அல்லாஹ் அக்பர், அஸத்தோ மஹ்,ஸற்கவயாஹ்,ஸமஸோமாஹ் ஜோஸிற்கமயாஹ் . -யஹியா வாஸித்-
'குல்லு நப்சின் தாயிக்கதுன் மவுத்' (அல் குர்ஆன்) மூச்சுவிடும் அனைத்து உயிரினங்களும் மரணம் என்னும் பானத்தை அருந்தியே ஆகவேண்டும்.இந்த வகையில் மூச்சை நிறுத்திக்கொண்ட முத்துக்கிருஷ்ணனினதும் முருகதாசினதும் மரணத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும்; அவர்களைப் பெற்று வளர்த்து ,பாலூட்டி ,தேனூட்டி வளர்த்து இப்போது மத்தளமாகிக் கொண்டிருக்கும் அந்த தாய்,தந்தை,உடன் பிறப்புக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துத்தான் ஆகவேண்டும்.
இதே பாணியில் அன்று; நம்மவர்கள் 'நல்லதோர் வீணை செய்வார்கள்'என நினைத்து; உரும்பராயில் உடைந்து சிலையாக இருக்கும் சிவகுமாரனும், நல்லுர் சந்தியில் பட்டினி கிடந்து உரிமைக்காக உயிரைவிட்ட திலீபனும் இறைவனடி சேர்ந்தார்கள். அந்த தியாகமும்,தீட்சண்யமும் மழுங்கடிக்கப்பட்டு மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் படியான ஒரு இக்கட்டில் தமிழ்பேசுவோரை, தமிழனை தள்ளிவிட்டு இன்னும் பிடித்த முயலுக்கு மூணுகால் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும், இன்னும் நிறையக்காலங்களும் ,நேரங்களும், தமிழ் எங்கள் மூச்சு; என தமது சக்தியெல்லாம் திரட்டி போராட உலகத்தமிழனும் உணர்ச்சியோடுதான் இருக்கின்றான். உரிமைக்காக ஏங்கிக் கொண்டும்தான் இருக்கின்றான்.ஆனால் யார் மணிகட்டுவது?
ஏதும் தெரியாமல் எனை(ம) மறைத்த வன்னிருளை நீக்க
நாதா என(ம)க்கொரு ஞான விளக்கில்லையோ !
அல்லும் பகலும் அகன்ற வடிவே !!
உன்னை நான்(ம்); அண்டும் படி என(ம)க்கு ஒரு
ஞான போதம் தான் இல்லையோ !? என்று ஒப்பாரி வைத்தழுத தாயுமான சுவாமியின் நிலையில் தான் இன்று ஒவ்வொரு தமிழ் மகனும் இருக்கின்றான். நமது முகத்துக்கு முன்னால் அவன் சிரித்தாலும் முதுகுக்குப் பின்னால் கனன்று,வெம்பி,வெடித்துக் கொண்டிருக்கின்றான். இப்போது போய் எண்ணையோ ,நெய்யோ ஊற்றி வேல் பாய்ச்சிவிடக் கூடாது. அப்புறம் அது மீண்டும்ஒரு தமிழ் இளைஞர் பேரவைக்கோ,புதிய புலிகள் இயக்கத்துக்கோ வழி சமைத்துவிடும்.
இன்றைய பல மாத வன்னிநகர்வையும் ,அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்த முஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ்,ஐந்து சந்தி,பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால்ள; அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள் ).வாப்பா சொல்கின்றார் 'மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்'.யார் வாப்பா போகச் சொன்னது ?ஏன் போகச் சொன்னார்கள் ? எதற்காகப் போகச்சொன்னார்கள் ? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை ! கேட்க நேரமுமில்லை !!கேட்க நாதியுமில்லை !! 'எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்'. 'திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி'
'அல் ஹம்துலில்லாஹ்'(அல் குர்ஆன் ) எல்லாப்புகழும் அந்த இறைவன் ஒருவனுக்கே.என்று
மனதிற்குள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு ளூ உடலையும் உயிரையும் காவிக்கொண்டு; வேட்டை நாய்களால் குறி பர்க்கப்பட்ட முயலாக நடந்தோம், ஓடினோம், பதறினோம். வளியில் உளவுப் பிரிவினரால் பரிசோதிக்கப் பட்டோம். எனது சகோதரி, எட்டுமாத கர்ப்பிணி வாயில் நுரைதள்ள நடந்து வந்து கொண்டிருந்தார். அவரது காதில் ஒரு 4 கிராம் பெறுமதியான காதுப்பூ இருந்தது. ஒரு வாட்ட சாட்டமான இளைஞர் தனது இரு கைகளாலும் காதைப் பிய்த்து அதைபுடுங்கினார். 'எஸ் யு காண்ட் கெரி எனிதிங் புறம் அவர் மதர் லேன்ட்'. 'திஸ் ஓடர் புறம் அவர்பிக் பிறதர்'.
வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகித்த மண்ணில்
குணமாத மனிதரையும் படைத்து;
இந்த குவலயத்தில்
தானுதித்து குருவாய் வந்து.
சகமான சம்சாரம் ஒன்றில்லாமல்;
சன்னியாசிபோலிருந்து
சித்தத்தை காட்டிச் சென்றவனே அண்டுவாயே.
அண்டுவாயே,அண்டுவாயே என அலறிக் கொண்டு..!
இற் இஸ் ஒன் றெக்கார்ட்.
இற் இஸ் ஒன் றெக்கார்ட்.
இற் இஸ் ஒன் றெக்கார்ட்.
மறுமை என்ற ஒன்றிருக்கின்றது. உலகமே மரணித்த பின் ளூ அனைத்து ஜீவ ராசிகளையும் எழுப்பி, தன்முன்னால் நிறுத்தி கேள்விகள் கேட்டு செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப சொர்க்கம் ,நரகம் என இறைவன் (அல்லாஹ்) அனுப்பிவைப்பான். இது இந்த கேள்வி கணக்கு பெரியதொரு மைதானத்தில் நடக்கும். உலகின் மொத்த ஜன சமுத்திரமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பர்.பரந்த வெளி,உச்சி வெயில் தலையைத்தொடும். தாய் தகப்பன், உற்றார், உறவினர், அத்தான், அக்கா, ஆண்டான், அடிமை, எதுவும் கிடையாது. இந்த நாளை 'மஹ்சருடைய நாள்' என்போம். இந்த நாளுக்காகத்தான் உலகில் வாழும் ஒவ்வொரு நாளும் பயந்து புண்ணியம் தேடிக் கொண்டிருப்போம். 'மை கோர்ட்னெஸ்'. இந்த யாழிலிருந்து துரத்தப்பட்ட நாளே இப்படி என்றால் !? அந்த நாள் !!! அந்த மறுமை நாள்.
இப்போது இந்த வன்னி மக்களை நினைக்கும் போது அந்தநாள் ஞாபகம் மூச்சை முட்டுகின்றது. தொண்டை அடைக்கிறன்றது,பிடறி மயிர் விறைக்கின்றது. அன்று எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை.இன்று உங்களுக்காக உலகமே குரல் கொடுக்கின்றது. உரிமைக்குரல்கள் ஆர்ப்பரிப்புகள், உயிர்த்தியாகங்கள் என என்னென்னவோ !? ஆனால் எதுவுமே , எங்குமே நச்சென உறைக்கவில்லை.மீண்டும், மீண்டும், மீண்டும் அதே பாணி, அதே தோற்றம், அதே கும்பல், அதே பாட்டு. உங்களுக்காக ஒப்புக்கு சப்பாணியாக அழுபவர்கள் 'தண்ணிக்குள்ளால் லாம்பு கொண்டு போற' அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றனர். ஆனால் சிங்கள அரசு 'பெற்றோழுக்குள்ளால் லாம்பு'களை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது.
அண்மையில் 'காஸா'வுக்காக இங்கிலாந்தில் ஒரு ஊர்வலம் நடந்தது. ஒரு இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர் 'காஸாவுக்காக ஒரு கவனயீர்ப்பு நடாத்த உள்ளோம் விருப்பம் இருந்தால் நாளை வாருங்கள்' என பல நண்பர்களுக்கும், பல அமைப்புகளுக்கும் போன் பண்ணி சொல்லுகின்றார். அடுத்த நாள் பலர் வருகின்றனர். கவனயீர்ப்பு செய்வதென முடிவாகின்றது. வந்தவர்கள் எல்லாம் 9000பவுண் சேர்த்து பைனான்சியல்ஸ் டைம்ஸ் இல் பிரிட்டிஷ் பிரதமருக்குஒரு முழுப்பக்க வேண்டுகோள் விடுகின்றனர். 'பிளீஸ் ஹெல்ப் த காஸா இனஸன் பீப்பிள்'.
