Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Thursday, May 14, 2020

சுமந்திரனின் சர்ச்சைக்குரிய செவ்வியின் தமிழாக்கம் இதோ !

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள் ஊடகவியலாளர் ஒருவரின் யுரியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் வியாக்கியானங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எந்த வகையில் தமிழினத்துரோகமாகின்றது என்பதனை கீழுள்ள மொழிபெயர்ப்பை கொண்டு வாசகர்கள் தீர்மானிக்க முடியும். மொழி பெயர்த்தவர் அஜீவன்

சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரைத் தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அவர்கள். வணக்கம்

சுமந்திரன்: வணக்கம்

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்க முக்கியக் காரணம் என்ன?

சுமந்திரன்: உண்மையான காரணம் தான், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம் உள்ளது. அதைச் சரி செய்வதற்காக 1949 இல் தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என ஆகியுள்ளது.

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பகுதியா?

சுமந்திரன்: இல்லை விடுதலைப் புலிகள் உருவானது 1970 களில், எங்கள் கட்சி உருவானது 1949இல்.

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தைக் கூட்டியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்?

சுமந்திரன்: இல்லை

சமுதித்த : பிரபாகரன்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்குகிறார். அதில் சம்பந்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சுமந்திரன்: இல்லை

சமுதித்த : நீங்கள் சொல்ல வருவது விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகவில்லை என்றா?

சுமந்திரன்: அப்படி உருவானதாகச் சொல்ல முடியாது. 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானபோது போர் நிறுத்தம் ஒன்று இருந்தது. அந்தக் காலத்தில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது. அப்போது விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருந்தது. அரசும் அப்போது விடுதலைப் புலிகளோடு பேசிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது.

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானபோது 7 கட்சிகள் இருந்தன . இப்போது இருப்பது மூன்று மட்டுமே புளொட் – டெலோ மற்றும் தமிழரசுக் கட்சி மட்டுமே இப்போது இருக்கிறார்கள்?

சுமந்திரன்: இப்போது மூன்று கட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கு கட்சிகளில் ஒன்றாக தான் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருக்கிறது. காலத்துக்குக் காலம் சில கட்சிகள் உள்ளே வருகின்றன. சில கட்சிகள் வெளியே போகின்றன.

சமுதித்த : ஆனந்த சங்கரி அவர்களும் இந்தக் கட்சியில் இருந்தார்கள். பாசிசவாதிகளோடு என்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்றே அவர் வெளியே சென்றார்?

சுமந்திரன்: ஆனந்த சங்கரி அவர்கள் இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியில். அந்தக் கட்சி தான் தமிழ்த் தேசிய கூட்டமைக்குள் இருந்தது. சமஷ்டிக் கட்சி அப்போது இருக்கவில்லை. ஆனந்த சங்கரி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒரு வழக்கை தொடுத்து செயற்பட்ட போதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அவரையும் வெளியேற்றப்பட்டு சமஷ்டிக் கட்சி உள்ளே வந்தது

சமுதித்த : விக்னேஸ்வரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அப்படி வெளியேறிய அனைவரும் உங்கள் மேல்தான் குற்றம் சுமத்துகிறார்கள்.

சுமந்திரன்: ஆம்! இரு சாராரும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். இன வாதிகளாக தன்னை காட்டிக் கொள்ளும் விக்னேஸ்வரன் அவர்களும், ஆனந்தி சசிதரன் அவர்களும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். அதேபோல தேசிய நீரோட்டத்தில் இருக்க வேண்டுமெனும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்

சமுதித்த : அவர்கள் , உங்கள் கட்சியை ஐக்கிய தேசிய கட்சியின் வாலில் தொங்க வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

சுமந்திரன்: அப்படி எதுவும் இல்லை. 2015 இல் நாங்கள்தான் ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொல்லி, சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களை கொண்டுவந்து ஜனாதிபதி தேர்தலில் நிற்க வைத்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க உதவினோம். அது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாம் கொடுத்த ஆதரவாக ஒருபோதும் கருதமுடியாது

சமுதித்த : தெளிவாகச் சொல்லுங்கள்… தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மையான தலைவர் எம் ஏ சுமந்திரனா? அல்லது சம்பந்தனா?

சுமந்திரன்: சம்பந்தன்தான்

சமுதித்த : அது வெளியில் தெரியும் பார்வை. உண்மையான தலைவர் யார்?

சுமந்திரன்: உண்மையான தலைவரும் சம்பந்தன் அவர்கள்தான்

சமுதித்த : தமிழ்த் தேசிய கூட்டமைப்பை செயல்படுத்துவது சுமந்திரன்தான் என்று நான் நேரடியாக சொன்னால்!

சுமந்திரன்: இல்லை அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதை மறுதலிக்கிறேன். எனது செல்வாக்கு அதற்குள் இருக்கிறது. அதை நான் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்ல முடியாது.

சமுதித்த : அதாவது நீங்கள் தலைமைக்கு அழுத்தங்களை கொடுக்கிறீர்கள்

சுமந்திரன்: சம்பந்தன் அவர்கள் எல்லா விடயத்திலும் என்னிடம் ஆலோசனை பெற்றுத்தான் சில வேலைகளை செய்கிறார்.

சமுதித்த : அப்படியென்றால், நீங்கள் உத்தியோகபூர்வமற்ற தலைவர் என்கிறேன்.

சுமந்திரன்: அப்படி இல்லை . நான் சொல்லும் அனைத்து ஆலோசனைகளையும் அவர் ஏற்பது இல்லை. அவர்தான் இறுதி முடிவை எடுக்கிறார்.

சமுதித்த : அப்போதிருந்த இந்தத் தலைவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு பயந்து இருந்தார்கள். பிரபாகரனுக்கு பயந்து இருந்தார்கள். அதனால்தானே விடுதலைப் புலிகளுக்காக இந்த அரசியல் கட்சிகள் செயற்பட்டன.

சுமந்திரன்: அப்படி சொல்ல முடியாது. 2001இலிருந்து 2004 வரையிலான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளோடு இணைந்து செயற்பட்டார்கள். அந்த நேரம் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளோடு பேசிக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது.

சமுதித்த : எம். ஏ. சுமந்திரன் இனவாதியா?

சுமந்திரன்: இல்லை! இனவாதி இல்லை

சமுதித்த : நீங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனக்குழுக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

சுமந்திரன்: ஆம்! அப்படியான அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் எனும் கடும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.

சமுதித்த : உங்களுடைய சில கருத்துக்களை பார்க்கும்போது நீங்கள் ஓர் இனவாத கருத்தியல்வாதி போல எங்களுக்கு தெரிகிறது

சுமந்திரன்: அப்படியான எந்த ஓர் அறிக்கையையும் உங்களால் காண்பிக்க முடியாது.

சமுதித்த : உங்களுடைய உண்மையான அரசியல் தலைவர் யார்?

