Thursday, October 23, 2008

இந்து குருமாருக்காக ஒதுக்கப்பட்ட விடுதி வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக புகார்.

நடவடிக்கை எடுக்குமாறு மட்டு. இந்து நலன்புரிச் சங்கம் கோரிக்கை.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்து குருமாருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி தற்போது களஞ்சிய சாலையாகவும், வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து குருமார்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். எனவே அவர்களின் நன்மை கருதி இந்து குருமார் விடுதியை மீண்டும் இயங்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு மட்டக்களப்பு இந்து நலன்புரிச் சங்க செயலாளர் கதிர். பாரதிதாசன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் க.முருகானந்தந்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்விடுதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதால் இந்து குருமார் அங்கு தங்கி சிகிச்சை பெற முடியாமலுள்ளது. அவர்கள் வேறு விடுதிகளில் தங்க வைக்கப்படும்போது பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மட்டு. போதனா வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதியை மீண்டும் திறக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கு தனியான விடுதி வசதி செய்யப்பட்டிருந்தது. எனினும் கடந்த பல வருடமாக இவ்விடுதியும் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com