Monday, June 3, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - பாகம் 3. யஹியா வாஸித்

மொத்த ஸ்ரீலங்கா சோனவர்களினதும் டேர்ணிங் பாயிண்ட் இது. 1983 ஜூலை கலவரம் முடிந்த பின்னும், 2009 புலிகளை அடக்கி, ஒடுக்கி ஊமை களாக்கியபோதும் சிறிலங்காவில் உள்ள மொத்த சிறு பான்மையினருக்கும், ஒரு செய்தி ரொம்ப தெளிவாகவும், கூர்மையாகவும் சொல்லாமல் சொல்லப் பட்டது.

இது சிங்கள தேசம், இங்கு நாங்கதான் ராஜா, ராணி, மெஜாரிட்டி எல்லாமே, நீங்க ரெண்டு பேரும், இந்த நாட்டுக்கு வாழ வந்தவர்களே தவிர, ஆள வந்தவர்கள் அல்ல. ஹ்ம் புரிஞ்சிக்கோங்க.

புரிஞ்சவங்க புரிஞ்சிகோங்க, புரியாதவங்க புரிஞ்சவங்களுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்றும் சொல்லப்பட்டது.

1971 ,1977 தேர்தல் காலங்களில் தமது வாக்கு வங்கிக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களால் உருவேற்றப்பட்ட அப்போதைய தமிழ் இளைஞர்களும், தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட ஒருசிலரும், தம்மை சுற்றியுள்ள நாடுகளில், பிள்ளைகளையும் கிள்ளி தொட்டில்களையும் ஜாலியாக ஆட்டும், இந்திய அரசியல் கொள்கைவகுப்பு சாணக்கியர்களும், சிங்கள ஸ்ரீலங்கா அரச இயந்திரங்களின்
சிக்னல்களை கண்டு கொள்ளவே இல்லை.

1983 ஜூலை தமிழ் மக்களுக்கு ஒருவகையில் அடியாக இருந்தாலும், பல வகைகளில் அவர்களுக்கு பல கதவுகளும் திறக்கப்பட்டன, உத்தரப்பிரதேசத்தின் மலையடிவாரங்களில் இந்திய இராணுவ ஜவான்களால் தமிழ் இளைஞர்களுக்கு இராணுவ பயிற்ச்சி இந்திராகாந்தி அம்மையாரின் பூரண ஆசியுடன் வழங்கப்பட்டது.

எப்போதுமே தங்களை அதிபுத்திசாலிகள் எனக்காட்டிக் கொள்ளும் வடமாகான மேல்தட்டு வர்க்கமும், அரசியல் சாணக்கியம் பேசி மொத்த தமிழர்களையும் பலிக்கடாவாக்கிய அரசியல்வாதிகளின் சொந்தம் , பந்தம், அடுத்த ஊடு, அல்லியல் ஊட்டுக்காரனுகள் எல்லாம் சந்தோஷமாக அயிரோப்பிய, அவுஸ்ட்ரேலிய, அமெரிக்க நாடுகளை சென்றடைய வழிகள் வகுத்துக்கொண்டார்கள்.

ஆனால் ஸ்ரீலங்கா சோனகர்கள் இவைகளை கண்டு கொள்ளவே இல்லை. இவர்கள் பணத்திலும், வியாபாரத்திலும், எங்கள் அல்லாஹ், நாங்க வான லோகத்தில் இருந்து நேரடியாக இந்த நாட்டுக்கு இறக்கப்பட்டவர்கள் என்ற ஒரு இறுமாப்பிலும் சுற்றிக்கொண்டு திரிந்தார்கள்.

1983 இறுதி மாதங்களில் இந்திய ராணுவத்தால் பயிற்ச்சி அளிக்கப்பட்ட, அந்த தமிழ் இளைஞர்கள், வடகிழக்குக்கு திரும்பி வந்து ஒரு காட்டு காட்டும்வரை. ஸ்ரீலங்கா சோனவனுகளுக்கு ஒண்ணுமே புரியல . கண்ணும் தெரியல.