சுமந்திரன்: இன்றைக்கு என்னுடைய அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்கள்

சமுதித்த : நீங்கள் 2010இல் ஒரு வழக்கறிஞராக அரசியலுக்குள் தேசியப்பட்டியலின் ஊடாக பிரவேசிக்கிறீர்கள். நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்காக வாதாடி , காணாமல் போனவர்களுக்காக வாதாடி , இப்படி புலிகள் சார்பான ஒரு ஈர்ப்பை எடுத்துக் கொண்டுதான் நீங்கள் அரசியலுக்குள் வருகிறீர்கள்.

சுமந்திரன்: அது விடுதலைப் புலிகளுக்காக என்று யாரும் சொல்ல முடியாது. நான் சிவில் வழக்குகளை வழக்காடும் ஒரு வழக்கறிஞர். அதனால் நான் கிரிமினல் வழக்குகளை வாதாடவில்லை. ஒன்றிரண்டு வழக்குகளில் வாதாடி இருக்கிறேன். 90களில் நான் இந்த தொழிலில் ஈடுபட்டேன். அந்தக் காலத்தில் நான் PTA வழக்குகளுக்காக ஜேவிபி தொடர்பாக வழக்காடியுள்ளேன். அதனால் விடுதலைப் புலிகளுக்காக நான் வழக்காடி நின்றதாக யாரும் சொல்ல முடியாது.

சமுதித்த : 2015இல் 58,000 வாக்குகளை பொதுத் தேர்தலில் பெறுகிறீர்கள். அதாவது நீங்கள் ஒரு பிரபல்யமான ஒரு மனிதர். ஜேவிபிகாக மட்டும் வாதாடி நீங்கள் 58,000 வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற முடியாதுதானே?

சுமந்திரன்: பெறமுடியும். அந்தக் காலத்தில் நான் ஜேவிபியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் சிவப்பு சட்டை அணிந்து மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். எங்கள் மக்கள் அப்படிப் பார்ப்பவர்கள் அல்ல.

சமுதித்த : உங்களுடைய சித்தாந்தம் அதாவது அரசியல் இருப்பது ஜேவிபி உடனா? அப்படியானால் நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள்?

சுமந்திரன்: ஜேவிபியோடு கருத்தியலாக அல்ல. அப்போதைய அரசுக்கு எதிராக ஜனநாயகப் போராட்டமொன்றை நடத்தினோம். அதற்கு ஜேவிபியும் இணைந்தனர். அதுவும் எம்மோடு கைகோர்த்து செயற்பட்ட ஓர் அமைப்பு.

சமுதித்த : அப்படியானால் அநுரகுமார திசாநாயக்க தானே உங்கள் அரசியல் தலைவராக முடியும்?

சுமந்திரன்: அப்படி ஒன்றும் இல்லை . நான் எல்லா கட்சிகளுடன் இணைந்து வேலை செய்ய விருப்பமாக இருக்கும் ஒருவன்.

சமுதித்த : யாழ்ப்பாண மக்கள் சொல்கிறார்கள் வாக்குகளைப் பெற்றதற்கு பிறகு சுமந்திரன் அந்தப் பக்கமே வரவில்லை என்கிறார்கள்?

சுமந்திரன்: அப்படி யாரும் சொல்லவில்லை

சமுதித்த : சுமந்திரன் இப்போது எங்கே அரசியல் கைதிகளை பற்றிப் பேசுகிறார்?காணிகளை பற்றி பேசுகிறார்? காணாமல் போனவர்களை பற்றி பேசுகிறார்? தேர்தல் குறித்தும் அவசரகாலச் சட்டம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார் என்கின்றனர்.

சுமந்திரன்: இவை குறித்து பேசியது நான் என்று அவர்களுக்கு தெரியும். அதேபோல பல அரசியல் கைதிகள் வெளியே வரவும் நான் வேலை செய்திருக்கிறேன். காணிகளை விடுவிக்கவும் நான் வேலை செய்திருக்கிறேன். அவை அவர்களுக்கு தெரியும்.

சமுதித்த : இன்னும் விடுவிக்க வேண்டிய அரசியல் கைதிகள் இருக்கிறார்களா?

சுமந்திரன்: ஆம்… 70 பேர் அளவு இருக்கிறார்கள்

சமுதித்த : காணி விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி அடைகிறீர்களா?

சுமந்திரன்: மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் 80% ஆன காணிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றன.

நேர்காணலின் முழுவடிவம்




Read more...

Monday, April 1, 2019

5 தசப்பங்களுக்கு முன்னர் மருதானை புகையிரத நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட உடுவில் யுவதியின் கதை கேளீர்.

இலங்கையிலே இன்று பல்வேறு வகையான கடத்தல்கள் தொடர்பாக பேசப்படுகின்றது. சேகுவரா கலவரத்தை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொட்டு அண்மையில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் அரசியல் இருப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் நிலுவையில் நிற்கும் கடத்தல் வரை நாம் இடைவிடாது பேசிக்கொண்டிருக்கின்றறோம்.

இந்நிலையில் இற்றைக்கு சுமார் 5 தசாப்தங்களுக்கு முன்னர் தான் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து உடுவில் பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரை கடத்திச் சென்ற கதையை கூறுகின்றார் லக்ஷ்மன் பெரேரா.

சிங்களமொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு மொழிபெயர்ப்பு கீழே.



நாம் இன்று சமாதானம் ஒற்றுமை தொடர்பில் பேசுகின்றோம். நாங்கள் இந்த நாட்டிலே 50 வருடங்களுக்கு மேலாக வாழுகின்றோம். எனது மனைவி ஒரு தமிழர். அவர் யாழ்பாணத்தில் உடுவில் பிரதேசத்தை சேர்ந்தவர். நான் பதுளைப் பிரதேசத்தை சேர்ந்த சிறந்ததோர் பௌத்த சிங்கள குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் எங்கள் இருவரிடையேயும் உருவான நட்பானது காதலாகமாறி நாம் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டோம்.

இச்சந்தர்ப்பத்தில் எங்களுக்கு இரு பகுதியினரும் இல்லாது போனார்கள்.

என்னுடைய அக்கா என்னை பார்த்து „அடேய் உனக்கு சிங்களப் பெண்கள் கிடைக்காததாலா தமிழிச்சி ஒருத்தியை கட்டினாய்" என்று கேட்டார். ( எனது இருதயத்திற்கு எவ்வாறிருந்தது என நெஞ்சில் கைவைக்கின்றார். )

அதேநேரம் எனது மனைவியின் அண்ணர் ஒருவர் அவரை அடித்து ஒரிடத்தில் மறைத்து பூட்டி வைத்தார். ஆனால் அவருடைய அம்மா „அந்த சிங்கள இளைஞன் உன்னை கனித்துக்கொள்வானா" என்ற ஒரே ஒரு வினாவை மாத்திரம் கேட்டிருந்தார். அதற்கு அவர் „ஆம்" என்ற பதிலை அளித்ததுதான் தாமதம், அம்மா யாழ்தேவியில் ஏறி கொழும்பு வருவதற்கு அவரின் கையில் பணத்தை கொடுத்தார். அங்கே அயலவர்கள் குழப்பி விட்டார்கள், அத்துடன் இங்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அவர் வந்து இறங்கும்போது பிடித்துக்கொள்வதற்கு உறவினர்கள் நிரம்பி விட்டார்கள்.

