Tuesday, February 5, 2019

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை, நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது - திலகராஜ்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் இடையில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனை தெரிவித்தார். இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், தமக்கும், பிரதமருக்கும் இடையில் முக்கிய சந்திப்பை மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எனினும், அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது எனவும், இதன் காரணமாக நாளை வரை இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது, இலங்கை தேயிலை தொடர்பில் கருத்துக் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது அமைச்சர் மனோ கணேசன், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அதிகரிக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் பிரதமருடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என, எதிர்பார்ப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கூறினார்.

இதேவேளை தமது கோரிக்கை உரிய முறையில் நிறைவேற்றப்படாவிட்டால், தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக, அமைச்சர் மனோ கணேசன், முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com