தம்முடன் இணைந்து போராடுமாறு, தொண்டாவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றார் திகாம்பரம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக, 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என, பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், அரசாங்கத்திலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு தாம் தயார் என அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம், தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே திகாம்பரம் இதனை கூறினார்.
இலங்கையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தான் குறைந்த அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. இன்று வெள்ளவத்தையிலிருந்து புறக்கோட்டைக்கு முச்சக்கர வண்டியில் வருவதாக இருந்தால் கூட 500 ரூபாவுக்கு அதிக தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
எனவே, அடிப்படை சம்பளமாக 500 ரூபாவை பெறும் எம் தொழிலாளர்கள் எவ்வாறு வாழ்வது? காலத்துக்கு காலம் மட்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்து பேசாமல், அந்த பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்பட வேண்டும் என திகாம்பரம் வலியுறுத்தினார்.
அத்துடன் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது உரையின்போது தெரிவித்த சில கருத்துகளை ஏற்க முடியும் என்றாலும் சில கருத்துக்களை ஏற்க முடியாது என அவர் கூறினார். .
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது தனி வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கான உரிமைகளும் மக்களிடம் தற்போது கையளிக்கப்பட்ட வருகின்றன. இவையெல்லாம் இந்த அரசின் கீழ் தான் இடம்பெற்று வருகின்றன.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமொன்று, தொழிலாளர்களிடம் ஒரு முகத்தையும், முதலாளிமார் சம்மேளனத்திடம், மற்றுமொரு முகத்தையும் காட்டுகின்றது.
எனது தாயும் மலையில் கொழுந்து பறித்தவள். தொழிலாளர்களின் வலி, வேதனை என்னவென்பது எனக்கு தெரியும். எனவே, அவர்களை ஒருபோதும் ஏமாற்றவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டேன்.
பெருந்தோட்டங்கள் மக்களுக்கு கட்டாயமாக 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
அப்படி வழங்கப்படாவிடின், இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டங்களில் வேலை செய்ய, ஒருவர் கூட இருக்க மாட்டார். நாட்டின் பொருளாதாரமே வீழிச்சி கண்டு விடும் என திகாம்பரம் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை கூட்டு ஒப்பந்த பேச்சில் தொண்டமானே தன்னிச்சையாக முடிவெடுத்து வருவதால், என்ன நடக்கின்றது என்பது ஏனைய தொழிற்சங்கங்களுக்கு தெரிவதில்லை என திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் கூட்டு ஒப்பந்த பேச்சிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், நானும் அரசிலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராட தயாராகவே இருக்கின்றேன். எமக்கு பதவிகள் முக்கியமில்லை. எனவே எம்மோடு இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆறுமுகன் தொண்டமானும், போராட முன்வர வேண்டும் என, அமைச்சர் திகாம்பரம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
0 comments :
Post a Comment