Wednesday, March 17, 2010

பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்ட ரஷ்ய குடும்பம் தற்கொலை செய்து கொண்டது

செர்ஜீ செரிக், அவரது மனைவி டாடியானா மற்றும் அவர்களுடைய 21 வயது மகன் ஆகியோர் ஒரு கிளாஸ்கோ அடுக்கு மாளிகையின் 15வது மாடியில் இருந்து கடந்த ஞாயிறு காலை கீழே குதித்து விழுகையில் அண்டை வீட்டுக்காரர்கள் உரத்த அலறல்களை கேட்டார்கள். அவர்கள் குதிக்கும் இடத்தில் இருந்து விழும் இடத்திற்கு சற்று மேலிருந்த வலையை கிழித்து உடைத்து செல்வதற்கு அவர்கள் பயன்படுத்திய துணி அலுமாரியுடன் அவர்கள் உடல்கள் தரையில் வீழ்ந்தன. மூவரும் உடனடியாக இறந்து போனார்கள்.

UK Borders Agency (UKBA) எனப்படும் ஐக்கிய இராச்சிய எல்லைகள் அமைப்பு சமீபத்தில் குடும்பத்தினுடைய தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று கூறியது. நகரத்தின் உயரமான குடியிருப்பான Red Road அடுக்கு வீட்டைக்காலி செய்யமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நாடு கடத்தலை எதிர்கொண்டவிதத்தில், இங்கிலாந்தின் தஞ்சம் அளிக்கும் இயந்திரத்தின் மூலம் நலன் பெற முடியாததால் ஏற்படக்கூடிய குறைந்தபட்ச விளைவான ஆதரவற்ற நிலையை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் குடும்பத்தின் நிலைமை முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்தது.

இந்த இறப்புக்கள் பொது மக்களிடம் இருந்து பரிவுணர்வை பெற்றது. நகரத்திலுள்ள Springburn பகுதியில் அடுக்கு மாளிகைக்கு அருகே நடந்த கூட்டத்தில் 100 உள்ளூர் வாசிகள், தற்போதைய மற்றும் முந்தைய தஞ்சம் கோருவோர் மற்றும் குடியுரிமை ஆர்வலர்கள் எனக் கூடினார்கள். கலந்து கொண்டவர்களில் பத்து வயது Precious Mhango வும் இருந்தார். பிரஷஸம் அவருடைய தாயார் பிளோரன்ஸம் சமீபத்தில் அவர்களை மாலவிக்குக் நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்ட UKBA உடைய முடிவை எதிர்த்து நீதிமன்ற பரிசீலனைக்கான உரிமையில் வெற்றி அடைந்தவர்கள்.

கூட்டத்தில் கலந்த கொண்ட ஒருவர் BBC யிடம் கூறினார்: "நாங்கள் உள்துறை அமைச்சரகத்தை கண்டு அஞ்சுகிறோம். அனைவரும் பயப்படுகிறோம். இன்று தஞ்சம் கோருவோர் அனைவரும் இறந்த மூவருக்கும் அஞ்சலி செலுத்த வந்துள்ளோம். தங்கள் நிலைமையைப் பற்றியும் அனைவரும் கவலைப்படுகின்றனர். நான் பாக்கிஸ்தானுக்கு திரும்பிச் சென்றால், அங்கு கொல்லப்படுவேன்."

கோவனில் உள்ள UKBA கிளாஸ்கோ அலுவலகத்திற்கு வெளியேயும் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. மற்றும் ஒரு அணிவகுப்பும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட உள்ளன. நைஜீரிய இரட்டையர்கள் Joshua, Joel Overanah மற்றும் அவர்களுடைய தாயார் Stephanie என்பவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக கிளாஸ்கோவில் கிரான்ஹில் பகுதியில் வசித்துவருபவர்கள் யார்லின் வுடின் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த எதிர்ப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது.