திரும்பிய தமிழ் இளைஞர்கள் தமது துப்பாக்கிகளை அடிக்கடி முஸ்லிம்களையும் நோக்கி சுட்டு, மிரட்டி, ட்ரயல் பார்த்துக் கொண்டார்கள். அந்த துப்பாக்கி சத்தங்கள் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்படுவது , சிங்கள அரசுகளுக்கும் ரொம்ப ஆரோக்கியமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. வீ டோன்ட் வான்ட் டு வேஸ்ட் அவர் ஒண் புல்லட்.

அந்த தமிழ் இளைஞர்களுக்கு, முஸ்லிம்களிடம் உள்ளகாணிகள், பூமிகள், வயல்வெளிகள், கடைகள், எல்லாமே, தங்களது முன்னோர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப் பட்டது, ஏமாற்றி வாங்கப்பட்டது என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. அது ஒரு வேதமாகவே ஓதப்பட்டுமிருன்தது.

இப்போது அதே தத்துவத்தை முப்பத்தி அயிந்து வருடத்துக்கு பின்னர் தூக்கி பிடித்துக்கொண்டு நம்ம குட்டி தம்பி வியாளேந்திரன் கிளம்பியுள்ளார். பாவம் !!

தமிழ் பேசும், தமிழ் நல்லுலகே அந்தப்பிள்ளைக்கு இந்தமுறை கொஞ்சம் அதிகப்படியாகவே வாக்களித்து, மீண்டும் ஒரு எம்பி ஆக்கி விடுங்கள். அடுத்த பதினைந்து, இருபது வருடத்துக்கு உங்களுக்கெல்லாம் தீனி போடுவார், ஆம் உணர்ச்சித் தீனி போடுவார். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

1983 ஜூலை கலவரத்தின் அதி உச்சமாக, தென் மாகாண சிறைக்கூடங்களில் இருந்த குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட எண்பதுக்கு மேற்பட்ட, தமிழீழ போராட்டத்தில் முன்னணி வகித்த இளைஞர்கள், சக சிங்கள கைதிகளால் அல்லது அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். இதனால் மிச்சம் இருந்த தமிழ் கைதிகள் மட்டக்களப்பு சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள அந்த தமிழ் இளைஞர்களை, மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்டெடுப்போமா என, ஒரு கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர் வடமாகாண தமிழ் இளைஞர்களை பார்த்து கேட்ட போது, அந்த அளவுக்கு நமக்கு ஆயுத பலம் இல்லை எனக் கூறி ஒளித்தோடியவர்கள், மூன்று நாட்களில், அந்த முஸ்லிம் இளைஞரின் தலைமையில், அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்கள் ஆறு பேரின் துணையுடன், அறுபது துப்பாக்கிகள் சேகரித்து வடக்குக்கு செய்தி அனுப்பியதும், கிழக்குக்கு ஓடோடி வந்து, துப்பாகிகளை இரவோடிரவாக எடுத்து சென்று, கிழக்கு மாகாண
இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடன், மட்டக்களப்பு சிறையையும் உடைத்து, இளைஞர்களையும் மீட்டு விட்டு, இந்திய கரையோரங்களுக்கு சென்றதும், ரொம்ப வாகாக வட மாகாண இளைஞர்களின் சாதனை இது என, ஜூனியர் விகடனுக்கும், துக்ளக்குக்கும் பேட்டி கொடுத்து, மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கும், அப்போதே நீங்க வேற, நாங்க வேற என ஆயுத தாரிகள் கோடிட்டு காட்டி விட்டனர், இது புரியாமல் அல்லது தெரியாமல்தான் இருபது வருடத்தின் பின் கருணா என்கின்ற முரளிதரன், கையை சுட்டுக்கிட்டு 2003 களில் கிழக்குக்கு ஓடோடி வந்தார்.