அவ்வேளையில் மருதானை ரயில் நிலையத்திற்கு சென்ற நான் அவரை அந்த நிலையத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு ஒழித்தோடிச்சென்று நுகேகொடைக்கு அப்பால் உள்ள பிரதேசமொன்றில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தினோம்.

பின்னர் இருதரப்பினரும் எம்முடன் இணைந்து கொண்டார்கள். அவர்கள் இப்போது என்னை மிகவும் நேசிக்கின்றார்கள். முன்னர் இருந்ததிலும் பார்க்க இப்போது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்.

ஆனாலும் இனங்களிடையே ஏற்பட்டுள்ள குரோதம் மற்றும் கசப்பு தொடர்பாக அவர் இவ்வாறு விவரிக்கின்றார்.

நான் யாழ்பாணம் செல்லுகின்றபோது எங்கள் குடும்பத்தை சேர்ந்த பிள்ளை ஒன்று எனது மடியில் வந்து என்றும் இருக்கும். ஒரு முறைபோயிருந்தபோது, கண்ணீர் மல்க ஓடிவரும் குழந்தை காலடிகளை மெதுவாக எடுத்துவைத்து மிகவும் அவதானமாக என்னருகில் வந்து நின்றது. அவ்வாறு வந்த குழந்தை என்னிடம் கேட்டது „பாட்டா! நீங்கள் சிங்களவரா' என எனது இதயம் பிழந்தது. அந்தக் குழந்தையின் அன்பு எனக்கு தேவைப்பட்டது. நான் ஆம் சிங்களவன் என்று சொன்னால் அது கிடைக்காது என்பதை அறிந்து கொண்டு இல்லை மகனே நான் தமிழன் என்று பொய் சொன்னேன். அப்போது அந்தக் குழந்தை என்னை கட்டியணைந்து நீங்கள் தமிழா என்று முத்தமிட்டது.

எனவே இது எங்கிருந்து வந்தது வீட்டில் பேசப்பட்ட விடயம் அக்குழந்தையின் காதுகளில் விழுந்துள்ளது. இது கசப்பானது. இந்த கசப்புக்கு வைத்தியம் செய்யப்படவேண்டும்.

இந்த நாட்டிலே அவன் சிங்களவன்
இவன் முஸ்லிம்
அவன் தமிழன் என்கின்ற கசப்புக்கு மருந்தளிக்கப்படவேண்டும்.

ஆகவே இவற்றை செய்யக்கூடியது சகல சமூதாயங்களையும் சேர்ந்த பிரசங்கிகளாலும், மத தலைவர்களாலும் மாத்திரமே. குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். இனம் மதங்களாக பிரிவதால் நாம் அடையப்போவது எதுவும் இல்லை என்ற விடத்தை அவர்களது அடிமனதில் பதியவைக்கவேண்டும்.

நாங்கள் கல்வி கற்கும் காலத்தில் எங்கள் அணியின் தலைவராக சுந்தரலிங்கம் இருந்தான். அவனுக்கு நாங்கள் எல்லோரும் பயம். ஆனால் அவன் எங்கள் எல்லோர் மீதும் அன்பு செலுத்தினால். எங்களுக்கு அப்போது அவன் தமிழன் என்று விளங்கவில்லை.

அந்த விடயம் இன்று இல்லை. இனவாதம் எவ்வாறாவது ஒழிந்து புகுந்து கொள்கின்றது. அது எதற்காக ஒரு சிலரின் சுயலாபங்களுக்காகவேயன்றி நாட்டுக்காகவோ சமூதாயத்திற்காகவோ அல்ல.

எனவே இவ்விடயத்தில் சமயத்தலைவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் சிறார்களில் மனங்களில் இனபேதம், மதபேதம் பதியாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவ்வியடம் மேலிடத்திலிருந்து வரவேண்டும். கீழே இருக்கின்ற மனிதர்களை இவ்விடத்தில் எவ்வித குறையும் கூறுவதற்கில்லை.

இந்நாட்டிலிருக்கின்ற இனவாத பேயை விரட்டி அடிக்க கூடியவர்கள் சமயத்தலைவர்களே என லக்ஷ்மன் பெரேரா நம்புகின்றார். ஆனால் அந்த பேயை ஆட்டுபவர்களே சமயத்தலைவர்களாக இருக்கின்றபோது அது நடைபெறுமா என்பது இலங்கைநெட்டின் கேள்வியாகும்.

ஆகையால் இலங்கையில் இனவாத பேயை விரட்டியடிக்க மக்களே அணி திரளவேண்டும் என்பதும், மக்களை அணிதிரட்ட இன்று இலகுவான சாதனமாக காணப்படும் சமூகவலைத்தலங்களை பயன்படுத்த முடியும் என்றும் இலங்கைநெட் நம்புகின்றது.

இனவாத பேயை விரட்டவேண்டும் என்று நீங்களும் விரும்பினால் பகிருங்கள் இப்பதிவை.

Read more...

Wednesday, July 9, 2014

ஞானசாரர் சொன்னது ஒன்று... செய்தது மற்றொன்று! (நேர்காணல்)

தாங்கள் நிறைவேற்றுகின்ற ஒப்பந்தம் யாருடையது?
யாருடையதாக இருந்தாலும் அன்றிலிருந்து நிறைவேற்றியிருப்பது ஒரே ஒப்பந்தம்தான். அதுபற்றி பொதுமக்கள் நன்கு அறிவர்.

அது என்ன ஒரே ஒப்பந்தம் என்பது?
என்னிடம் ஒப்பந்தம் எதுவும் இல்லை. அன்றிலிருந்து நான் குறித்ததொரு கருதுகோளுடன் எழுந்துநின்றுள்ளேன். எந்தப் பக்கத்தில்தான் நான் இருந்தாலும் என்னுடை கருத்தை நான் வெளிப்படுத்துவேன்.

அமைச்சர் ஒருவர் யாரேனும் ஒருவரைத் திட்டுவாராயின் அவர் ஏதோ ஒரு ஒப்பந்தம் அவருடன் சேர்ந்திருக்கின்றது என்று மக்கள் மனதில் எண்ணப்பாடு தோன்றியுள்ளதே?
ழூ அடுத்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்தவர்களுக்கு தெரியும். 80 களிலிருந்து நான் எப்படி இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் ஒருபோதும் நான் ஒப்பந்தமொன்றில் அடிப்படையில் செயற்படுவதாக நினைக்கவே மாட்டார்கள்.