Positive Action for Housing என்னும் உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Robina Qureshi ரெட் ரோட் இறப்புக்கள் பற்றி நிலவிய சூழ்நிலை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். "UKBA ன் பங்கு என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். குறிப்பாக சமீபத்தில் அவர்கள் தஞ்ச வழக்கு பற்றி பலியான மூன்று பேருடன் சமீபத்தில் UKBA தொடர்பு கொண்டதா? தற்கொலைகள் நடந்த ஞாயிறு காலையில் ஸ்ப்ரிங்பர்ன் 63 பீட்டர்ஷில் டிரைவில் இருந்த மூன்று தற்கொலை செய்து கொண்டவர்களின் வீட்டுக் கதவுகளை அதிகாரிகள் தட்டினரா?"

இப்பெரும் துன்பம் இங்கிலாந்தின் தஞ்சம் கோருபவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமையை உயர்த்திக் காட்டுகிறது. அவர்கள் முதல் வருகையிலிருந்தே தஞ்சம் கோருவோர் தங்கள் முறையீட்டை ஒரு விமான நிலையம், துறைமுகம் அல்லது பொலிஸ் நிலையத்தில் சரியாகப் பதிவு செய்து நாடு கடத்தப்படுதற்கு எதிராக பெரும் மோதலை எதிர்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் பல முகாம்கள் ஒன்றிற்கு அவர்கள் முதலில் அனுப்பப்படுவார்கள். அத்தகைய இடங்களில் கிளாஸ்கோ ரெட் ரோடில் இருப்பதும் ஒன்றாகும். 1960 களில் மலிவாகக் கட்டப்பட்ட இந்த இடத்தில் 30 மாடி அடுக்கு வீடுகள் உள்ளன. அவற்றில் இப்பொழுது பாதிக்கும் மேலாக காலியாக உள்ளன, அனைத்தும் தரைமட்டமாக ஆக்கப்படவுள்ளன. இப்பகுதியில் அதிக வசதிகள் கிடையாது, அடுக்கு வீடுகளும் குறைந்த அடிப்படை வசதிகளை உடையவைதான்.

அடுத்துவரும் மாதங்களிலோ ஆண்டுகளிலோ, அனைத்து சமூகக் கேடுகளில் இருந்தும் தப்பும் தஞ்சம் கோருவோர், UKBA வினால் பேட்டி காணப்படுவார்கள். பேட்டியின் அடிப்படையில் அவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கப்படும், அதாவது விருப்புரிமை அனுமதி கொடுக்கப்படும் அல்லது மனிதாபிமான பாதுகாப்பைப் பெறுவார்கள். 70 சதவிகித தஞ்சம் கோருவோர் முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுவிடுவார்கள். ஏற்கப்படும் 30 சதவிகிதத்தினரில், 20 சதவிகிதத்தினர்தான் --அதாவது மொத்தத்தில் 6 சதவிகிதத்தினர்தான்-- அகதிகள் என்று ஏற்கப்படுவார்கள். இதற்கு ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் (Tribunal) உண்டு. அது தன்னிடம் வரும் வழக்குகளில் 25 சதவிகிதத்தை ஏற்கும். அதற்கும் மேற்பட்ட முறையீடுகள் சட்ட உதவியுடன் Court of Session அல்லது தலைமை நீதிமன்றத்தில் செய்யப்பட வேண்டும்.

ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின், உள்துறை அலுவலகம் பொதுவாக 21 நாட்களுக்குள் கொடுக்கப்படும் குறைந்தபட்ச நிதி உதவியைக்கூட நிறுத்திவிடும். அதற்குப் பின் நாட்டைவிட்டு வெளியேற்றும் ஆணை பிறப்பிக்கப்படும். அதன்பின் UKBA ன் எல்லைப் பொலிஸ் முன்னறிவிப்பு இல்லாமல் விடியற்காலையில் பிடித்து Dungavel அல்லது Yarl's Wood காவல் நிலையத்தில் வெளியேற்றுவதற்கு முன் தடுத்து வைக்கப்படுவார்கள்.

