Sunday, October 25, 2009

கரன்ஸி புலி’யின் மர்ம முகங்கள் : பொறியில் சிக்கிய ராஜ் ராஜரத்தினம்

(கே.பத்மநாபன் (கே.பி.) மூலமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலைப் பின்னல்களை விசாரித்து வரும் இலங்கை அரசுக்கு, கே.பி. மூலம்தான் ராஜ் ராஜரத்தினம் தொடர்பாகச் சில விவரங்கள் கிடைத்ததாகவும்... அதை அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு போனதும்தான் இந்த கைது)
நியூயார்க்கில் வசிக்கும் அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்! நியூயார்க் பங்குச் சந்தை ஏறுவதிலும் - இறங்குவதிலும் இவரது கண்ணசைவுக்கும் பங்குண்டு என்று கூறுவார்கள். இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் படித்த அமெரிக்க பிரஜை. 'ஹெட்ஜ் பண்ட்' எனப்படும் பங்குச் சந்தை வியாபாரத்தில் உலக மகா கில்லாடி. இவரை கடந்த 16.10.09-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ (FBI) கைது செய்துள்ளது. 'பங்குச் சந்தை தொடர்பான மோசடி செய்தார்' என்று ராஜரத்தினம் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், விசாரணை வேறு திசையிலும் பயணிப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனுடன் தோளில் கை போட்டுப் பேசக் கூடியவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனின் தேர்தல் செலவுகளுக்கு கோடிகளை நன்கொடையாக வழங்கியவர் என்று நியூயார்க்கையே அதிசயத்துடன் தன் பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் ராஜ் ராஜரத்தினம். இவர் விடுதலைப்புலிகளுக்கும் பணத்தை அனுப்பியதாகவும் அதிகாரிகள் துருவி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலங்கடித்த 'அக்னி' ராஜரத்தினம் அல்ல இவர். ராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ராஜரத்தினம் சென்னைக்கு 'விசிட்' அடித்ததோடு சரி. போர்பஸ் மாத இதழ், ராஜ் ராஜரத்தினம் உலகின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்று கூறுகிறது.

இன்டெல். ஐ.பி.எம்., மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' முறையில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச்சந்தையில் லாபம் பார்த்தார் என்று எப்.பி.ஐ. தனது முதல் குற்ற அறிக்கையில் கூறியிருக்கிறது. இவரை பொறி வைத்துப் பிடித்தவர், அதிபர் ஒபாமாவினால் சமீபத்தில் நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட ப்ரித் பராரா என்ற பஞ்சாபி - இந்தியர்தான்!

இலங்கையில் நடைபெற்று வந்த ஈழப் போரில், தனது வியாபாரத் தொடர்புகள் கருதி நடுநிலை எடுத்து வந்த ராஜ், 2000-ம் ஆண்டு முதல் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கமான TRO எனும் 'தமிழர் மறுவாழ்வு அமைப்பு' மூலம், இலங்கையில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்புக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு 2001-ம் ஆண்டு எழுந்தது. 2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது.

இலங்கையின் அரசியல்வாதிகளை இவர் நன்கு கவனித்து வந்ததாலோ என்னவோ... ஈழப்பகுதிகளில் இவர் செய்த உண்மையான மனிதாபிமான செயல்களை பாராட்டியே வந்தனர். அதேசமயம், 'இவர் ஈழப்பிரச்னையில் தலையிடுகிறார்' என்று உளவு அமைப்புகள் இலங்கை அரசை எச்சரித்து வந்தன. வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலேந்து மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசினால் கைது செய்யப்பட்ட தலைவர் கருணாகரன் கந்தசாமி, போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் 'மிஸ்டர் பி' என்பவர் ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் போலீஸ் கைப்பற்றியது. 2000, 2004 ஆண்டுகளில் தலா ஒரு மில்லியன் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் இலங்கை வங்கியில் இருந்து சேகரித்தது. யானையிறவு போரில் புலிகள் வெற்றிபெற இந்த நன்கொடைகள் பெருமளவு உதவியதாகவும் இலங்கை போலீஸார் அரசுக்குத் தகவல் தந்தனர். மொத்தத்தில், 2000-ம் ஆண்டு முதலே போலீஸாரின் பார்வையில் வந்த ராஜ், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார் என்று தெரிகிறது.