ஆனாலும் பொதுபல சேனா அமைப்பு அப்படிக் கருதுமே?
இல்லை. பொது பல சேனா அமைப்பினர் அவ்வாறு கருத மாட்டார்கள். ஞானசார தேரருக்கு என்னைத் தெரியும். நான் யாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்பவன் அல்ல என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய கருத்துக்கள் பற்றியும் அவர் அறிவார். கடந்த காலத்தில் சொன்னவை பற்றியும் செய்தவை பற்றியும் நாம் மறந்துவிடுவோம். நாங்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.

எப்போது அப்படிச் சொன்னார்?
இரண்டு வருடங்கள் இருக்கும்…

எதிர்பாராதவிதமாக தாங்கள் பொதுபல சேனா அமைப்புக்கு தற்போது கையை உயர்த்துவது ஏன்?
நான் தொடர்ந்து அவ்வமைப்பு எதிர்ப்புக் காட்டினேன் அல்லவா! அனைத்து அடிப்படைவாத அமைப்புக்களையும் எதிர்ப்பவன் நான். நாங்கள் ஜே.வி.பி அடிப்படைவாதிகளுக்கு எதிராக அச்சமின்றி களத்தில் குதித்தோம். எல்.ரீ.ரீ.ஈ அடிப்படைவாதிகளுக்கு எதிராக எழுந்து நின்றோம். அது முஸ்லிமாக இருக்கட்டும், தமிழர்களாக இருக்கட்டும், சிங்களவர்களாக இருக்கட்டும் எல்லோருக்கும் ஒன்றே. இந்த அடிப்படைவாதத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கி நகருமே தவிர முன்னேற்றம் காணாது.

பொது பல சேனாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க பண உதவி செய்தார் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
அது உண்மையா இல்லை பொய்யா என்று ரவி கருணாநாயக்கவிடம் கேளுங்கள். வேறுமுறையில் சொல்வதற்கு சான்று இல்லை. ரவி கருணாநாயக்க என்னிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அது பொய்யென்று இதுவரை யாரும் வாய்திறக்கவில்லையே? தேரரும் வெவ்வேறான கருத்துக்கள்தான் சொல்லியிருக்கிறார்.

அது எந்தக் காலப் பகுதியில்?
தொடராக ரவி கருணாநாயக்கதான் பண உதவி செய்தார்.

எதிர்க்கட்சி என்பதனால்தான் தாங்கள் அவ்வாறு சொல்கிறீர்களா?
இல்லவே இல்லை. தற்போது இவர்கள் நாட்டுப் பற்றோடு கதைக்கிறார்கள். நாட்டின் மீது அவ்வளவு அன்புடையவர்கள் யுத்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார்கள்? சென்ற ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவில் யாருடன் இருந்தார்கள்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடன்தான்.

அவ்வமைப்பில்தானா?
ஆம்….ஆம்…. அந்த பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர் டிலன்த விதானகே சரத் பொன்சேக்காவிற்காக பாடுபட்டார். யுத்தக் காலப் பகுதியில் ஞானசாரர் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் இருந்தார். இவர்களைப் பார்த்து எப்படி தேசாபிமானிகள் என்று சொல்வது?

இன்றும்கூட ரவி கருணாநாயக்க பொதுபல சேனாவுக்கு பண உதவி செய்கின்றாரா?
கொஞ்சம் நாட்கள் முன்புவரை அப்படித்தான் உதவி செய்தார். அண்மையில்தான் அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்ட முயன்றுவருகின்றார்கள்.

ஆளும் கட்சியினருடன் இருப்பது ஒருபக்கம் இருக்க.. தற்போது ஜனாதிபதியிலிருந்து உயர் மட்டக் குழுவினர் வரை அனைவருடனும் சிநேகிதம் பாராட்டுகிறார்களே…?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இவர்களுக்கு எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அரசாங்கத்தின் ஒரு சிலருடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்று சொல்லத் தெரியவுமில்லை. அதுவரை அவர்கள் ஜனாதிபதியைத் தோற்கடிக்கவே முயன்றார்கள்.

ஜனாதிபதியுடன் தொடர்பில்லை என உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?
ஆம். தெளிவாகச் சொல்கிறேன். ஜனாதிபதியின் எண்ணப்பாடு பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் அவ்விடயம் தொடர்பில் என்னுடன் தனியாகக் கதைத்திருக்கிறார்.

அரசாங்கத்தின் ஒரு சிலர் என்று யாரைத்தான் சொல்கிறீர்கள்? எனக்கு சொல்லத் தெரியவில்லை.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவா?
இல்லை. அவருக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்தானே. பொதுபல சேனாவிடமும் அதனைச் சொல்லியிருந்தார்தானே.

ஆயினும், பொதுபல சேனாவோடு ஏதோவொரு பெரிய சக்தி உள்ளதை அண்மைய செயற்பாடுகளைக் கொண்டு கண்டுகொள்ளலாம் அல்லவா?
பாதுகாப்புப் பிரிவில் ஒருசிலர் இருக்கின்றார்கள்தானே. இவர்களிடம் உத்தரவு பெற்றுக் கொண்டுதான் இப்படிச் செய்கிறார்கள் போலும். பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உதவி கிடைப்பதனாற்றான் போலும் பாதுகாப்புச் செயலரின் பெயரும் இதனோடு இணைக்கப்படுகிறது.

நன்றாக இருக்கிறது. பொது பல சேனா பாதுகாப்புப் பிரிவினருக்கு கட்டளையிடுகிறார்கள்… அவ்வாறாயின்…

பொது பல சேனாவுக்குப் பயந்த நிலை. அவர்கள் சொல்வதைக் கேட்க்க் கூடியவர்கள் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறார்கள்.

ஏன் அப்படி? அது எவ்வாறு ஏற்பட்டிருக்கிறது? அவர்களும் அடிப்படைவாதிகள் என்பதனாற்றானா?

அவர்கள் அடிப்படைவாதிகள் அல்லர். தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக. தேர்ர்களிடம் தங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொள்ள. பட்டம் பதவி பெற்றுக் கொள்ள இவ்வாறு செய்கிறார்கள் போலும்.
அப்படியென்றால், பொது பல சோனாவினர் புலம் பெயர் தமிழ் தலைவர்களுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடுகின்றனர் என எப்படிச் சொல்ல முடியும்?
இணையத்தளங்களிற்குச் சென்றால் அதன் உண்மைத் தன்மையைக் காணலாம். அங்கு தமிழ் தலைமைகளுடன் எடுத்த படங்கள் உள்ளனவே.

அது உண்மை என்று எப்படி நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள்?
எனது நண்பன் ஆனி பியோடொப் மூலமாகத்தான் நாங்கள் அவர்களுடன் தொடர்புகொண்டுள்ளேன். ஆறு நாட்கள் புலம் பெயர் தமிழர்களுடன் உண்டு - பருகி இருந்தேன். நோர்வே அரசாங்கம் தான் அதற்கான தேவைகளை நிறைவு செய்தது.