அத்துடன் அதே வெள்ளிக் கிழமை ஒரு ஊர்வலம் இஸ்ரேலிய எம்பஸிவரை. ரொம்ப அமைதி, 50 வீதம் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், ஒரு தடியடி கிடையாது. யாரும் இதுவரையும் பீற்றிக் கொள்ளவில்லை இத்தனை லட்சம் மக்கள் வந்தார்கள் என்று. நிச்சயம் நீர் குடும்பத்துடன் வரவேண்டும் என யாரும் யாரையும் மிரட்டவுமில்லை. அலைகடலென மக்கள்! ஆர்ப்பரித்தது தமிழ் உறவுகள்!! மலைத்தது பிரிட்டிஷ் அரசு!!! என எங்குமே எந்த துண்டுப்பிரசுரமுமில்லை. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதெல்லாம் கறிக்குதவாது. சைலன்ட் கொஞ்சம் சமயோசிதம்.
புலிகள், புலிகள் என சொல்லிக்கொள்பவர்கள் கோசங்களை மாற்றி, ஆட்களை மாற்றி, புதியதொரு தோற்றத்துடன் வெளிவந்து , முதலில் உங்களால் பணயம் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் அந்த மனிதப் புனிதர்களை மூச்சு விட வைத்துவிட்டு; பின்னர் மற்றவர்களுடன் கைகோர்த்து ( கொஞ்ஞம் கஸ்டமான விடயம்தான். இப்போது எல்லோருமே தண்டல்காறர்கள்) ஐயா செல்வநாயகம் அவர்கள் தனது கடைசிக்காலத்தில் வாயில் உமிழ் நீர் வழிய, வழிய சொல்லி வழி மொழிந்து விட்டுப் போன உரிமையின் ஒரு பங்கை முதலில் பெறப்பார்ப்போம். இல்லை 'வீ ஆர் டிபறன்ட் புறம் அதர் பீப்பிள்'என்று வழி மொழிவீர்களானால் !?
எல்லோருடைய கடவுள்களும்
எங்கே இருக்கின்றார்கள் என
எனக்குத் தெரியாது ஆனால்
என்னுடைய கடவுள்
ரஷ்யாவில்
லெனின் கிராட்மைதானத்தில்
செத்துக்கிடக்கிறார் என்று ஈழத்து சித்துக்கவிஞன் ஒருவன் எழுதியது போல் இன்னொரு பித்துக்குளிகவிஞன் எழுதிவிடுவான். பனங்கள்ளு அடித்து விட்டே இப்படி எழுதியவர்கள்; இப்போது வொட்காவை வெறும் வயிற்றுடன் அடித்துவிட்டு என்னென்னவோ எழுதுவார்கள். உலக நாகரிகம் சொல்லித்தந்த லெனினையே மொத்தமாக விலை பேசி விற்ற உலகமிது. (கோர்ப்பச்சேவ் மன்னிப்பாராக )
ஒன்றுமே கெட்டு குடிமுழுகிப்போய் விடவில்லை. சிறிலங்காவில் பாரிய பிரச்சனை இருப்பது உலகிற்கே தெரியும். அது இப்போதுதான் தோன்றியுள்ளது போல் புதியதம்பிகள் இப்போது
சேவல் கணக்காக கொக்கொரக்கோ போடுகின்றனர். உங்களால் ஆக்ரோசமாக விரட்டப்பட்ட
நாங்களும் அன்று அமைதியாகத்தான் வெளியேறினோம். அந்த எல்லாம் வல்ல இறைவன்
