Thursday, September 5, 2019

மாற்றத்தை விரும்புகின்றவர்கள் ஜேவிபியுடன் கைகோருங்கள் - ரில்வின் சில்வா

மஹிந்த, கோத்தாபய, ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது பிரதிநிதிகளை தோல்வியடையச் செய்து இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் எம்முடன் கைகோர்க்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடந்த 71 வருட கால அரசியல் வரலாற்றை நோக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்பவற்றைக் கூட தங்களால் பாதுகாக்க முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இருதரப்பினரதும் அரசியல் முன்னெடுப்புக்கள் பூச்சியமாகியுள்ளன.

முன்னரைப் போன்றே மீண்டும் இவ்விரு கட்சிகளிலும் கட்சித் தாவல்கள் ஆரம்பித்துவிட்டன. எஸ்பி.திஸாநாயக்க போன்றோர் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை கைவிட்டு அவரையும் கோத்தாபய ராஜபக்ஷவையும் முடிந்த வரை தூற்றினார்கள். தற்போது மீண்டும் அவர்களுடன் இணைந்து கொண்டு கோத்தாவையும், பசில் ராஜபக்ஷவையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் ஒழுக்கம் என்பது சிறிதளவேனும் இல்லை.

எவ்வாறு எஸ்.பி.திஸாநாயக்க போன்றோருக்கு அரசியல் ஒழுக்கம் கிடையாதோ , அதே போன்று அவர்களை சேர்த்துக் கொள்பவர்களுக்கும் அரசியல் ஒழுக்கம் கிடையாது. இது போன்ற ஒழுக்கமற்றவர்களை இணைத்துக் கொள்ளுமளவிற்கு அந்த கட்சியின் நிலைமை காணப்படுகிறது என்றால் , இவ்வாறானவர்களுக்கு எவ்வாறு நாட்டில் ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com