யார் அந்த ஆனி பியோடொப்?

அவர்தான், என் கீழுள்ள சீனோர் நிறுவனத்தை இலங்கையில் கட்டியெழுப்பியவர். அவர்தான் அந்நிறுவனத்தின் முதல் தலைவர். அவர் நோர்வே நாட்டு முன்னாள் லிபரல் கட்சியின் தலைவர். அதேபோல முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். அந்நாட்டில் அவருக்கு பெருமதிப்புள்ளது. டிலன்த விதானகே தான் இந்த உறவை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஒருநாள் என்னிடம், ஞானசார என்னைச் சந்திப்பதற்கு விரும்புகின்றார் எனச் சொன்னார். எந்தவொரு நபருக்கும் என்னைச் சந்திக்க முடியும் என நான் சொன்னேன். அவ்விடத்தில்தான், ஞானசார தேரர், நானும் இப்போது உங்கள் எண்ணப்பாட்டிலேயே இருக்கின்றேன் எனச் சொன்னார். நோர்வே போய் வந்த்தன் பின்னர்தான் அவர் ஆனி பியோடொப்புடன் வந்து என்னைச் சந்தித்தார்.

ஞானசார தேரரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்? உங்களுடன் எனக்கு எவ்வித தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என நான் சொன்னேன். அரசியல் பிரச்சினைதான் இருக்கின்றது. தாங்கள் என்னுடைய கருத்தை ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றேன். அவ்வாறு கதைத்துவிட்டு 9 மாதங்கள் உருண்டோடிய பின்னர்தான் அந்த முஸ்லிம் அடிப்படைவாதம் தோற்றம் பெற்றது.

எப்படி ஒரேயடியாக அந்த மாற்றம் ஏற்பட்டது?
நானும் ஆனி பியோடொப்பிடம் அதனைத்தான் வினவினேன். தற்போது அவர் நோர்வே ஆதரவுடன் மியன்மாரில் செயற்றிட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். தானும் இதுதொடர்பில் மிகவும் குழம்பிப் போயுள்ளதாக அவர் என்னிடம் சொன்னார். ஞானசார தேரர் தொடர்பாக அல்ல. டிலன்த என்பவர் தொடர்பில்தான் குழப்பமே உள்ளது என்றார்.

உங்களுக்கும், டிலன்த விதானகேவுக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்ததுதானே…? ஆம். அவரின் அனைத்து நிகழ்வுகளுக்கும் விசேட அதிதியாக நான்தான் அழைக்கப்பட்டேன். நாங்கள் இவரை நோர்வே அழைத்துச் சென்றமை தொடர்பில் நோர்வே அரசாங்கமும் திருப்தியற்றிருக்கின்றது. அதனால் தற்போது டிலன்த போன்றோருடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பியோடொப் பின்னாளில் என்னிடம் சொன்னார்.

டிலன்த உங்களிடமிருந்து ஏன் விலகினார் என்ற என் வினாவுக்கு விடை கிடைக்கவில்லையே? அவருக்குள்ள அரசியல் ஒன்றுமில்லை. அவர் சாதாரண அரச உத்தியோகத்தர் மட்டுமே. தாரா த மெல்லின் கீழ் அவர் இருந்தார். அதனால்தான் அவர், “நான் கல்விக்காக பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறேன்” என்று தம்பட்டமடிக்கிறார். தாரா த மெல்லின் கல்விச் சிந்தனைக்கு எதிராக பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வீதிக்கு இறங்கினார்கள். இன்று முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகின்ற இவர்கள்தான் ஆனந்த, நாலந்த போன்ற பாடசாலைகளுக்கு முஸ்லிம் மாணவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கூறினார்கள். நான் அதுபற்றி விமர்சிக்க விரும்பவில்லை. அவ்வாறு முன்பின் முரணாக செயற்படுபவர்கள்தான் இவர்கள். அதற்குத்தான் ஒப்பந்தம் என்று சொல்ல வேண்டும். ஞானசார தேரரின் வழிகாட்டலின்கீழ் சிறந்ததொரு ஒப்பந்தம் இவர் செய்திருக்கின்றார் என்று சொல்லத்தான் தோன்றுகின்றது.

அதாவது, ஞானசாரருக்கு இவை எதுவும் தெரியாது. அவர் வழிகாட்டியாக மட்டுமே இருக்கின்றார்… என்று சொல்கிறீர்களா? நான் அவ்வாறுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் ஞானசாரர் என்னிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வேறொன்றைச் செய்வாரா?

அப்படியென்றால், பொதுபல சேனா அமைப்புக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையே உள்ள தொடர்புதான் என்ன?
அவ்வாறான ஒரு விடயம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கும் சொந்தமானதுதான். எங்கள் நாடும் அதில் அங்கத்துவம் வகிக்கின்றது.

அவ்வாறாயின், ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தை பொதுபல சேனா உபயோகிக்கின்றதே. ரவி கருணாநாயக்க பண உதவி செய்தார் என்பதை தெரிந்து வைத்துள்ள தங்களுக்கு இதுபற்றித் தெரியாதா?
அந்த ஐக்கிய நாடுகள் விவகாரம் பற்றி ஒருவர் என்னிடம் சொன்னார். அந்த டிலன்த ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டமொன்றை பொறுப்பேற்றுச் செய்கின்றார். அந்த செயற்றிட்டத்திற்காக அவர்களின் வாகனத்தை உபயோகிக்கின்றார் போலும். அவ்விடயம் ஐக்கிய நாடுகள் அமையத்திற்கு தெரியாதிருக்கலாம்.

இது தொடர்பில் அங்கத்துவ நாடு என்ற வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?
ஆம்

ஏன் நீங்கள் ஞானசாரரை பட்டை தீட்ட முனைகிறீர்கள்?
அப்படியொன்றும் இல்லை. ஞானசாரர் வெளிப்படையானவர். டிலன்த போன்று மறைந்துள்ள பாத்திரங்கள் தொடர்பில் அரசாங்கமும் ஏனையோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விசப் பாம்பு எது என்பது பற்றி சரிவரத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பணத்திற்காக, பதவிக்காக எதனையும் செய்வார்கள்.

அதாவது, டிலன்த பகுதியினருக்கு அதிக பலம் இருக்கின்றது அல்லவா?
அப்படி ஒரு பலமும் அவர்களிடத்தில் இல்லை.

அவ்வாறாயின், ஞானசாரர் உள்ளிட்ட அமைப்பை நிருவாகிப்பது, போசிப்பது….?
அந்த அமைப்பை வழிநடாத்துவதும், எல்லாப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதும் இந்த டிலன்த என்று அவர்களின் கூட்டத்தார்களே சொல்கிறார்கள். அதற்காக அவர் பெரும் பணத்தை செலவு பண்ணுகின்றாராம். இந்த நபருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகின்றது என்று நான் ஆனி பியோடொப்பிடம் கேட்டேன். அதற்கு அவர், “எங்கிருந்து வருகின்றது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. முதலில் அவரிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை.” எனச் சொன்னார்.

