Thursday, June 4, 2020

யாழில் டெங்குநோய் பரம்பல் அதிகரிப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்
வடமாகாணத்தில் பொதுவாக வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையின் பின்னரும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் பின்னரும் டெங்கு நோயின் பரவலானது அதிகரிப்பது வழமை. அதேபோன்று இந்த வருடத்தின் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் டெங்குநோய் பரவுவது அதிகரித்து காணப்பட்டது. அதன் பின்னர் அது படிப்படியாக குறைந்து காணப்பட்டது.

தற்போது கடந்த மாதம் பெய்த மழைக்குப் பின்னராக வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோய் பரம்பல் அதிகரித்து செல்வதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் பல இடங்களிலிருந்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற நிலையினை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த வருடத்தில் 2 ஆயிரத்து இருநூறுக்கும் மேலான நோயாளர்கள் டெங்கு நோயின் தாக்கத்தினால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்கின்றது.
இந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டினை சுகாதார பிரிவினர் மட்டும் தனித்து செயற்படுவதன் மூலம் கட்டுப்படுத்திவிட முடியாது. இதிலே பல திணைக்களங்கள் நிறுவனங்கள் பொது மக்கள் அனைவரது பங்களிப்பும் இருந்தால் மட்டுமே தான் இந்த டெங்கு நோயினை வடக்கு மாகாணத்தில் முற்றாக கட்டுப்படுத்த முடியும்.

அந்த அடிப்படையில் யாழ் மாவட்டத்திலே ஜூன் முதல் வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வார காலப்பகுதியில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை தங்களுடைய சுற்றாடலினை துப்புரவு செய்வதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களினை கட்டுப்படுத்த முடியும்.

இந்த டெங்கு நோயிலிருந்து தங்களை பாதுகாக்க முடியும். அதேபோன்று வேலைத்தளங்கள் பொது இடங்கள் பொதுமக்கள் சிரமதான அடிப்படையில் பணியாற்றி தங்களுடைய அலுவலகங்களில் பொது இடங்களினை துப்புரவாக்கி டெங்கு ஒழிப்பினை மேற்கொள்ள வேண்டும்.

இந்த டெங்கு நோயின் கட்டுப்பாட்டுக்காக மட்டுமன்றி சுகாதார நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாக வட மாகாணம் முழுவதிலும் ஒவ்வொரு கிராம மட்டத்தில் கிராம மட்ட சுகாதார மேம்பாட்டு குழு ஒன்றினை ஆரம்பித்திருக்கிறோம். அந்தக் குழுவானது ஆரம்பிக்கப்பட்டு திறமையாக செயற்படும்போது சகல நோய்களுக்குமான கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com