Tuesday, July 2, 2019

பூஜித – ஹேமசிறி ஆகியோரை வைத்தியசாலைக்குச் சென்று விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் லங்கா ஜெயரட்ண உத்தவிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்படி இருவரையும் வைத்தியசாலையில் கைது செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அங்கு வைத்து விசாரணை செய்து வாய்முறைப்பாடுகளை பதிவு செய்தனர். அதன் பிரகாரம் மஜிஸ்ரேட் அவர்களுக்கு அறிக்கையிடப்பட்டதை அடுத்து வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்த பிரதான மஜிஸ்றேட் லங்கா ஜெயரட்ண அவர்களை நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் பாரமெடுக்கப்பட்டுள்ள ஹேமசிறி மற்றும் பூஜித ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈஸ்டர் தினத்தாக்குதல்களை தடுப்பதற்குரிய நடவடிக்ககளை உரியநேரத்தில் மேற்கொள்ளாததன் ஊடாக கடமையை உதாசீனம் செய்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளகியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்ட மா அதிபர் டப்புல டி லிபேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில், இவ்விருவரும் கடமையை தட்டிக்கழித்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுவதாகவும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் அவர்கள் புரிந்திருப்பது மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றச் செயலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்;கு 52 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என ஏஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com