பொதுபல சேனா அமைப்பு உங்கள் வீட்டைத் தகர்ப்பதற்காக வருகிறது என்றொரு செய்தி பரவியது.. அப்படியொன்றும் ஆகவில்லையே?
அதில் எவ்வித உண்மையும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் விதாரன்தெனியே நந்த தேரர் எங்களுக்கு அறியத் தந்தார். எங்கள் இரு தரப்பினருக்குமிடையே பிரச்சினையை ஏற்படுத்த சோடிக்கப்பட்ட வதந்தி என்றும் அவர் சொன்னார்.

யார்தான் அந்தக் கதையை கட்டவிழ்த்து விட்டார்கள்?
எனக்குத் தெரியாது. யாருக்கேனும் அதற்கான தேவை இருக்கின்றது போலும்.

நன்றி - மவ்பிம நேர் கண்டவர் - சாலிக்க விமலசேன (ශාලික විමලසේන) தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Monday, April 28, 2014

BBS இன் அருமந்த காணொளி என்னிடமுள்ளது! என்றாலும் வெளியிட மாட்டேன்! - வட்டரெக்க விஜித்த தேரர்!

ஜாதிக்க பல சேனாவின் பொதுச் செயலாளர் மகியங்கன பிரதேச சபை (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்) உறுப்பினர் வட்டரெக்க விஜித்த தேர்ர் இந்நாட்களில் ஊடகங்களுக்கு நல்ல செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பவர்.

வட்டரெக்க விஜித்த தேரர் சென்ற வாரம் சிறந்த்தொரு நாடகத்தில் நடிப்பது போன்றதொரு காட்சியை நாங்கள் காணொளிகளில் கண்டோம். பொலிஸாரின் உதவியுடன் அவர் ஓடிச் சென்ற காட்சி தொலைக்காட்சி நாடகத்தில் ஓர் அங்கம் போன்றிருந்தது.

அன்று பொலிஸார் அவ்விடத்தில் இல்லாதிருந்தால் நாங்கள் அவர் பற்றிய வேறொரு கதையே கேட்டிருப்போம்…

வட்டரெக்க விஜித்த தேரரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கு நான் பலமுறை முயன்றேன்.. என்னைப் போலவே இன்னும் பல ஊடகவியலாளர்களும் அவரைத் தொடர்புகொள்ள முயன்றிருப்பர்…

ஒருவாறு வட்டரெக்க விஜித்த தேரருக்கு நான் அழைப்பை ஏற்படுத்தினேன்.

கேள்வி - இப்போது உங்கள் உடல் நலம் எப்படி? இப்போது தாங்கள் என்ன செய்கிறீர்கள்?

பதில் - நான் அங்கும் இங்குமாக இருக்கிறேன். எனக்கென்று ஓர் இடமில்லை. என்னைக் கொலை செய்ய இருக்கிறார்கள்.

கேள்வி - அன்றும் உங்களைக் கொலை செய்யப் பார்த்தார்களா?

பதில் - உண்மையிலேயே அப்படியும் இருக்கலாம். பொலிஸார் இல்லாதிருந்தால் என்நிலை அவ்வளவுதான்!

கேள்வி - ஏன் அவர்கள் உங்களுடன் அவ்வளவு கடுங்கோபமாக - குரோதமாக இருக்கிறார்கள்?

பதில் - அவர்களுடைய முக்கிய காணொளி ஒன்று என்வசம் உள்ளது. வில்பத்து சரணாலயத்தில் செய்த முக்கியதொரு விடயம். ஒன்று… என்னை வெட்டி கடலில் போட்டாலும் சரி ஒருபோதும் நான் அதனை வெளியிட மாட்டேன்.

கேள்வி - அவ்வாறானதொரு காணொளி உங்களிடம் இருக்குமானால், அதனை பொலிஸிடம் அல்லது அரசாங்கத்திலுள்ள முக்கிய ஒருவரிடம் கொடுத்தால் அது, நல்லதொரு சாட்சியமாக இருக்குமே?

பதில் - ஐயையோ.. ஒருபோதும் யாரிடமும் அதனை நான் கொடுக்க மாட்டேன்.

கேள்வி - அன்று மகியங்கனை பிரதேச சபைக்குச் செல்லும்போது, ஏற்பட்ட நிகழ்வில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் - என்னவென்று சொல்ல. அந்நேரம் எனக்கு மரண பயம் என்னை ஆட்கொண்டது. இன்னும் சில நிமிடங்களில் நான் மரணிப்பேன் என நினைத்தேன். எனது நல்ல நேரம் பொலிஸார் எனக்குப் பாதுகாப்பளித்தார்கள். எனக்குள்ள மரண அச்சுறுத்தல் பற்றி நான் ஜனாதிபதியிடமும் சொன்னேன். அவர் அதற்குப் பொருத்தமானதொரு வழிவகை செய்வார்…

பொதுபல சேனா தொடர்ந்து எனக்கு பல்வேறு இன்னல்களை இழைத்து வருகின்றது. என்னைப் பற்றித் தெரிந்துகொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அங்கு வருமாறு அழைக்கின்றது. அதேபோல, வெளிநாட்டு ஊடகங்கள் என்னைத் தொடர்பு கொள்கின்றன. நான் ஒருபோதும் தாய்நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். அது நிச்சயம்.

கேள்வி - பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணப்பாடு உங்களுக்கு உண்டா?

பதில் - ஐயோ இல்லை. இப்போது செய்கின்ற உபத்திரவங்களே போதும். எனது அமைப்புப் பற்றித் தெரிந்துகொண்ட பெரும்பான்மை மக்கள் எனக்கு இருக்கின்றார்கள். பொதுபல சேனா இப்போது பீதியுடன்தான் இருக்கின்றது. அவர்களுக்கு எங்களுக்குச் சேர்ந்திருக்கும் சனத்திரள் சேர மாட்டாது. எல்லா இனங்களும், எல்லா மதத் தலைவர்களும் எங்கள் அமைப்பில் சேர விருப்புத் தெரிவித்திருக்கிறார்கள்…. நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

பொதுபல சேனாவைப் போல நாங்கள் மத விரோத, இன விரோத செயல்களில் ஈடுபட மாட்டோம். எனக்கு மரண அச்சுறுத்தல் உள்ளது. நான் பொலிஸில் முறைப்பட்டுள்ளேன். இப்போது பொலிஸ் பாரிய அளவில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

நான் மொஹமட் விஜித்த என்று இங்கு சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்கள். பொதுவேலைகளில் ஈடுபடும்போது, முகத்தில் சேறு பூசுவார்கள். அதில் பிரச்சினை இல்லை.

