Sunday, May 5, 2019

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரனும் கொலைகாரனுமான மாக்காந்துறை மதுஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.

இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய புள்ளி என்றும் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுக்கு பொறுப்பானவன் என்றும் பல வருடங்களாக தேடப்பட்டுவந்த மாக்காந்துறை மதுஷ் என்பவன் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

டுபாயில் பல பலவருடங்களாக தலைமறைவாகியிருந்த அவன், அங்கு தனது மகனின் பிறந்த நாளை மா பெரும் விழாவாக அதி ஆடம்பர ஹோட்டலில் கொண்டாடிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டான்.

இவனுடன் கைது செய்யப்பட்டிருந்த பலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், தான் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் உயிராபத்தை நோக்க நேரிடலாம் என்றும் மேலதிகமாக தனது முதலீடுகள் டுபாயில் உள்ளதாகவும் கூறி நாடுகடத்தலுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தான். அவனது மேன்முறையீட்டை விசாரணை செய்த டுபாய் நீதிமன்று வேண்டுதலை நிராகரித்து இன்று காலை நாடுகடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மதுஷை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இவனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பான பல்வேறு திணைக்களங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும் என அதிகாரி ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற கொலை ஒன்றுக்கு டுபாயிலிருந்தவாறு ஆணையிட்டிருந்த மதுஷ் என்ற கொலைகாரன் , அவனது அடியாட்கள் அக்கொலையை மேற்கொள்ளும்போது வீடியோ அழைப்பில் அதனை பார்வையிட்டதாக அவனது நெருங்கிய சகாவான கஞ்சிப்பானை இம்ரான் என்பவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்திருந்தது யாவரும் அறிந்தது.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பலர் இவன் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளதுடன் அவர்கள் அரச சாட்சிகளாகவும் மாறவுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com