் முடியாத சூழ்நிலையே பெண்கள் சிறையில் நிலவுகிறது.

ஆண்கள் மத்திய சிறைகளில் குழந்தைகள் தந்தையுடன் இருப்பதில்லை. ஆனால் பெண்கள் சிறையில் பெண்கள் குழந்தைகள் பெற்றெடுப்பதுடன், கைக்குழந்தையுடன் கைதாகி வருவதால் பெண் சிறைவாசிகளுடன் குழந்தைகள் சிறையில் இருக்கிறார்கள். சந்திக்கவும் வருகிறார்கள். இது எனக்கு மிக அதிகமான மன உளச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதை பெண்கள் சிறை என்று சொல்வதைவிட எனக்கான கல்லறை எனலாம்.

சிறை மருத்துவரும், வெளி மருத்துவமனையில் இருந்து வரும் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவுகளோ, பழங்களோ, காய்கறிகளோ நாம் பெற வழியில்லை. இதற்கான தீர்வுதான் என்ன? எமக்கு உரிய பரிகாரம் கிடைக்குமா?

சிறைத்துறை நேர்காணல் நேரங்களை எமக்கான தனிப்பட்ட நாள் என்று ஏதும் அறிவுறுத்தப்பட்டால் அதன்படி நேர்காணல் செய்யவும் நான் தயாராகவும் இருக்கிறேன். உங்களின் அவசரமான தலையீடு மற்றும் உத்தரவுகள் எமக்கு உரிய பரிகாரம் அளிக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்'' எ‌ன்று நளினி கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ல்போ‌‌னி‌ல் நளினி யா‌ரிட‌ம் பே‌சினா‌ர் எ‌ன்பது ‌கு‌றி‌த்து ‌விசாரணை நட‌க்‌கிறது: அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன்

சிறையில் இருக்கும் நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது எ‌ன்று சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வேலூ‌ர் காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஞானசேகரன் வேலூர் சிறையில் நளினியிடம் செல்போன் கைப்பற்றப்பட்டது குறித்து பிரச்சனையை கிளப்பினார். அ‌ப்போது அவர் பேசுகை‌யி‌ல், ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை அடைந்த குற்றவாளி நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏர்டெல் சிம் கார்டுடன் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நம்பர் சென்னையில் பெறப்பட்டுள்ள நம்பர் ஆகும். அதிகாரிகள் கைப்பற்றியபோது அதை கழிவறையில் வீசினார். அதை கைப்பற்றியதோடு 2 சிம்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

4 ஆண்டுகளாக அவர் லண்டன், கனடாவுக்கு பேசி இருப்பதாக தெரிகிறது. முதல் வகுப்பு சலுகை பெற்று அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை விதிகளை மீறியது இல்லை என்று சத்தியபிரமாண வாக்குமூலம் கொடுத்து ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தன்னை விடுதலை செய்யுமாறு கேட்டு இருந்தார். அப்படி கூறியவரிடம் இப்போது மொபைல் போன் எப்படி வந்தது. இது தொட‌ர்பாக அவ‌ர் ‌மீது எ‌ன்ன நடவடி‌க்கை எடு‌க்க‌‌ப்ப‌ட்டு‌‌ள்ளது எ‌ன்று கே‌ள்‌வி எழு‌‌ப்‌பினா‌ர்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகை‌யி‌ல், வேலூர் பெண்கள் மத்திய சிறையில் காவ‌ல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நளினி அறையில் சோதனையிடப்பட்டது. அங்கு துணிப்பையில் ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் எடுக்க முற்பட்டபோது வேகமாக பிடுங்கி கழிவறையில் போட்டுள்ளார். இதனை துணை ஜெயிலர் ஓடிவந்து எடுத்து அதை பழுது பார்க்க அனுப்பி உள்ளார்.

அவர் 4 ஆண்டுகளாக செல்போனில் பேசினாரா? என்ற தகவல் எதுவும் வரவில்லை. பேசி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். செல்போன் பழுது செய்யப்பட்ட பிறகு யாருடன் பேசியது என்ற விவரம் தெரிய வரும். செல்போன் தவிர 2 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பல ‌சிறைக‌ளி‌ல் இதேபோல செல்போன் கைப்பற்றப்பட்ட ‌நிக‌‌ழ்வுகளு‌ம் நடைபெற்று உள்ளது. வேலூர் பெண்கள் மத்திய ‌சிறை‌யி‌ல் செல்போன் கைப்பற்றப்பட்டது இதுதான் முதல் முறையாகும்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை சிறைகளில் செல்போன், கஞ்சா கடத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை கண்டுபிடிக்க கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 19 சிறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 வெளி நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 195 கைதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னதான் சட்டம் போட்டு தடுத்தாலும் அதை மீறி செய்யும் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எனவே மிக கவனத்துடன் இருக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com