தஞ்சம் கிடைப்பதில் தோல்வியுற்றுவிட்ட பல ஆதரவற்றவர்கள் பிச்சை எடுக்க நேரிடும் அல்லது நண்பர்கள் வீடுகளில் தரையில் படுக்க வேண்டும். நாடு கடத்தலுக்கு அஞ்சும் பலர், எல்லைப் பொலிஸை எதிர்கொள்ளுவதற்கு பதிலாக ரெட் ரோட் அடுக்கு வீடுகளின் மாடிப்படிகளில் தூங்குவதை விரும்புவார்கள்.

இத்தகைய கொடூர நிலையில் அகப்பட்டுக் கொள்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது அசாதாரண நிகழ்வு அல்ல. National Coalition of Anti-Deportation கருத்துப்படி 2000த்தில் இருந்து குறைந்தது 55 தஞ்சம் கோருபவர்களாவது தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2006ல் கிளாஸ்கோவில் ஒரு 11 வது மாடி அடுக்குவீட்டில் இருந்து Zamira Sadigova குதித்தார். பொலிசார் அவரை மனநல வைத்திய சட்டத்தின்படி அழைப்பற்காக வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டபோது அவர் கொல்லப்பட்டார். இதற்கு அடுத்த ஆண்டிலும் கிளாஸ்கோவில் நேபாளத்தில் இருந்து வந்த உத்தவ் பண்டாரி குடியேறுபவர்கள் நீதிமன்ற அலுவலகத்தின்முன் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நெருப்பு வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார்.

கிளாஸ்கோவில் மட்டும் 5,000 தஞ்சம் கோருவோர் உள்ளனர். செரிக் குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அத்தகைய நிலையில் அகப்பட்டுக் கொண்டுள்ளதற்கு வந்துள்ள பெரும் அதிர்ச்சி மற்றும் பரிவுணர்வு ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறாக அரசியல் மற்றும் செய்தி ஊடக பிரதிச் செயல் வெறுக்கும் நிலையாக உள்ளது.

கிளாஸ்கோவில் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டோம் ஹாரிஸ் தொழிற்கட்சிக் கொள்கையை ஆக்கிரோஷத்துடன் பாதுகாத்தார். "உண்மையில் தஞ்சம் கோரும் முறை ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால் மக்களுடைய நிலைமை முற்றிலும் ஆராயப்பட்டு, உண்மைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என இருக்கும். தனிநபர் தற்கொலை என்ற பயமுறுத்தலின் அடிப்படையில் தீர்ப்பை வழங்குவதற்கில்லை."

அவர்களைக் கொன்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையில் இருந்து செரிக்கின் குடும்பத்தை தொழிற்கட்சி விலக்கி வைக்க முயன்றுள்ளது. இறப்பதற்கு முன்பு அவர்களைச் சந்தித்திருந்த உள்ளுர் எம்.பி.யான வில்லி பெயின் கோர்டன் பிரௌனைப் பார்த்தபின் கூறினார், "பிரதம மந்திரி இந்த வழக்கு அசாதாரணம் என்று நினைக்கிறார். இது ஒன்றும் தஞ்சம் கோரும் முறை பற்றிய அடையாளம் என்று கருதப்பட்டுவிடக்கூடாது."

இதே போன்ற கருத்துதைத்தான் Times ஆலோசகரான Melanie Reid ஆலும் கூறப்பட்டது. செர்ஜி மற்றும் அவருடைய குடும்பத்தினர் "உலகைச் சுற்றி வரும் இழந்துவிட்ட பரந்த வம்சத்தின் உறுப்பினர்கள், அவர்களுடைய கடந்த காலம் பற்றி சரிபார்க்க முடியாது, அவர்களுடைய நிகழ்காலம் ஆபத்திற்கு உட்பட்டது, வருங்காலம் உறுதியற்றது" என்று விவரித்தார்.

ஆனால், "தஞ்சக் கொள்கையில் கடின உண்மைகளுக்கு பதிலாக உணர்வுகளுக்கு இடம் இல்லை. உலகின் சமூகப் பணியாளராக பிரிட்டன் இருக்க முடியாது. இந்த மாலை மயக்கம் நிறைந்த உலகில் சிலருக்கு உதவ முடியாது, அவர்களுடைய இறப்புக்கள் நம் மனச் சாட்சியை உறுத்தக்கூடாது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்." என்று அவர் வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com