இதில் இன்னும் வேதனையான விடயம், வடமாகான, குறிப்பாக ஆயுத மோகம், பலம் கொண்ட தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கிழக்கு மாகாண இளைஞர்களை இரெண்டாம் பட்சமாக நினைத்தார்களோ, அதைவிட கேவலமாக கிழக்குமாகான முஸ்லிம்களை கிழக்குமாகான ஆயுத பலம் பொருந்திய இளைஞர்களும், மெத்தப் படிச்ச அல்லது பிழைக்க தெரியாத கொஞ்சம் தமிழர்களும் முஸ்லிம்களை கேவலப்படுத்த முனைந்தார்கள்.

எந்த காரணமுமில்லாமல் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் கடைகள் எரிக்கப்பட்டன, வீடுகள் கொள்ளையிடப்பட்டன, பாரியளவில் கப்பங்கள் பெறப்பட்டன, கிழக்கில் உள்ள மொத்த காணிகளும், வயல்வரப்புக்களும் தங்களது, பாட்டன் பூட்டன், முப்பாட்டன் களிடமிருந்து பறிக்கப்பட்டது அல்லது ஏமாற்றி பெறப்பட்டது என அந்த கூட்டம் சொல்லி மகிழ்ந்தது, கூத்தாடியது.

இதில் உலக மகா ஆச்சரியம் என்னவென்றால், 1983 ஜூலை கலவரத்தின் பின், இந்திய அரசு டெல்லியில் வைத்து தமிழ் அமைப்புக்களிடம் இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புங்கள் என்று சொன்னதும், முதல் தகவல் கிழக்கு மாகாணத்துக்குத்தான் சென்றது. அதுவும் ஒரு முஸ்லிம் இளைஞரிடமே சென்றது.

அவர் அந்த தகவலை பொத்துவில் தொடக்கம், திருகோணமலை, கிளிவெட்டி, ரால்குழி வரை போய் சொன்னதாகவும், அய்யோ ராணுவ பயிற்சிக்கா, எப்படி போவது, அதற்கு யாழ்ப்பாணம் போக பணத்துக்கு எங்கு போவது என அனைவரும் ஓடி ஒளித்ததாகவும், பின்னர் அந்த முஸ்லிம் இளைஞர், தனது தந்தையின் கடையில் ஆறாயிரம் ரூபாவை திருடியும், களுவாஞ்சிக்குடியில் எந்த பொதுமகனுக்கும் பாதிப்பில்லாமல் ஒரு திருட்டு தனத்தை செய்தும், பணத்தை திரட்டிக்கொண்டு, எண்பது தமிழ் இளைஞர்களையும், ஒரே ஒரு முஸ்லிம் இளைஞரையும் யாழ் மயிலிட்டி வரை வழியனுப்பி, அங்கிருந்து உத்தர பிரதேசம் செல்ல ஏற்பாடுகள் நடந்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் ராணுவ பயிற்ச்சி பெற்ற முதல் குழுவும் இதுவே ஆகும். பயிற்ச்சி முடிந்து மெட்ராஸ் வந்து இறங்கி, ஓரிரு மாதங்களில் வடகிழக்குக்கு வந்த நமது, மண் மீட்பாளர்கள் முதன் முதலில் அடித்த ஆப்பு ஸ்ரீலங்கா சோனகர்களுக்கே ஆகும்.

இந்த அடிகள்தான் மொத்த சோனவனையும் சிந்திக்க வைத்தது, இதுவரை கடைகளும், வயல்காணிகளும், கடலும், மீனும்தான் தமது வாழ்வு என்றிருந்த முஸ்லிம்கள், மெதுவாக கல்வியில் கவனம் செலுத்த தொடங்கியதுடன், கண்டி, கொழும்பு போன்ற மாநகரங்களையும் நோக்கி நகர தொடங்கினர்.

