Friday, October 30, 2009

பொலிஸாரினால் பம்பலப்பிட்டி யில் மனநோயாளி ஒருவர் கடலில் மூழ்கடிக்கப்பட்டார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகித்தர் மற்றும் சில நபர்களினால் இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களால் மிகவும் துல்லயமாக வீடியோ செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இளைஞன் மனநோயாளி ஒருவர் என தெரியவருவதுடன் அவர் அப்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், புகையிரதங்கள் என்பவற்றுக்கும் கற்களால் ஏறிந்து கொண்டிருந்துள்ளார். புத்திசுயாதீனமற்ற குறிப்பிட்ட இளைஞனின் செயலில் ஆத்திரமுற்ற பிரதேசத்தை சேர்ந்த சிலரும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிலரும் இணைந்து குறிப்பிட்ட இளைஞனை கடலினுள் விரட்டி, அவரை தடிகளால் அடித்து மூழ்கடித்துள்ளதை காணமுடிகின்றது.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவோம் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பொலிஸார் மனநோயாளி ஒருவர் சுயநினைவின்றி மேற்கொண்ட செயலுக்காக அவரது உயிரை குடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது மிகவும் பாரதூரமானதாகும்.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com