எப்.பி.ஐ - கோர்ட்டில் உத்தரவு பெற்று இவரது தொலைபேசி,கைபேசிகளை ஒட்டுக்கேட்டது. இவரது பிஸினஸ் கோஷ்டியில் ஒரு ரகசிய உளவாளியை நுழைத்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற வட அமெரிக்க சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தலைவர் திருப்பூரைச் சேர்ந்த நடராஜன் ரத்தினத்திடம் 'ப்ளாங்க் செக்' கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்' என்றாராம் ராஜ். இதற்காக ராஜ் வைத்த ஒரே கண்டிஷன், புலிகளின் ஆதரவு பெற்ற மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் கேரன் பார்க்கரை அழைத்துப் பேச வைக்கவேண்டும் என்பது என்றும் கூறப்படுகிறது. பிறகு, பலமுறை புலிகளின் ஆதரவுக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்றும் அதையெல்லாம். எப்.பி.ஐ தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்தது என்றும் சொல்கிறார்கள் இப்போது.

ஆனால், ராஜரத்தினத்தின் நண்பர் வட்டமோ, ‘அவர் தமிழ் ஆர்வலர். ஆகவே பேரவைக்கு நன்கொடை கொடுத்தார். பல்வேறு சேவை மையங்களுக்கும்தான் வாரி வாரி வழங்கியுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் புலி ஆதரவாளர் என்று கூறுவது தவறு. சிறிய வயதில் கஷ்டப்பட்ட ராஜ், ஏழைகளுக்கு உதவினார். சுனாமி தாக்கிய கிராமங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இதை அன்றைய இலங்கை அதிபரே பாராட்டினார்!’ என்று கூறுகிறார்கள்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனை தலைமை டிரஸ்டியாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க - இந்திய பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தில் ராஜ் டிரஸ்டியாக செயல்படுகிறார். இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பெரும் கொடை வள்ளல் ராஜ்தான். இதனால், இவர் புகழ் அமெரிக்காவெங்கும் பரவியது. இவரது கம்பெனியின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். செல்வச் செழிப்பில் வளைய வந்த ராஜ், ஒரு சமயம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 500 விருந்தினர்களை களிப்பூட்டினார். பங்குச் சந்தை முதலாளிகள், வங்கித் தலைவர்கள், முதலீட்டாளர்கள் என்று அந்த கப்பலில் மிதந்தனர். மிக உயரிய ஒயின், புளூ லேபிள் விஸ்கி ஆறாக ஓடியது. விருந்தினர்களோடு அந்த கப்பல் நியூயார்க் மாநகரை சுற்றி வந்தது. பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாலும், புலிகளின் ஆதரவுப் பழியும் ராஜ் மீது இறங்கியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து புலிகள் ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில், புலிகளின் ஆதரவு பிரமுகர்கள் மீது அமெரிக்கா வழக்குகளை தூசி தட்டி எடுப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கைது நடந்ததா என்ற கேள்வியும் இதனால் எழத் துவங்கியுள்ளது.

(உலக பணக்கார்களின் வரிசையில் 587 வது இடத்திலிருக்கும் ஒருவரை முதல் 100 பேர்களில் ஒருவரென கதையளக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் “2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது“. என்று அடுத்த புழுகையும் அவிழ்த்து விடுகின்றார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில தமிழர்களுக்கு மட்டும் யுனிசெவ் அமைப்பே சில வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இலங்கை அரசோ அல்லது விடுதலைப்புலிகளோ அல்லது தனிநபர்களோ ஒரு குடிசை கூட அந்த மக்களுக்கு போட்டுக் கொடுக்கவில்லையென்பதே உண்மை. ஆனால் விடுதலைப்புலிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குதவவென பல நாடுகளிடமிருந்தும் நேரடியாக பல மில்லியன் டாலர்களை பெற்றுக் கொண்டனர் ராஜ் ராஜரத்தினம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புனர்வாழ்வக்கழகத்திற்கு வழங்கிய நிதியை புனர்வாழ்வுக்கழகம் புலிகளுக்கே கொடுத்தது. இதனாலேயே புனர்வாழ்வுக்கழகத்தை இலங்கை அரசு தடை செய்தது. ராஜ் ராஜரத்தினம் நிதி வழங்கிய கால கட்டத்தில் புனர்வாழ்வுக்கழகம் தடைசெய்யப்பட்டிருக்காததால், ராஜ் ராஜரத்தினம் மீது இலங்கை அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.- கிருபானந்தன்))