பொதுபல சேனாவுக்கு எதிராக 12 முறைப்பாடுகள் செய்துள்ளேன். என்னை வெட்டி போடுவதாக சூளுரைத்துள்ளார்கள். முஸ்லிம் தலைவர்கள் என்னுடன் நெருக்கமாகப் பழகுகின்றார்கள். அலவி மௌலானா, அஸாத் சாலி போன்றோர் என்விடயத்தில் மிகவும் கவலைப்பட்டார்கள். அவர்கள் எந்நேரமும் என்னுடம் இருக்கிறார்கள்.

இந்நாட்களில் எனது இரு காதுகளும் மிகவும் வேதனையாக இருக்கின்றது. காரணம் என்ன தெரியுமா? ஊடகங்கள் என்னிடம் கேட்கின்ற வினாக்களுக்கு விடையளித்து விடையளித்து முடிவில்லை.

நாங்கள் பௌத்த மதத்திற்கேற்ப வாழ வேண்டும். குரோதம் இல்லை. அதனால்தான் நான் அந்தக் காணொளியை வெளியிடாமல் இருக்கின்றேன்.

கேள்வி - அந்தக் காணொளியில் அவ்வளவு பெரிதாக என்னதான் இருக்கின்றது?

பதில் - வாகனத்தில் மேலே வைத்துக் கொண்டு சாராயம் குடிப்பது, கிரிக்கட் விளையாடுவது, நடனமாடுவது போன்ற விடயங்கள் அதில் உள்ளன.

என்றும் உண்மையே வெல்லும். ஜாத்திக்க பல சேனா மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்போது பொதுபல சேனா நின்ற இடம் காணாமல் போகும். மகியங்கன ரொட்டவெல விகாரைக்குச் சென்று, என்னைத் தேடி மரண அச்சுறுத்தல் விட்டுச் சென்றுள்ளார்கள். நான் அந்த விகாரைக்கும் பொலிஸ் பாதுகாப்புக் கேட்டேன். எனக்கு பொலிஸ் பாதுகாப்புக் கிடைத்துள்ளது.

நான் மீண்டும் சொல்கிறேன்.. நான் நிலையாக ஓர் இடத்தில் இல்லை. அங்கும் இங்குமாக வாழ்கின்றேன். மரண அச்சுறுத்தல்…. என்று கூறிவிட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சிங்களத்தில் - நோமன் பலிவடன
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நன்றி - திவயின

Read more...

Monday, February 24, 2014

ஆளும் கட்சி வெற்றி (இ)லைக் கட்சியல்ல வெறும் இலைக் கட்சியே! - சாண் நவாஸ்

தென் மாகாண சபைத் தேர்தலில் - மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிடுகின்ற ஒரேயொரு தமிழ்பேசும் அபேட்சகர் வெலிகமையைச் சேர்ந்த சாண் நவாஸ் அவர்கள். அவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிடுகின்றார். அவரை இலங்கைநெற்றுக்காக நேர்கண்டோம்.

நேர்கண்டவர் - கலைமகன் பைரூஸ்

கேள்வி : தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.. தங்களை வெலிகமை மக்களுக்குக்கூட சரியாகத்தெரியாது என்று குற்றச்சாட்டு நிலவுகிறது.. தாங்கள் இதுபற்றி என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

பதில்: இது எனக்கு மட்டுமல்ல, இது எனக்கு மட்டுமல்ல சகல வேட்பாளர்களுக்கும் வரக்கூடிய குற்றச்சாட்டு…அது சில நேரம் காழ்ப்புணர்ச்சியாக இருக்கும். எந்தவொரு அரசியல்வாதியேனும் அரசியலில் குதித்தால் அவரைத் தெரியாது.. அவரைத் தெரியாது என்று குக்குரலிடுவார்கள்…
நாங்கள் இந்த வெலிகமையில் நான்கு பரம்பரையாக இருக்கின்றோம். எங்களைத் தெரியாத யாரும் கிடையாது. புதிதாக வந்தவர்களுக்கு எங்களைத் தெரியாதது சாதாரண விடயம்… பரம்பரையாக இருந்தவர்களுக்கோ.. தொடர்ந்து 30 வருடங்களுக்கு முற்பட்டவர்களுக்கோ எங்களைத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. நீங்கள் சொல்வது போலத் தெரியாது என்பவர்களுக்கு தெரியாமல் இல்லை.. தெரியும்.. அரசியல் என்று வருகின்றபோது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அவர்களாக வலிந்து முன்வைக்கிறார்கள்.. இது சாதாரண விடயம்.

கேள்வி : தாங்கள் முகநூல் வாயிலாக சாண் நவாஸ் என்ற பெயரிலேயே வலம் வருகிறீர்கள்.. விடயங்களைப் பகிர்கிறீர்கள்.. வெலிகமை வாழ் முஸ்லிம்களுக்கு குறிப்பாக மாத்தறை மாவட்ட முஸ்லிம்களுக்கு சாண் நவாஸ் என்ற ஒருவரைப் பற்றித் தெரியாது என்றும்.. அவரது ஊர் எது என்றும் வினா தொடுக்கிறார்கள்…

சிங்களப் பெயர்போல உள்ள இந்தப் பெயர் உங்கள் உண்மைப் பெயர்தானா? அல்லது இதில் ஏதேனும் சூட்சுமங்கள் உள்ளனவா?

பதில்: எனது சொந்தப் பெயர் இம்திஸான் நவாஸ். இங்குள்ள முஸ்லிம்களின் தொகை 15000. வெலிகம தொகுதியை எடுத்து நோக்கினால் இங்கு 91500 வாக்காளர்கள். இதில் 8000 வாக்காளர்கள் முஸ்லிம்கள். ஏனையோர் மாற்று இனத்தவர்கள்.

பெரும்பான்மையினராகிய சிங்களவர்களுக்கு முஸ்லிம் பெயராகிய இம்திஸான் நவாஸ் என்பதை உச்சரிப்பது சற்றுக் கடினம். அதனால்தான் சாண் நவாஸ் என்று என்னை அழைத்துக் கொண்டேன்.. பெயருக்கு முக்கியம் கொடுத்தால் போதுந்தானே.. அது சாண் நவாஸ் என்றாலும் ஒன்று.. இல்லை வேறு எப்படிச் சொன்னாலும் ஒன்று.. அழைப்புக்குத்தானே நாம் பதில் கொடுக்க வேண்டும்.

