Sunday, October 27, 2019

பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமானால் பதவிகளிலிருந்து விலகுவீர்! CaFFE அமைப்பு ஆளுநர்களிடம் வேண்டுகோள்

ஜனாதிபதி பிரசாரத்தில் மகாண ஆளுநர்கள் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதோடு, அவ்வாறு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டுமானால் தமது பதவிகளிலிருந்து விலகுமாறு மாகாண ஆளுநர்களிடம் கோரிக்கை விடுப்பதாக CaFFE அறிவித்துள்ளது.

தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CaFFE) பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஆளுநர்கள் ஜனாதிபதி பிரசாரத்தில் ஈடுபடுவதை CaFFE கடுமையாக கண்டிக்கின்றது. நான்கு மாகாணங்களின் ஆளுநர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். ஆளுநர்கள் அரசியல் செய்ய விரும்பினால் அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் சுதந்திரமாக செயற்படப்போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தபோதிலும், ஜனாதிபதி அவரது பிரதிநிதிகளாக நியமித்துள்ள மாகாண ஆளுநர்கள் பக்கச்சார்பாக செயற்படுவது ஒரு போதும் நியாயமானதல்ல என, CaFFE தெரிவிக்கிறது.

ஆளுநர்கள் தனது பதவிக்கு முந்தைய 'கௌரவ' பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்கச்சார்பாக அரசியலில் ஈடுபடும் ஆளுநர்கள் தங்களது பதவியிலுள்ள 'கெளரவ' பெயருக்கு இழுக்காக நடக்கின்றனர் எனவும், மனாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மாகாண சபைகளின் ஆட்சி மாகாண ஆளுநர்களிடம் காணப்படுவதனால், மாகாண சபைகளுக்குச் சொந்தமான வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் அரச வளங்கள் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதாக, முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இது தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறும் செயற்பாடு எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது தொடர்பான முறைப்பாடுகளை எமது அமைப்புக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 387 முறைப்பாடுகள் CaFFE அமைப்பிற்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதி மீறல்கள் மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே அவற்றில் பெரும்பாலானவையாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி: 0114341524, தொலைநகல்: 0112 866224, மின்னஞ்சல் info@caffesrilanka.com போன்றவற்றின் மூலம் CaFFE அமைப்பிற்கு தங்களின் முறைப்பாடுகளை பொதுமக்கள் வழங்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பைஷல் இஸ்மாயில் -

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com