(இன்ஸைடர் டிரேடிங் என்றால் என்ன என்று முதலீட்டு ஆலோசகர் நாகப்பனிடம் கேட்டபோது, 'பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையேற்றத்தை முன்கூட்டி தெரிந்துகொண்டு, பங்குகளை வாங்கிப் போட்டு விலையேற்றத்துக்குப் பிறகு விற்று லாபம் பார்ப்பதுதான் இன்ஸைடர் டிரேடிங்!

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை குறையப்போகிறது என்று தெரிந்து கொண்டு, முன்கூட்டியே பங்குகளை விற்பதும் இதில் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர், தன் பெயரில் பங்கு பரிவர்த்தனை செய்யாமல், மறைமுகமாக தன் உறவினர் பெயரிலும் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் 'செபி' மாதிரியான அமைப்புகள் இன்ஸைடர் டிரேடிங்கைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து விட்டது. பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய உறவினர்களின் லிஸ்ட்டைக்கூட அந்த நிறுவனம் கேட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று 'செபி' வலியுறுத்தத் துவங்கியிருக்கிறது. காரணம், இந்த உறவினர்கள் யாரேனும் அதே நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கிறார்களா என்பதை 'செபி' கண்காணித்து வருவதுதான்!'' என்றார் நாகப்பன்.

ஏற்கெனவே தங்கள் வசம் கிடைத்திருக்கும் கே.பத்மநாபன் (கே.பி.) மூலமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலைப் பின்னல்களை விசாரித்து வரும் இலங்கை அரசுக்கு, கே.பி. மூலம்தான் ராஜ் ராஜரத்தினம் தொடர்பாகச் சில விவரங்கள் கிடைத்ததாகவும்... அதை அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு போனதும்தான் இந்த கைது என்றும் ஒரு செய்தி உள்ளது. டி.ஆர்.ஓ. எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு மாற்றுப் பெயரில் மில்லியன் டாலர் நிதி அளித்ததோடு, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் அவரே செயல்பட்டு வந்தாரா என்று தற்போது எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. புலிகளின் மிகப் பெரிய தாக்குதல்களான ஓயாத அலைகள் 1, ஓயாத அலைகள் 2 போன்ற போர்களின் போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க நிதி கொடுத்தது ராஜ் ராஜரத்தினம்தான் என்று புலிகள் ஆதரவு ஆட்களே சொல்லத் துவங்கியுள்ளனர். அதோடு, இலங்கையில் போர் கடுமையாக நடந்த சமயத்தில் அந்நாட்டின் பங்கு மார்க்கெட்டை ஆக்கிரமித்திருந்த டாப் 10 கம்பெனிகளையும் ராஜ் ராஜரத்தினம் கட்டுப் படுத்தி வந்ததாக இலங்கையில் தற்போது பேச்சு எழுந் துள்ளது.

போர் முழுவதுமாக முடிந்த பிறகு புலிகளின் குழந்தைப் போராளிப் பிரிவுக்கான மறுவாழ்வு ஏற்பாடுகளுக்கு ஒரு மில்லியன் டாலர்களை இலங்கை அரசிடம் வழங்க முன்வந்திருக்கிறார் ராஜ் ராஜரத்தினம். இம்முறை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரான ரோஹித்த பொகல்லகாம இந்தப் பணத்தை வாங்கவிடாமல் தடுத்துவிட்டார்!

- மு.தாமரைக்கண்ணன்)

(நன்றி: விகடன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com