Wednesday, March 3, 2010

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் : – புன்னியாமீன் -

ஏப்ரல் 8ல் நடைபெறப் போவது விகிதாசார முறையின் இறுதித் தேர்தலா?
இலங்கையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வெற்றி பெறுமிடத்து, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை முதலில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், விகிதாசார முறையின் கீழ் இலங்கையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக இது அமையுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இம்முறையின் கீழ் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்புரிமை அதிகரித்திருப்பதைப் போல பழையபடி பெரும்பான்மை முறையை அல்லது பெரும்பான்மை முறையையும், விகிதாசாரமுறையையும் இணைத்த ஒரு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமிடத்து சிறுபான்மையினரினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம், பெருமளவிற்கு பாதிப்படையலாம், என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு இல்லாமலே, ஜனாதிபதி வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டே ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என்ற புதிய நிலையொன்று தோன்றியுள்ள இந்நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறை பற்றி முன்வைக்கப்படும் வாதப்பிரதி வாதங்கள் அழுத்தமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன், தொடர்புபடுத்தி இப்பாராளுமன்றத் தேர்தலை அணுகுமிடத்து, சுமார் 140 ஆசனங்களுக்கு மேல் ஆளுங்கட்சியால் வெற்றி பெறக்கூடிய நிகழ்தகவு உண்டு. எனவே ஆளுங்கட்சியினரின் மூன்றில் இரண்டு என்ற இலக்கு சாத்தியப்பாடுமிக்கதல்ல என்று உதாசினப்படுத்த முடியாது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்றப்பலம் கிடைக்குமிடத்து விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து, ஆளும் கட்சியைச் சார்ந்த, சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என்பது மறுப்பதற்கு இயலாது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இலங்கையில் தேர்தல் முறைகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?

நவீன உலகில், ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில், மக்கள் தம்பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் உரிமையே ஜனநாயக உரிமையாகக் கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

1. பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறை.
2. விகிதாசார பிரதிநிதித்துவமுறை என்பவையே அவை.

1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாரளுமன்றப் பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும், பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன.

(தேர்தல்) தொகுதிவாரியாக, மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படும்.

உதாரணமாக : X எனும் தேர்தல்; தொகுதியில் போட்டியிட்ட A,B,C,D என்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன எனக் கொள்வோம்.
A = 15,833
B = 12,217
C = 2,893
D = 518
இம்முடிவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர் பெற்ற மேலதிக வாக்குகள் 3616 ஆகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?

1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு (இலங்கையின் 8வது அரசியலமைப்பு) அமுல்படுத்தப்பட்டதையடுத்து இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. 1850களில் டியுனிஸ் அரசியல்வாதியான ஸி.ஸி.ஜி. அந்திரேயும், பிரித்தானியாவைச் சேர்ந்த பாரிஸ்டர் தோமஸ் குரேயும் விகிதாசாரத் தேர்தல் முறையினை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, உலகளாவிய ரீதியில் இத்தேர்தல் முறை பிரபல்யம் அடையக் காரணமாக இருந்தவர் “ஜோன் ஸ்டுவார்ட் மில்” என்பவராவார்.

விகிதாசாரத் தேர்தல் முறை எனும் போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறையே விகிதாசார முறை எனப்படும்.
இந்த விகிதாசார முறையானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை:
1. தனிமாற்று வாக்குரிமை
2. பட்டியல் முறை

தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988, 1994, 1999, 2005, 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்@ராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும். இம்முறைக்கமைய 1989, 1994, 2000, 2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே இத்தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கும் போது சிறுபான்மை இனத்திற்கு எத்தேர்தல் முறை நன்மை பயக்கும் என்பதை இனங் காட்டக்கூடியதாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறைமையும், 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரத் தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.

1. தேர்தல் தொகுதிகள் பிரிக்கும் முறை.
2. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை.
3. வாக்களிக்கும் முறை.
4. ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை.
5. வெற்றிடமேற்படும் போது மீள்நிரப்பப்படும் முறை

தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் முறையினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைத் தேர்தல்முறை இடம்பெற்ற முதலாம் குடியரசு யாப்பில் ( 1972ம் ஆண்டு யாப்பு) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி 78(2) உறுப்புரையின் பிரகாரம் இலங்கையில் 75, 000 மக்களுக்கு (மக்கள் தொகை) ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும், வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக் கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை, ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என்றும் யாப்பின் 77(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 1974ம் ஆண்டில் திரு. நோயல் தித்தவெல (முதலாம் குடியரசு யாப்பு நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய தேசிய அரசுப் பேரவையினால் (பாராளுமன்றத்தால்) 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90, 000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது. திரு. நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ம் ஆண்டில் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது உறுப்பினர் எண்ணிக்கையும்ää தொகுதிகளும் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது.

1 சனத்தொகை அடிப்படையில் மொத்த சனத்தொகை 90, 000 ஆல் வகுக்கப்பட்டு 143 அங்கத்தவர்களும்.
2 பரப்பளவின் அடிப்படையில் இலங்கையின் மொத்தப் பரப்பளவான 25, 332 சதுரமைல்கள் 1000ஆல் வகுக்கப்பட்டு 25 அங்கத்தவர்களுமாக மொத்தம் 168 பிரதிநிதிகள் தேசிய அரசுப் பேரவையில் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 168 பிரதிநிதிகளும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகவே அமைவர். (நியமன அங்கத்துவம் இங்கு நீக்கப்பட்டது) இந்த 168 பிரதிநிதிகளும் இலங்கையில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த 160 தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்படல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.

1947ம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் காப்பீடு ஏற்பாடாக பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி முறை அல்லது இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்கள் அண்ணளவாக சமமாக வாழ்ந்தால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், அல்லது ஒரு தேர்தல் தொகுதியில் இரண்டு சிறுபான்மை இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், இத்தகைய பல அங்கத்துவ தேர்தல் தொகுதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி கொழும்பு மத்தி, நுவரெலிய, மஸ்கெலியா (மூன்று அங்கத்துவத் தொகுதிகளாகவும்) பேருவளை, ஹாரிஸ்பத்துவ, பொத்துவில், மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும் வகுக்கப்பட்டன.

இதன்படி பல அங்கத்துவர் தொகுதி 6 இல் இருந்தும் 14 பிரதிநிதிகளும், தனி அங்கத்துவர் தொகுதிகள் 154இல் இருந்தும், 154 பிரதிநிதிகளுமாக 160 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 168 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படல்.

விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.’

அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார். இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது. இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ‘அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.’ அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.

1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும், கருத்திற் கொண்டு 160 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

2. ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும், 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)

தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.

தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஏனென்றால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர். எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். எனவே பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரப்பிரதிநிதித்துவம் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக வாய்ப்புண்டு என்பது மறுக்க முடியாததாகும்.
ஏனைய நடைமுறைகளை அவதானிக்கும் போதும் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தலாம்.

(தொடரும்…….)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com