Wednesday, June 19, 2019

யாழில் பொது வீதியை அடைத்து கட்டடம் அமைக்கும் வர்த்தகர். வாய் கண் மூடி நிற்கிறது நகர சபை. மக்கள் வீதிக்கு!

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான சுமார் 100 மீற்றர் நீளமான பொது பயன்பாட்டு வீதியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியிருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகரசபை எந்த நடவடிக்கையும் எடுக்காமை குறித்து வர்த்தகர்களும், பொதுமக்களும் கண்டித்துள்ளனர். மேலும் 10 வருடங்களாக குறித்த வீதி அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டியும் மாநகர

சபை நடவடிக்கை எடுக்காததுடன், தொடர்ந்தும் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றமையை கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை மக்கள் போராட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மேற்படி வீதி அபகரிக்கப்பட்டமை தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல்போனதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதேபோல் வீதி ஒன்று காணாமல்போயுள்ளது.

காங்கேசன்துறை வீதியையும் செம்மாதெரு ஜிம்மா பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட 100 மீற்றர் நீளமான குறித்த வீதி யாழ்.நகரில் உள்ள புடவை வர்த்தகர் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்தப்பகுதியில் வீதி இருந்ததா? எனவும் சிலர் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு ஆதாரங்கள் உள்ளது. குறித்த வீதி யாழ்.மாநகரசபையின் வரைபடத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் 2016 ஆம் ஆண்டு குறித்த பொது வீதிக்கு அருகில் கட்டடம் கட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கிய அனுமதியில் பொது வீதிக்கு அருகில் என்பது மிக தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
எனவே இதனை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. மேலும் குறித்த வீதி சுமார் 100 வருடங்களுக்கு மேலாக மக்களால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. அதற்கு இங்குள்ள வர்த்தகர்கள் சாட்சியாக உள்ளனர். அதேபோல் 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், இராணுவம் தமது பாதுகாப்பு தேவைகளுக்காக குறித்த பொது வீதியை மூடியது. பின்னர் அவர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தனியார் ஒருவர் குறித்த வீதிக்கு கதவு பொருத்தி ஆக்கிரமிக்க தொடங்கினார். அது படிப்படியாக தொடர்ந்துவந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு பொதுமக்களும், வர்த்தகர்களும் இணைந்து எழுத்து மூலம் குறித்த வீதி ஆக்கிரமிக்கப் பட்டமை தொடர்பாக தெரியப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில் வீதியை அபகரித்தவர்கள் மலசலகூடங்களை கட்டியதுடன், மின் பிறப்பாக்கி ஒன்றையும் வீதியில் பொருத்திவிட்டனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் வீதியை மக்களிடம் பெற்றுக் கொடுங்கள் என கேட்டபோதும் தற்போதைய மாநகரசபையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வருடம் 5 ஆம் மாதம் 29 ஆம் திகதி யாழ்.வர்த்தகர் சங்கம் யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் எழுத்து மூலம் கடிதம் ஒன்றை எழுதி வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து விடுங்கள் என கேட்டிருந்தனர். அதற்கும் நடவடிக்கை எடுக்காத மாநகரசபை நடவடிக்கை வேடிக்கையாக உள்ளது. நாங்கள் கேட்கிறோம் மாநகர சபையின் கட்டளை சட்டம் சாமானிய மக்களுக்கா? வசதி படைத்த வர்த்தகர்களுக்கு கிடையாதா? சாமானிய மக்கள் ஒரு அங்குலம் வீதியை ஆக்கிரமித்தாலும் நீதிமன்றம் வரை செல்லும் மாநகரசபை இங்கே மௌனமாக இருப்பது ஏன்? இந்த வீதி அபகரிப்புக்குப் பின்னால் அரசியல் சூட்சுமங்கள், சிலருடைய சுயலாபங்கள் நிறைந்திருக்கின்றது.
யாழ்.மாநகரசபைக்கு இன்றளவும் வீதியை பூட்டியது யார் என்பது தெரியாது. பாதையில் கட்டடங்களை கட்ட அனுமதி கொடுத்தது யார் என்பது தெரியாது. எனவே சனிக்கிழமை காலை குறித்த வீதியின் முன் பான பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அதில் வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கெடுக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து வியாபாரிகள் சிலரிடம் குறித்த வீதி தொடர்பாக கேட்டபோது 100 வருடங்களுக்கும் மேலாக குறித்த வீதி மக்களால் பயன்படுத்தப்பட்டது. அந்த வீதியை வர்த்தகர் ஒரு வர் அபகரித்தபோதே யாழ்.மாநகரசபைக்கு அதனை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் அவர்கள் அதனை கவனத்தில் எடுக்கவில்லை என்றார்.

இதேவேளை குறித்த வீதியை நேரில் பார்வையிட்டு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அங்கு நின்றிருந்த சிலர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த வீதியில் இப்போதும் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com