Thursday, November 22, 2018

நீதிபதி இளஞ்செளியனின் மெய்பாதுகாவலர் கொலைச் சந்தேக நபர்களின் பினையை ரத்துச் செய்ய கோரும் அரச சட்டத்தரணி.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த உப காவல்துறை பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் கடந்த திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்றின் கட்டளையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அரச சட்டவாதி ஊடாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் நேற்று புதன்கிழமை முன்வைத்த ஆட்சேபனை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஒத்திவைத்தது.

மேல் நீதிமன்றம் பிணை அனுமதிக் கட்டளை வழங்கிய பின்னர் அரச சட்டவாதி சீராய்வு விண்ணப்பத்தை சமர்பித்ததை சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா கடுமையாக ஆட்சேபித்தார். அவர் மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மன்று அரச சட்டவாதியின் விண்ணப்பத்தை ஒத்திவைத்தது. அத்துடன், அரச சட்டவாதி ஊடாக ஆட்சேபனை விண்ணப்பத்தை முன்வைத்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் 26ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டு பிணை விண்ணப்பத்தை அன்று வரை ஒத்திவைத்தது.

“மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று விசாரணைகளை முன்னெடுக்கின்றோம். எனவே சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் விசாரணைகள் பாதிக்கப்படும்.

அத்துடன், காவல்துறை உத்தியோகத்தர் கொலை தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை” என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தமது ஆட்சேபனையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த ஆட்சேபனை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் காவல்துறையினர் , மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனிடம் கையளித்திருந்த நிலையில் அவர் நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து பிணை விண்ணப்பங்களை மன்றில் அழைக்குமாறு கோரினார்.

அதற்கு அமைவாக மேல் நீதிமன்றில் சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சந்தேகநபர்கள் மூவர் சார்பிலும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார்.

“சந்தேகநபர்களுக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆரம்பிக்கப்படவில்லை. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகள் நிறைவடையவில்லை. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணக் குடாநாட்டை மட்டுமல்ல முழு நாட்டையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்யாக்கியது. சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்ட விடயம் ஊடகங்களில் வெளிவந்தமையால் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமையால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், காவல்துறையினரின் விசாரணை பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும்” என்று அரச சட்டவாதி மன்றில் சமர்ப்பணம் செய்தார். “சந்தேகநபர்களுக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் அதனை இந்த மன்றிலேயே ஆட்சேபனை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. நீதிமன்றின் கட்டளையை சவாலுக்குட்படுத்தும் நடவடிக்கை.

சந்தேகநபர்கள் பிணையில் வெளிவந்தால் காவல்துறையினரின் விசாரணைக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று அரச சட்டவாதியின் ஆட்சேபனை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது” என்று அரச தரப்பை கடுமையாகச் சாடி மூத்த சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் முன்வைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

பின்னணி.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசம் இளஞ்செழியன் கடமையாற்றிய கால பகுதியில், அவரது, வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவருக்கு உப பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதியின் காரில் பயணித்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது சூடு நடத்தப்பட்டது. அவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நல்லூர் கந்தசுவாமியார் ஆலய தெற்கு வீதிப் பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது.

சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாள்களின் பின்னர் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். அவை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்கலாம் என்ற எண்ணத்துக்கு மேல் நீதிமன்றம் வந்தால், அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கவேண்டும் என்று அரச சட்டவாதி மன்றுரைத்தார். அதனையடுத்து கட்டளை வழங்கப்பட்டது.

“சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும். மூவரும் 5 லட்சம் ரூபா பெறுமதியையுடை தலா இரண்டு ஆள் பிணையாளிகளை முற்படுத்த வேண்டும்.

சந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டும். மூவரும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளை வழங்கி உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com