ஜெனரல் சரத்பொன்சேகாவின் வெற்றி வாய்ப்பு பலமாகவே உள்ளது. கலாநிதி கீதபொன்கலன்
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி ஸ்திரமாகவே உள்ளது. தமிழ் மக்களும் ஜெனரல் சரத் பொன் சேகாவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானிப்பார்களாயின் அவரின் வெற்றி வாய்ப்பு பலமானதாகவே இருக்கும் என பிரபல அரசியல் ஆய்வாளரான கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன் எதிர்வு கூறியுள்ளார்.
ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் தனது ஆய்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசப்பட்டு வந்ததாயினும் 6 மாதங்களுக்கு முன் அப்போதே தேர்தல் முடிவுகள் தெரிந்து விட்டது போன்று சப்பென்றிருந்த இவ்விடயம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பூதம் புறப்பட்டது மாதிரியான அரசியல் கள வருகையால் பெரிதும் விறுவிறுப்பாகி நிலைமை இன்று தலைகீழாகவும் மாறி விட்டது.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் இன்றைய நிலையில் யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்விக்கு விடையளிப்பது கடினமாக உள்ளது. இந்தக் கடினமான நிலையே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கின்ற முதலாவது வெற்றிப்படியாகும்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்கம் உள்ள நிலையில் ஆளும் கட்சியில் மேலும் பல விஜேதாச ராஜபக்ஷாக்கள் இருக்கலாம் என நான் ஆரூடம் தெரிவித்ததற்கமைய இப்போது அர்ஜுன ரணதுங்க போன்றோரும் துணிந்து ஜெனரலுடன் கைகோர்த்துள்ளதால் ஆளும் தரப்பில் எல்லோரும் திடமாக இல்லை என்பதும் புலனாகியுள்ளது.
இப்போது இருக்கின்ற நிலையில் ஜெனரலின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டுமாயின் ஐ.தே.கட்சியின் நிலையான வாக்கு வங்கி மேலும் உடையாமலிருக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் பெரும்பாலான வாக்குகள் சரத்துக்கு கிடைக்க வேண்டும். இவ்விரு விடயங்களும் சாத்தியமாகும் பட்சத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றிவாய்ப்பு பலமானதாகவே இருக்கும்.
பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஐ.தே.கட்சியின் உறங்கு நிலையிலிருந்த லட்சக்கணக்கான வாக்காளர்கள் தீவிரமடைந்து வீதியில் இறங்கிச் செயற்பட முன்வந்துள்ளதுடன் பொதுவேட்பாளருக்கான கட்சித் தலைமையின் விட்டுக் கொடுப்பினால் கட்சித் தலைமைத்துவம் போதிய அளவிற்கு தேசப்பற்று உடையதல்ல என்ற கணிப்பும் அதன் ஆதரவாளர்களிடமிருந்து தகர்க்கப்பட்டுப் போனது.
இந்நிலையில் இப்போது பொதுவேட்பாளரான பொன்சேகாவை ஒரு பலவீனமான வேட்பாளர் என்று ஆளுந்தரப்பால் சித்தரிக்க முடியாதிருப்பதுடன் அவரின் தேசப்பற்று குறித்தும் எத்தகைய சந்தேகங்களையும் அவர்களால் சொல்ல முடியாமலும் உள்ளது.
கடந்த வாரத்தில் வெளியான பத்திரிகைப் பேட்டியொன்று தொடர்பாக அவரை தேசத்தைக் காட்டிக் கொடுத்தார் என்றும், துரோகி என்றும் அரச தரப்பினர் விமர்சித்து மேற்கொண்ட பிரசாரம் இரண்டொரு தினங்கள் பரபரப்பாகப் பேசப்பட்ட போதிலும் பின்னர் அது நாட்டு மக்களிடம் அவ்வளவாக எடுபடவில்லை. இதன் மூலமும் சோர்வடைந்திருந்த ஐ.தே.கட்சி ஆதரவளர்கள் மீண்டும் கட்சிக்குள் திரும்பி ஜெனரலின் வெற்றிக்காக உழைப்பதற்கு ஒரு அடித்தளமாக அமைந்தது எனலாம்.
எவ்வாறாயினும் அடுத்தடுத்த வாரங்களில் இருதரப்பு பிரசாரங்களும் சூடு பிடித்து குஸ்தி மட்ட நிலைக்கு வரும்போது இவர்களில் யார் சிறந்த பௌத்தர் என்ற கேள்விக்கு விடையாகவும் ஜெனரல் சரத் பொன்சேகாவை தென்னிலங்கை விரும்பக்கூடிய சாத்தியப்பாடுகளே அதிகம் தென்படுகின்றன. ஏனெனில் அரசதரப்பு வன்முறைகள் பௌத்த தர்மத்தை மீறுவதாகவே இப்போது பல இடங்களிலும் காணப்படுகின்றன.
