Wednesday, March 3, 2010

பெண்கள் மீதான வன்முறைகள். -வி.ரி.சகாதேவராஜா-

நூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாவே காணப்படுகின்றது.

1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பிக்கின்றன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்களை மேற்கொண்டனர். ஆனால் தற்காலத்திலும் பெண்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

எமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றது. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புக்கள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் அடிமைத்துவம் அல்லாவிட்டால் பெண்ணிற்குரிய வேற்றுமை அதிகரித்து வந்ததாகக் கருதப்படுகின்றது. தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பல தரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய பின்னணியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம், சீடோ எனப்படும் பெண்களுக்கெதிரான சகல விதமான பாரபட்சங்களுக்கும் எதிரான பிரகடனம் ஆகியன பெண்களின் உரிமைகளை வலியுறுத்துகின்றன.

சீடோவின் முகவாசத்தின் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. எல்லா மனிதரும் சமமாகவே பிறக்கிறார்கள். உரிமைகளைப் பொருத்தவரையில் எல்லா மனிதர்களும் சுதந்திரமும் சமத்துவமும் உடையவர்கள். இருந்தும் பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் இன்றும் தொடர்கிறது. உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச ஏற்பாடுகள் இருக்கின்ற போதும், பெண்களுக்கெதிராக, சகல வடிவங்களிலும் காட்டப்படும் பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்படுவது அவசியம். அத்தோடு பெண்களுக்கெதிரான பாகுபாடுகள் என்பது ஆண்களுக்குள்ள மனித உரிமைகளையும் (அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் மற்றும் வாழ்க்கையின் பிற துறைகள் சார்ந்த) சுதந்திரங்களையும் அனுபவிக்கவிடாது மகளிரைத் தடுக்கும் எப்பொருளும் அல்லது எச்செயலும் ஆகும் என வரைவிலக்கணப்படுத்துகின்றது.

மேலும் பெண்கள் தொடர்பான அரசின் பங்கும் பொறுப்பும், அரசியலில் பங்குபற்றுதல், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவபடுத்துதல், தேசியம், கல்வி, வேலை மற்றும் நியாயமான தொழில் உரிமைகள், சுகாதாரம், பொருளாதார, சமூக வாழ்வு, கிராமப்புற மகளிர், சட்டத்தின் முன் சமத்துவம், திருமணத்திலும் குடும்ப உறவுகளிலும் சமத்துவம் போன்ற உரிமைகளை சீடோ பிரகடனம் வலியுறுத்துகின்றது. இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகள் சீடோவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன.

பெண்களுக்கெதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் பல மட்டங்களிலும் பல விதமாக இடம்பெற்று வருகின்றன. அதாவது குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் தொல்லைகள், உடல் உள ரீதியான துன்புறுத்தல்களாக பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுவதற்கான காரணங்களாக

* யுத்தமும் இடப்பெயர்வும்
* பாதுகாப்பற்ற நிலமை
* அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை
* பொருளாதார நெருக்கடிகள்
* முகாம்களில் முறையான முகாமைத்துவமின்மை
* ஆண்கள் தனது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துதல்
* நல்ல சுகாதார வசதிகளின்மை
* மகளிர் உரிமை தொடர்பாக போதிய தெளிவின்மை

போன்றவை காணப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக் கூடிய பெண்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர்.

* வறுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்
* வலது குறைந்த பெண்கள்
* கர்ப்பிணிப் பெண்கள்
* வயோதிபப் பெண்கள்
* சிறு குழந்தையின் தாய்மார்
* சிறுமியர்

போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். உலகளாவிய முறையில் நடாத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் உடல், உள பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாத்தல்

குடும்பத்திலும் யுத்தம் இடப்பெயர்வின் போதும் ஏற்படும் வன்முறைக்கு பெண்கள் ஆளாகின்றனர். ஆனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றனர். உரிமை மீறல்களுக்குட்டபட்ட கலாசார ரீதியான தடைகள், நிதி வசதியின்மை, பிறரில் தங்கி வாழ்தல், சட்ட நிவாரணங்களைப் பெறுவதற்கான வழி வகைகள் பற்றி அறியாதிருத்தல், உரிமை மீறல்கள் பற்றிய அறியாமை காரணமாக பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிக்கும் நாளாக வருடந்தோறும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் பெண்களுக்கெதிரான ஏற்படும். வன்முறைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தற்கால கட்டத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கெதிராக ஏற்படும் வன்முறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சர்வதேச மகளிர் தினம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் போன்றவை பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடுகளாகும். எனவே இத்தகைய தினங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமது பங்களிப்பை குடும்பம், வேலைத்தளம், சமூகம், அரசு உள்ளிட்ட அனைவரும் வழங்குதல் வேண்டும்.

இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com