எங்களுக்கும் ஐ.நா.வுக்கு அருகிலும், ஐ.எம்.எப்.க்கு அருகிலும், பாராழுமன்றங்கழுக்கு அருகிலும், ஐ.சி.ஆர்.சி, யு.என்.எச்.சி.ஆர்.போன்ற பாரிய நிறுவனங்களுக்கருகிலுமுள்ள குட்டிக் குட்டி காபி சொப்பிலும், உணவகங்களிலும் வேலை பெற்றுத் தந்துள்ளார்.இவ் அலுவலகங்களிலிருந்துநிறைய அதிகாரிகள் காபி, டீ குடிக்க இங்கு வருவர். இப்போது நீங்கள் ஒண்ணரை லட்சம் பேரை வைத்து செய்ததை நாங்கள் தனித்தனி ஆட்களாக 1991இலிருந்து செய்து கொண்டிருக்கின்றோம். செய்வோம். மிக மெதுவாக நிதானமாக ஒவ்வொரு வெள்ளையனின் காதுக்குள்ளும் வேத மந்திரமாக உண்மைகளை,உண்மையாக கூறியுள்ளோம். அப்போது உங்கள் துதிபாடும் தம்பிகள் கட்டுநாயக்காவில் இவ்வளவு, வவுனியாவில் அவ்வளவு என என்னன்னவோ சொல்லிப்பிதற்றிக் கொண்டிருந்தனர். பணமறவிட்டுக் கொண்டிருந்தனர். இப்படி ஒரு 'கல்குலேற்றிவ் றிஸ்க்'ஐ சிங்கள அரசு எடுத்தால்!? விலை மதிக்க முடியா அந்த உயிர்களுக்கு யார் பதில் சொல்வது? என கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. இந்த உங்களின் பாரிய தோல்விக்காக நாங்கள் சந்தோஷப் படப்போவதில்லை. மெலியாரை வலியார் கொன்றால்; வலியாரை தெய்வம் கொல்லும் என்பர். இதில் யார் மெலியார் ? யார் வலியார் என்று இப்போது கணக்குப் பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு புதர்களுக்குள் இருந்து பூதங்கள் கிளம்பும் வரை.....
இஸ்லாமிய ஆட்சியாளர் ( அலி றலி என நினைக்கின்றேன்) ஒரு முறை யுத்தத்திற்குச் செல்கின்றார். வாள் சண்டை. ஒரு எதிரியுடன் போரிடுகின்றார்.எதிரி கீழே விழுந்து விட்டார்.
அவரை வெட்டுவதற்கு இவர் வாளை உருவுகின்றார். அப்போது ளூகீழே விழுந்த அவர் ஆட்சியாளரின் முகத்தில் காறி உமிழ்கின்றார். அவர் காறி உமிழ்ந்ததும் இவர் அவரை
வெட்டுவதை நிறுத்திவிட்டார். இதைப் பார்த்த இவரது படையினர் ஏன் அவரை வெட்டவில்லை, கொல்லவில்லை என கேட்கின்றனர். அவருக்கு என் மேல் ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கும் போல் இருக்கிறது. அதனால்தான் காறி உமிழ்ந்துள்ளார்.அதனால் நான் வெட்டவில்லை என்றாராம்.
இப்படியானஒரு யுத்த தர்மத்தைத்தான் வன்னி மக்களும் 'தலைவர் செய்வார்'என அடம்பிடிப்பவர்களும் இப்போது எதிர்பார்க்கிறார்கள்.அண்மையில் ஜேர்மனியில் ஒரு கருத்தரங்கு நடந்தது. ஒரு பர்வையாளராக தற்செயலாக அங்கு சென்றிருந்தேன். நிறைய விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.மற்றவர்கள் எவரையும் பேசவிடவில்லை. பேசினாலும் ஆயிரம் குற்றம்,குறை கூறிக்கொண்டிருந்தனர்.இதில் ஒரு தம்பி திருக்கோணமலை சொந்த ஊர்.அப்பா யாழ்ப்பாணம், அம்மா திருகோணமலை.சுத்தமாக தமிழ் தெரியாது. ஜேர்மன் மொழிதான் பேசுகிறார். நாங்கள் செய்வதொன்றுதான் சரி. மற்றய மொத்த தமிழனும் செய்வது தேசத்துரோகம். எவரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். தலைவர் கட்டளை இட்டுவிட்டார். இன்னும் என்னன்னவோ.. ..
