சுமந்திரனின் கருத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ஒரு கீழ்த்தரமான விளம்பரத்தை தேடும் நோக்கிலேயே எம்.ஏ.சுமந்திரன் ஆயுத போராட்டம் குறித்து அவ்வாறு பேசியிருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமந்திரன் தாமாக முன்வந்து கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியினை கைவிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றில் வெளியிட்டிருந்து கருத்து தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்திற்கு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து வெளியிடுகையில்
ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் விரும்பி ஏற்றதல்ல. தவிர்க்க முடியாமல் அது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது.
ஆயுதப் போராட்டத்திற்கு முன்னதாக அகிம்சை வழியில் நீண்ட பல வருடங்களாக நடததப்பட்ட போராட்டங்கள் எல்லாம் ஆயுத முனையில் அடக்கப்பட்டன.
வேறு வழியின்றியே- தவிர்க்க முடியாத வரலாற்று ஓட்டமாகவே ஆயுதப் போராட்டம் உருவானது.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அது காலத்தின் கட்டாயமாகவே பெரும்பாலான தமிழ் மக்களால் உணரப்பட்டது.
ஆயுதப் போராட்டம் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதல்ல. மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்றன ஆயுதப் போராட்டத்திற்கு கருவூட்டின.
பொன்.சிவகுமாரன் முதலில் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார். பின்னர் பல போராட்ட இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன.
பிரபாகரன் அந்த போராட்டத்தை கூர்மைப்படுத்தினார்.
எம்.ஏ.சுமந்திரன் தனது பேட்டியில், சிறுவயது முதலே கொழும்பில் வசிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழலால் அவர் இந்த அரசியல் போக்கை அறியாமல் விட்டிருந்திருக்கலாம்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் போராளிகள் சிறைகளில் சிக்கியபோது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் போன்ற பலர், அவர்களிற்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகினர்.
அவர்களின் குடும்பங்களின் சுகதுக்கங்களை கவனித்துக் கொண்டார்கள். தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டம் பலனற்றதாக மாறி ஒரு அரசியல் பரிணாமமாகவே ஆயுத வழிப் போராட்டம் உருவானது.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து அந்த வரலாற்று ஓட்டத்தில் பயணிப்பவன் என்ற ரீதியில் சுமந்திரனின் கருத்து தவறானது. அவருடைய கருத்தை தமிழர்கள் எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே எனது கருத்து என்றார்.
அத்துடன் ஆயுத போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பாராக இருந்தால் அவர் தமிழரசு கட்சியில் சேர்வதற்கும் தகுதியற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனை கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றில் வெளியிட்டிருந்து கருத்து தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய போதே சுரேஸ் பிரேமசந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment