Sunday, January 17, 2010

ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!

கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக நேற்றையதினம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கியா ஆகியோர் உரையாற்றியதுடன். சிங்கப்பூரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள் வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார்.

ஊடகங்களின் தவறுகளும் இன்றுவரை அவை ஒருபக்கசார்பாக நடந்து கொள்வது உட்பட, மக்களுக்கு உண்மையை எடுத்துகூற தயங்குவது குறித்தும் இதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இனியாவது ஊடகங்கள் உண்மையை எழுதவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியோர் வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இளைஞர் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன் அவர்கள் உரையாற்றுகையில், ஆயுதபோராட்டம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது தொடங்கியதோ அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையாகவே அது அழிக்கப்படவில்லை. ஏன்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அவை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்றும் தெரிவித்ததுடன். தமிழ் அமைப்புக்களின் ஜக்கியத்தை எடுத்துக்கூறியதுடன் அதற்கான சூழ்நிலை கடந்த ஆண்டு மே மாதத்துடன் தோன்றியுள்ளதையும் அதற்கான முன்னேற்பாடுகள் அண்மையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒரேமேடையில் தோன்றியுள்ளது மூலம் நல்லதொரு ஜனநாயக மாற்றத்திற்கான தோன்றல் ஏற்பட்டுள்ளது என்றும் டேவிற்சன் அவர்கள் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய யாழ் நோர்த்தன் பிரின்ரஸ் உரிமையாளர் மணியம் அவர்கள் உரையாற்றுகையில், சுந்தரத்தின் முற்போக்கு சிந்தனைகளையும், அவரது நற்பண்புகைளயும் எடுத்து கூறியதுடன், புதியபாதை பத்திரிகை அச்சிடுவதற்கு உதவியவமை பற்றியும் அப்போது உள்ள அச்சமான சூழிநிலையிலும், பத்திரிகை வெளியீட்டுக்கான முயற்சிகளில் சுந்தரம் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்களையும் சுந்தரத்தின் தீர்க்கமான செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மருத்துவபீட மாணவன் ஜக்கியசீலன் அவர்கள் உரையாற்றுகையில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதை நினைகூர்ந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் 1985களில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை போன்றவற்றை மிகவும் சுவார்சியமான எடுத்து கூறி பார்வையாளர்களை சுவார்சியப்படுத்தினார்.

பொதுவாகவே நேற்றைய நினைவுதின கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இவ்வாறக தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாற்று ஜனநாயகத்திற்கான சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக புளொட் உறுப்பினர் ரமேஸ் அவர்களின் நண்றியுரையுடன் நினைவுகூரல் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது..

தொகுப்பு: கண்ணன்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com