Thursday, September 17, 2009

ரிஎம்விபி காரியாலயத்தை அகற்றக்கோரி திருக்கோயில் பொதுச்சந்தை முன்பாக உண்ணாவிரதம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயம் அமைக்கப்பட்டதை அடுத்து அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது பூரண எதிர்ப்பை கடந்த சில வாரங்களாக வெளிக்காட்டி வருகின்றனர். மகஜர்கள், ஆர்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என தமது எதிர்ப்பை தெரிவித்துவந்த மக்கள் தற்போது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயம் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருக்கோயில் பொதுச்சந்தை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் உண்ணாவிரதத்தில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன், உண்ணாவிரம் இருப்போரது கோரிக்கை நிறைவேற்படும் வரை அவர்களுக்கு ஆதராவாக அம்பாறை மாவட்டத்தின் சகல கிராமங்களில் உள்ள மக்களும் சுழற்சி முறையில் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிகின்றன:

உண்ணாவிரதம் தொடர்பாக எமது திருக்கோயில் நிருபர் அனுப்பியுள்ள செய்தியில்:

இன்று 17.09.2009 அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிள்ளையான் குழுவினரின் உப அலுவலுகம்; திறக்கப்பட்டமையை கண்டித்தும், அதை உடனடியாக அகற்றுமாறும் அம்பாறை மாவட்ட அனைத்து தமிழ்ப் பிரதேசங்களிலும் உண்ணாவிரதமும் , ஹர்த்தாலும் அனுஷ;டிக்கப்படுகின்றது. இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே இரு முறை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணி ஆகியவை நடத்தப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையே இன்றைய நிகழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பு , திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்களது ஆட்கடத்தல் மற்றும் கொலை நடவடிக்கைகளை அரங்கேற்றிய பிள்ளையான் குழு, தங்களது நடவடிக்கைகளை அம்பாறையிலும் நடத்துவதற்கான முதல் எத்தனிப்பே இந்த அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15.09.2009 அன்று திருக்கோவில் 2ஐ சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனை கடத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் இக்குழுவினர் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் சட்ட பூர்வமாக அரசியல் காரியாலயங்களை திறந்துகொண்டு அரசியல் என்ற பெயரில் தமிழ் மக்களை மீண்டும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளுவதற்கு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இவ் உண்ணா விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.

எந் நாளும் தமிழர்கள் கண்களை மூடிக் கொன்டிருப்பார்கள் என்று நினைப்பது பகல்கனவு என்பதை அனைத்து சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அனாதைகளாக இவ்வளவு காலம் இருந்த தமிழ் மக்கள் சந்தித்தது என்ன? சமுக அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையும் படித்து விட்டு தொழிலற்ற நிலையும் உருவானதற்கு காரணம் பிள்ளையான் போன்ற அரசியல்வாதிகளே. என்கின்ற கருத்துக்களை உண்ணாவிரத்தில் கலந்துகொண்டோர் தெரிவிப்பதை அவதானிக்க முடிகின்றது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com