Thursday, October 10, 2019

கோட்டாபய நாடு திரும்பியதும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு இதன்போது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.மஹிந்த ராஜபக்ஸவுடன் இந்த விடயம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடியுள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அடுத்த கட்ட கலந்துரையாடலை, தான் நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ள முடியும் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

நேற்று முன்தினம் (08) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றின் போது, எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் உறுப்பினர்களுக்கு இதனை அறிவித்ததாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.மருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றார்.எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com