Wednesday, November 7, 2018

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதல்: 8 போலீஸார் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் 8 பேர் பலியாகினர். இந்த வாரத்தில் மட்டும் தலிபான்கள் நடத்திய இரண்டாவது தொடர் தாக்குதல் இதுவாகும்.

இதுகுறித்து ஆப்கான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் போலீஸார் 8 பேர் பலியாகினர். திங்கட்கிழமை ஃபராஹ் நகரின் எல்லையோரத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் பலியாகினர். 20 பேர் கடத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆதிக்கம்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா சமீபத்தில் வெயிட்ட அறிக்கையில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com