கேள்வி: தங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ள வாக்காளர்களுக்கு தங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

பதில்: நான் 1999 இல் எனது மாமா நிஸாம் புஷிர்தீன் தேர்தலில் களம் குதிக்கும்போதே நானும் தேர்தலில் கால் பதித்தேன். அன்றிலிருந்து நான் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராக இருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் தென்மாகாணம், மாத்தறை மாவட்டத்திலிருந்து ஒரேயொரு தமிழ் பேசும் வேட்பாளராக இருக்கின்றீர்கள்.. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக இத்தேர்தலில் வெற்றிபெறும் என்ற திடநம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின்மீது இருந்த நம்பிக்கை எல்லோருக்கும் இல்லாமலாகிவிட்டது. தனியாக சிறுசிறு கட்சிகளால் வெற்றிபெற முடியாது போனாலும், சிறுகட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து இத்தேர்தலில் கூட்டணியாகி ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மையடையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்தில் பனிப்போர் நிலவுகிறது… தலைமைத்துவத்திற்காக ஆளுக்காள் கொள்கைப் பிரிவில் இருக்கிறார்கள். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் வெற்றி பெறவே மாட்டாது என்று கூறியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே.. இதுதொடர்பில் தாங்கள் என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

பதில்: மங்கள சமரவீர எதனை அடிப்படையாக வைத்து இதனைக் கூறினார் என எனக்குத் தெரியவில்லை. இதைப்பற்றி அறிந்ததன் பின்னரே என்னால்இந்த கேள்விக்கு விடையளிக்க முடியும்.

கேள்வி: தங்களுக்கு மேலிடத்து விடயங்கள் எதுவும் தெரியாது என்று சொல்கிறீர்கள்… ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிடுகிறீர்கள்… அப்போது அரசியலில் குதிக்கும் தாங்கள் தானுண்டு, தன்பாடுண்டு என்று நின்றுவிடுவீர்களா? வாக்காளர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

பதில்: நான் தேர்தல் அலுவலாக கொஞ்சம் நாட்களாக அங்குமிங்கும் ஓடியாடித் திரிவதால் சரியாக செய்திகள்கூட என்னால் வாசிக்கமுடியவில்லை. மங்கள சமரவீர எதற்காக, எந்த யூகத்தில் அப்படிச் சொன்னார் என்று எனக்கு எதுவும் தெரியாது என்று மீண்டும் நான் சொல்கிறேன்.

தென் மாகாண சபையிலுள்ள 7 ஆசனங்களையும் ஐதேக பெறுவதற்காக நான் என்னலான அனைத்துவிடயங்களை வெகுசீக்கிரம் ஆரம்பிக்கவுள்ளேன். முதலாவது எனது ஊரிலிருந்து நான் பயணத்தை ஆரம்பிக்கிறேன். சகல இடங்களுக்கும் சென்று தற்போதைய நிலைபற்றி குரல் கொடுப்பேன். என் குரல் இறைவன் துணையால் நீண்டு ஒலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கேள்வி: அண்மையில் நடந்த பெரும்பாலான பிரதேச சபை வரவு - செலவுத் திட்டங்களிலும் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியே வந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து, ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தளவு மாத்தறை மாவட்டத்திலேனும் வெற்றியைத் தழுவும் என்று தாங்கள் கருதுகின்றீர்களா?

பதில் : ஆளுங்கட்சியினருக்கு எந்தவகையிலும் இரசகிய வாக்கெடுப்பு நடாத்த முடியாது. காரணம் அரசாங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளே அல்ல. எல்லோரும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் தங்களது வயிறு வளர்ப்பதற்காகவே ஆளுங்கட்சியினருடன் இருக்கிறார்கள். அது வெற்றி இலை அல்ல.. வெற்று இலை. இவர்களுக்கு கட்சியின் மீது எவ்வித அக்கறையும் கிடையவே கிடையாது.

மக்கள் படுகின்ற இன்னல்கள், அவர்களது வாழ்க்கைச் செலவு வீத அதிகரிப்பு, அரசாங்கத்தின் தான்தோன்றித்தன போக்கு, மன்னர் ஆட்சிமுறை போன்றவற்றினால் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும்.. எங்களுக்கு நிச்சயம் வாக்குகள் வந்து குவியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எங்கள் கட்சி அன்று செய்த திட்டங்களுக்கும்.. அரசாங்கம் இன்று மேற்கொள்கின்ற திட்டங்களும் வானும் பூமியும்போல… நாங்கள் தொடங்கியவற்றை இவர்கள் வழிநடாத்திச் செல்கிறார்கள். இவர்கள் ஒன்று செய்தார்கள் நாங்கள் ஆரம்பித்த தொழிற்சாலைகளை இவர்கள் இழுத்து மூடினார்கள்.

கேள்வி: இன்று பாதைகள் அமைப்பதும், நலனோம்பு விடயங்களை மேற்கொள்வதும் அரசாங்கமே… ஆளுங்கட்சியில் ஆட்சிபீடத்தில் இருப்பவர்கள் ஒரு குடும்ப அங்கத்தவர்கள் என்ற கருத்து அவர்கள் மீது குற்றச்சாட்டாக சுமத்தப்படுகிறது.. இருந்தபோதும், மாத்தறை மாவட்டத்திலிருந்து ஐதேகவிலிருந்து தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரே ஒரு தமிழ் பேசும் அபேட்சகராகிய தாங்கள் வெற்றிபெற்றால்…?

பதில்: சாதிப்பது ஒருபுறம் இருக்க… குறைந்தது மாகாண சபையில் என்ன நடக்கிறது என்பது பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 1999 இலிருந்து தமிழ்பேசும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட மாத்தறை மாவட்டத்திலிருந்து மாகாண சபை உறுப்பினராக இல்லை. குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் அண்ணளவாக 32000 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மாகாண சபையில் நடப்பது என்னவென்று கூடத் தெரியாது. அந்த 32000 பேருக்கும் பாராளுமன்றம் செல்வதற்குத் தகுதியும் இல்லை. நான் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது முழுமையாக தமிழ்பேசும் வாக்காளர்களின் வாக்குகளை நம்பியே. வாக்காளர்கள் அனைவரும் தமிழ் பேசும் ஒரே ஒரு வேட்பாளர் என்பதைக் கருத்திற் கொண்டு வாக்களித்தால் நிச்சயமாக மாகாண சபை உறுப்பினராகச் செல்லலாம். அந்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக அமைந்தால் உச்சகட்டமாக மாகாண சபைக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிச்சயமாக நான் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுப்பேன். விசேடமாக தெனியாய போன்ற தோட்டப் பகுதிகளில் கல்வி, கலை, கலாசாரம் எல்லாமே சீர்குலைந்திருக்கின்றது. கொட்டப்பொலவில் மாத்திரம் 4400 தமிழ் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு தமிழ் பேசும் பிரதேச உறுப்பினர் இல்லை. அவர்களின் குரல்வளை அங்கு நொறுக்கப்பட்டுள்ளது. தந்தை வழி அவர்கள் தோட்டத் தொழிலாளிகளாகவே இருக்கப் போகிறார்கள்.

தமிழ் பேசும் மக்களின் ஒரு குரலாக, ஊடகமாக நிச்சயமாக நானிருப்பேன். இதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கொட்டகலை போன்ற தமிழ் பிரதேசங்களுக்காக தேர்தலின் பின்னரும் நான் முழுமையாக என்னாலான பங்களிப்பை வழங்குவேன். அங்கிருந்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பது அவா.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com