நீங்கள் யார் எனக்கேட்டார். நான் ஒரு முஸ்லீம் ஒரு பிரண்டுடைய திருமணத்துக்காக பிரான்சிலிருந்து வந்த நான் என்றேன். என்னை பரிதாபமாகப் பார்த்துவிட்டு எங்கட போராட்டத்தை பற்றி உமக்கு ஒன்றும் புரியமாட்டாது என கூறி விட்டு நகர்ந்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது தகப்பனை எனக்கு நன்கு தெரியும். 1982ஆம் ஆண்டு திருகோணமலை 10ம் நம்பரில் உள்ள சிங்களமீன் வியாபாரிகளுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பிரச்சனை வந்து; அவர்கள் துப்பாக்கிகளைக்காட்டி மிரட்டிக் கொண்டிருக்க எங்களிடம் ஒன்றுமே இல்லையே என தமிழர்கள் விழித்த போது; 100 மைல்களுக்கப்பால் இருந்து பென்சில், அழிறப்பர், கொப்பி, புத்தகம், கொம்பாஸ் பெட்டி எல்லாம் கொண்டு போய் கொடுத்த சங்கதி அந்த குட்டித்தம்பிக்கு தெரிய வேண்டிய அவசியமில்லைதான்.
ஆனால் இப்போது யுரோப்பில் இருந்து கொண்டு இப்போராட்டத்தை குழப்புவதே இவர்களைப் போன்றவர்கள்தான். முதலில் உள்ளுக்குள் களை எடுங்கள்! கதைக்கக் கற்றுக் கொடுங்கள்! கரியவளம் என்றால் என்ன ? துத்த நாதத்திற்கு கெமெஸ்ட்றியில் என்ன குறியீடு? குங்குலியத்தின் பயன்கள் என்ன ? அமிழ்தண்டூர்தி எத்தனைகால் மிருகம் ? எனக் கேட்டு எழுத்தறிவித்து களத்துக்கோ பிரச்சாரத்துக்கோ தயார்படுத்துங்கள்! ரம்போவும், ஜேம்ஸ் போண்ட்டும் பெரிய சம்பளம் வாங்குபவர்கள். அவர்களை வெள்ளித்திரைகளில் ரசிப்பதுடன் விட்டுவிடச் சொல்லுங்கள். உலகின் முகடு என்று சொல்லுகின்ற அமெரிக்காவே சைனாவுக்கு ரியுஷனுக்கு ஆள் அனுப்புகின்றார்கள்.
யாருக்கும் எதற்குமே நேரமில்லை. யுரோப்பில் வாழும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி எடுப்பதே பெரிய பாடாகியுள்ளது. இப்போது புதிதாக வன்னி நிலவரம் என்ற மரணக்குண்டு. முருகதாஸின் முத்துக்குழிப்பின் பின்; அகதிகள் மேல் உள்ள பரிதாபப் பார்வை வேறு உருவம் எடுக்கும் போல் தெரிகின்றது. எங்களை விடுங்கள் நாங்கள் வாழ வந்தவர்கள் யாரையும் ஆள வரவில்லை. ஆளவும் ,ஆட்டவும் இன்னும் நினைக்கும் உங்கள் அபிமானிகள்தான் பாதிக்கப்படுவார்கள். இதை இங்கு ஏன் சொல்ல வருகின்றேன் என்றால் முஸ்லீம்களும்( அக்பர்),பௌத்தர்களும் (அசோகன்) நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆளவிட்ட ஹிந்துக்கள் பிராமணர், பிராமணரல்லாதவர் என மனு நீதி சாஸ்திரங்களைக் கூறி இந்துக்களை தொடர்ந்து ஆளவே விடவில்லை என்பதையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!
ஓன்று பட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை உணருங்கள்! உணர்த்துங்கள்!
உங்களால் அனைத்தையும், அனைத்தையும் இழந்து இறுதியில் மகனையோ, மகளையோ இழந்த வன்னித்தாயொன்று பிணத்தை மடியில் இருத்திக்கொண்டு அல்லது கல்லறையில் தலைவிரிகோலமாக விழுந்து; இறைவனுக்கு பிடித்த மொழியில்
'அஸத்தோ மஹ்
ஸற்கவயாஹ்
ஸமஸோமாஹ்
ஜோஸிற்கமயாஹ்' என அறம் பாடியிருப்பாளோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் ரூபவாஹினி றிப்போர்ட்டர் சமன் குமார ராம விக்கிரமவிக்கும், ஐ.ரி.என்.றிப்போர்ட்டர் சமில் ஆனந்தவுக்கும் புதுக்குடியிருப்பு பங்கருக்குள் என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது. பத்தினிகள் தொடர்ந்து பதுங்கியிருக்கமாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவராக சாண் என்ன முழம் என்ன எனப் புறப்பட்டால் அகிலம் தாங்காது. அல்லாஹ் அக்பர்.VIII
0 comments :
Post a Comment