Wednesday, February 12, 2020

மாணவர்களுக்கு மு.ப. 11.00 மணி - பி.ப. 3.30 வரை திறந்த வெளியில் பயிற்சிகளை வழங்க வேண்டாம் - கல்வி அமைச்சு

தற்சமயம் நிலவும் அதிக வெப்பமான காலநிலை பற்றி பாடசாலை மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம் கல்வி அமைச்சுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது..

மன அழுத்தம் மாரடைப்பு நுரையீரல் நோய் தசைப்பிறழ்வு போன்ற நோய்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது. இதனால். பாடசாலை மாணவர்களை கூடுதலாக நீர் அருந்தச் செய்வது அவசியமாகும். தலைகளை மறைத்தல், குடைகளை பயன்படுத்தல், இலேசான ஆடைகளை அணிதல் அடிக்கடி முகங்களை கழுவுதல் சீனி அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்த்தல் என்பன முக்கியமாகும்.

எனவே, அதிக வெப்பநிலை காரணமாக, பதற்றம், தசை பிடிப்பு, மயக்கம், இதய நோய், நுரையீரல் நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உக்கிரமடைவதோடு, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பிரிவில் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது:

அடிக்கடி நீர் அருந்துதல், சீனி அதிகம் கொண்ட பானங்களை தவிர்த்தல், வெளியில் இருக்கும்போது தலையை மறைத்து தொப்பிகளை அணிதல், வெளியில் நடந்து செல்லும்போது குடையை பயன்படுத்துதல், தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை குறைத்தல், வெளிர் நிற மெல்லிய ஆடைகளை அணிதல், அதிக சூடாக இருக்கும்போது முகம் மற்றும் கைகளுக்கு தண்ணீர் தெளித்தல், நாளின் வெப்பமான நேர இடைவெளியான மு.ப. 11.00 மணி - பி.ப. 3.00 முதல் 3.30 வரை திறந்த வெளியில் அதிக வியர்வை வெளியேறும் உடற்பயிற்சிகளில் ஈடுபடாதிருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் பாடசாலைகளில் போதுமான குடிநீரை வழங்குதல், முடிந்தால் காகித குவளையை எடுத்து வர அறிவுறுத்துதல், குறிப்பாக பாடசாலைகளில் முதலுதவி குழுக்களுக்கு இது தொடர்பில் தெளிவூட்டி, பயிற்சியளித்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தெளிவூட்டுதல், சுகாதார பிரச்சினைகளை விரைவாக அடையாளம் கண்டு, முதலுதவியளித்தல், பிரச்சினையான வேளைகளில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்புதல், உடல் உலர்வதை தடுத்து குளிராக இருக்க வகுப்பறைகளில் நீர் கொள்கலன்களை வைத்தல், வகுப்பறையில் காற்றோட்டம் நிலவ கதவுகள், ஜன்னல்களை நன்கு திறந்து வைத்தல்

சுகவீனமுற்றுள்ள குழந்தைகள் சுகமடையும் வரை பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பது தொடர்பில் பெற்றோர்களை தெளிவூட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடசாலைகளில் முதலுதவிக் குழுக்களுக்கு இதுபற்றி அறிவுறுத்தல் வழங்குவது அவசியமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com