Friday, February 22, 2019

19வது திருத்தச்சட்டம் ஊனமாகவே பிறந்துள்ளது - எனது அதிகாரத்தை தானம் செய்துள்ளேன் - ஜனாதிபதி

அரசியலமைப்புச் சபை ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படுத்தப்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபையை நடைமுறைப்படுத்தும் போது, இந்த விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இன்று அரசியலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். 19வது திருத்தத்தின் ஊடாக உருவான சுயாதீன ஆணைக் குழுக்கள் பிழையான வழியில் செல்லுமானால் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கும் நாடு, உரிய இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஆனால் 19வது திருத்த சடத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய ஆதாரத்துடன் நிருபிக்க முடியும் என ஜனாதிபதி கூறினார். கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது எந்த பாகுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தேர்தலின் போது அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துவோர், தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அத்தனை பேரின் ஆதரவும் எமக்கு கிடைத்தது.

இதன்போது தேசிய – சர்வதேச அரசியல் கொள்கையில் நல்லாட்சி என்ற கொள்கையின் கீழ் நாம் செயற்பட ஆரம்பித்து, 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தோம். தேர்தலில் வெற்றி பெற்று நான் ஜனாதிபதியாக தெரிவாகி பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலை ஓகஸ்டில் நடத்தினோம்.

கடந்த காலங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டமை காரணமாக, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட வாக்குறுதிக்கமைவாகவே 19 ஆவது திருத்த சட்டத்தை எம்மால் கொண்டுவர முடியுமாக இருந்தது. ஆனால் 19வது திருத்தச்சட்டத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன. லங்கா தீப பத்திரிகை கூறியது போல், 19வது திருத்தச்சட்டக் குழந்தை, ஊனமாகவே பிறந்துள்ளது.

இலங்கையில்தான் அதிகளவான தானங்கள் வழங்கப்படுகின்றன. இராணுவத்தினர் உயிர், உதிரம், அவையம் என பலதையும் தானம் செய்தனர். ஆனால் எவரும் தனது அதிகாரத்தை தானம் செய்தது இல்லை. நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களைய ஸ்தாபித்து எனது அதிகாரத்தை தானம் செய்துள்ளேன். எனினும், நான் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக கூறுகிறார்கள். நான் அவ்வாறானதொரு கருத்தை ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

அரசமைப்புச் சபைக்கு ஒரு வரையறை இருப்பதுபோல, சுயாதீன ஆணைக்குழுக்களின் வரையறை என்ன? என்றே நான் கேட்டிருந்தேன்

ஆனால், உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி தொடர்பில் நான் எதிர்ப்பினை வெளியிட்டதாக அவர்கள் கூறினார்கள். இதற்கு நான் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை கேட்டதாகவும் கூறுகின்றார்கள். உண்மையில், அந்த நியமனம் குறித்து எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாட்டுக்கு என்னை தவறாக சித்தரிக்கவே சிலர் முயற்சித்து வருகிறார்கள். இவற்றை நான் முற்றாக நிராகரிக்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com