கிழக்கில் ஒரு பக்கமும், வடக்கில் இன்னொரு பக்கமுமாக முஸ்லிம்களுக்கு அடிவிழ, வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களும், வடகிழக்குக்கு வியாபாரத்துக்கு வருவதை குறைத்துக்கொண்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய பிரேமதாச அவர்கள், முஸ்லிம்களை தமிழர்களிடம் இருந்து கூறு போட சரியான ஆளை கண்டு பிடித்தார். கல்முனையை விட்டு 1980 களில் வெளியேறி கம்பளையிலும், கொழும்பிலும் மாறி , மாறி வசித்துக்கொண்டிருந்த அஸ்ரப் அவர்களை 1987 இல் கூர் தீட்டி கிழக்குக்கு அனுப்பினார்.

யார் ஒருவருக்கு மூன்று மொழிகளும் தெரியுமோ, அத்துடன் அவர் ஒரு வழக்கறிஞருமாக இருந்தால் அவர் ஒரு உலக மகா புத்திசாலி என்ற ஒரு எழுதப்படாத தத்துவம் இந்த வடகிழக்கில் வசிக்கும் மொத்த சனத்துக்கும் இருக்கின்றது.

மொத்த தமிழனையும் இந்த லோயர் சமுதாயம்தான் உலகின் உச்சாணிக்கே அழைத்துச் சென்று, தொபுக்கடீர் என போட்டு வீழ்த்தியது, அதேபோல் நம்மாளும் " நாரே தக்பீர், அல்லாஹ் அக்பர்" என்ற ஒரே ஒரு கோசத்துடன் ரொம்ப ஆரவாரமாக வந்து, முந்தா நாளுக்கு முதல் நாள், மொத்த சோனவனின் மானம் , மரியாதை, தொப்பி, தாடி, பர்தா, குல்லா, சொத்து, பத்து, பட்டம், பதவி, கத்தி, கோடாலி, நகம் வெட்ட வெச்சிருந்த வில்லுக் கத்திகளுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாமல், பொண்டாட்டிமாரின் முந்தானைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த சோனவ லோயரின் அடிவருடிகள்.

பணம் அத்துடன் வேண்டியளவு ஆயுதங்கள், கிராமம் கிராமமாக JOC ( ஜாயின்ட் ஒப்பரேசன் கொமாண்டோ) அதிகாரிகளால் பயிற்ச்சி என முஸ்லிம் காங்கிரஸ் ஜெகஜோதியாக கிழக்கில் முளை விட்டது. எந்த கோட்பாடும் கிடையாது, யாப்பு, கீப்பு, கோப்பு என்று எந்த கத்தரிக்காயும் இவர்களது கடைகளில் இல்லை. அப்போதும் இல்லை, இப்போதும் இந்த உலக மகா கொள்ளைக்காரர்களிடம் இல்லை.

தமிழ் இயக்கங்கள் அடிக்க வந்தா அடிக்கிற, ஓட விட்டு அடிக்கிற, ஒரே ஒரு தானை தலைவர், அவர் அஷ்ரப், இதுதான் மொத்த கொள்கையுமே. அந்த அஸ்ரப் அரனாயகே மலையுச்சியில் வெடித்து சிதறிய, அன்றிரவு தாருஸ்சலாமில் அரங்கேறிய இந்த கொள்கை கொழுந்துகளின் வண்டவாளங்களை பின்னர் பார்ப்போம்.

இந்த ஜெகஜோதியில் தமது பிள்ளைகளை சிக்க வைக்க கூடாது என்று எண்ணிய வாப்பாமரும், உம்மாமாரும் சத்தமில்லாமல், கொழும்பு, கண்டியை நோக்கி நகர்ந்தார்கள், வியாபாரம், உயர் கல்வி என தங்கள் கவனங்களை செலுத்தினார்கள்.

( இன்ஷாஹ் அல்லாஹ் தொடருவேன்......... )
yahiyawasith@ymail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com