மறுபுறம் ஜே.வி.பியின் தீவிரமான ஆதரவானது, தென்னிலங்கைத் தேர்தல் சமநிலையை பெரிதும் பாதிக்கச் செய்து ஆளுந்தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுமுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜே.வி.பி. ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்துப் பிரசாரம் செய்து அவரை வெற்றியடையச் செய்தது. அவ்வொப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டிருந்தவாறு நிறைவேற்று அதிகார ஒழிப்பு என்ற வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவே இத்தேர்தலில் அக்கட்சி ஒரு வகையான வெறித்தனத்துடன் ஜெனரலை மிகத் தீவிரமாக ஆதரித்து தனது பிரசாரத்தை தெற்கிலுள்ள பட்டிதொட்டியெங்கும் முடுக்கி விட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி பெறக்கூடிய வாக்குகளிலிருந்து அன்னளவாக ஏழு இலட்சம் வாக்குகள் களையப்பட்டு ஜெனரலின் பக்கம் சேர்க்கப்படக்கூடும். இம்முறை அக்கட்சி ‘இரட்டைத் தாக்கத்துடன்’ அரசுக்கு எதிரான பிரசாரச் செயற்பாடுகளில் களமிறங்கியிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.
இன்னொரு புறத்தில் அரச தரப்பினால் ஜே.வி.பி.க்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் தேர்தல் வன்முறைகளும் அக்கட்சியின் உறங்கு நிலை ஆதரவாளர்களுக்கு அரசாங்கத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்து பெருந்தொகையில் ஜெனரல் பொன்சேகாவுக்கு வாக்களித்து விடவும் கூடும். அதனால் அக்கட்சிமீது ஏவப்படுகின்ற அரச தரப்பு வன்முறைகள் அக்கட்சிக்கு அதிக பயனுள்ளதாகவே திசை திரும்பி விடுவதற்கும் வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
ஜெனரலுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் அவர் மகிழ்ச்சியடையக்கூடிய விடயம், கடந்த காலத்தில் ஜே.வி.பி. ஆதரித்த வேட்பாளர்கள் பெரும்பாலும் வெற்றியே பெற்றுள்ளனர் என்பதாகும்.
அண்மைக்கால மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் சுட்டிக் காட்டப்பட்ட இன்னுமோர் விடயம், அரசாங்கத்திற்கு சிறுபான்மையினர் மத்தியில் மிகக் குறைந்தளவு ஆதரவே காணப்படுகின்றது என்பதாகும்.
இந்நிலையில் றவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து நிற்பது பெருவாரியான முஸ்லிம் மக்களின் வாக்குகளையும், தென்னிலங்கை மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளையும் அவருக்கு கொண்டு வந்து விடக்கூடும். இதுவும் பொன்சேகா தொடர்பில் சாதகமான காரணிகளாகும்.
இப்போதைக்கு கேள்வி என்னவெனில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதேயாகும். இத்தமிழ் வாக்காளர்களும் பொதுவேட்பாளரான பொன்சேகாவுக்கே வாக்களிப்பதாக தீர்மானமெடுத்தால் ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றி பெறுவதென்பது சாத்தியமானதே எனக் கருதலாம் என கலாநிதி கீதபொன்கலன் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
(நன்றி-வார உரைகல்)
2 comments :
இந்த அரசியல் ஆய்வாளரை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஜேவிபி யின் தென் மாகான சபை தேர்தல் முடிவுகளை இவர் பார்க்கவில்லை போல் தெரிகிறது. ஜேவிபி யினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒட்டுண்ணிகளாக நின்றே பல பாராளுமன்றக் கதிரைகளைப் பிடித்தனர்.
செல்வநாயகம் காலத்தில் "தமிழர்கள்தான்" வெற்றியை தீர்மானிப்பார்கள் என்று செய்த பிரச்சார வாடை இந்த பொன்கலனின் கருத்தில் உள்ளது. கிழக்கு மாகாண தமிழர்களும் மலையகமும் மகிந்தவிற்கு ஆதரவு கொடுக்க உள்ளார்கள் என்பதை மறந்து யுஎன்பி ஆதரவுடன் சரத் வெல்வார் என்று எப்படி இவர் கண்டு பிடித்தாரோ தெரியவில்லை.
யுன்பியும் ஜேவிபியும் தனியே நிற்க முடியாது, தங்களுக்கு செல்வாக்கில்லை என்ற காரணத்தால் பொன்சேகாவிடம் சரணம் ஆனவர்கள்.
அது சரி, இவ்வளவு பொய்யும், புரட்டும் செய்து ஜனாதிபதியாக சரத் பொன்சேகா தெரிவு செயாப்பட்டவுடன், அவர் அதனை துறந்து வனவாசமா போகப் போகிறார்?
WONDERFULL WE ALSO EXPECTING THE SAME SF WILL WIN THE ELECTION
Post a Comment