Thursday, August 28, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ், முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில் இலங்கை சூறா சபை உலமா சபைகளின் நிலைப்பாடு என்ன? பொதுபலவின் சவால்!!!

ஐ.எஸ்.ஐ.எஸ், ஹமாஸ் பயங்கரவாதிகளை இலங்கை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா?

நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்தால் பாதிக்கப்படுவது யார்?

ஐ.எஸ்.ஐ.எஸ் ஹமாஸ் பயங்கரவாதம் மற்றும் போகோ ஹராம் தொடர்பில் இலங்கையிலுள்ள சூறா சபை உலமா சபைகளின் நிலைப்பாடு என்ன இந்த பயங்கரவாத அமைப்புக்களை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமென பொதுபலசேனா சவால் விடுத்துள்ளது.

அரபுலகின் பணத்துக்கும் எண்ணெய்க்கும் இலங்கையையும் சிங்கள பௌத்தத் தையும் காட்டிக்கொடுக்க முடியாதென்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சூறா சபை மற்றும் உலமா சபைகள் எல்லாம் அரபு நாடுகளிலேயே இயங்குகின்றது. அவ்வாறான அமைப்புக்கள் இலங்கைக்கு தேவையில்லை. எனவே, இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சபைகள் உண்மையிலேயே மனித உரிமைகளை ஜனநாயகத்தை மதிக்கும் சபைகள் என்றால் இதனை மீறும் இயக்கங்கள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும். இல்லா விட்டால் இந்த பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதாகவே எண்ண வேண்டி வரும். அவ்வாறே கருத வேண்டி வரும்.

அதேபோன்று அரசாங்க சார்பற்ற நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் நிமல்கா பெர்னாண்டோ போன்றோர் போகோ ஹராம் இயக்கம் பெண்களை கடத்தி பாலியல் வர்த்தகத்திற்கு ஈடுபடுத்துவது கொலை செய்வது உட்பட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும்.

உலகில் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. கிறிஸ்தவர்கள் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்படுகின்றார்கள். எனவே, அரபுலகின் பணத்திற்காகவும் எண்ணெய் வளத்திற்காகவும் இலங்கையையும் சிங்கள பௌத்தர்களையும் காட்டிக்கொடுக்க முடியாது.

அடிப்படைவாத சக்திகள் சர்வதேச ரீதியாக எமக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள ஒரு சிலர் வெளிநாட்டு தூதரகங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு எமக்கெதிரான புத்தகங்களையும் தயார்படுத்தி வருகின்றனர்.

எம்மிடம் இனவாதம் இல்லை. ஆனால் சிங்களவர்களாகட்டும் தமிழர்களாகட்டும் முஸ்லிம்களாகட்டும் அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றோம். எமது இந்த அலுவலகத்தில் அண்மையில் முஸ்லிம் பிரமுகர்கள் சந்தித்து எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்போது அவர்களுக்கு தொழுகை நடத்த இங்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.

தர்மம் என்பது சத்தியம் ஆகும். இதனையே நாம் வெளிப்படுத்துகின்றோம். ஒரு சிலருக்கு இது கசப்பாக இருக்கலாம். இதில் அபரிதமான அதிகாரங்கள் இருப்பதையும் அதனை குறைக்க வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழிப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லையென்பதையும் இங்கு உணரப்பட வேண்டும்.

நாட்டில் 10 இலட்சத்திற்கு மேல் அரச ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நிறைவேற்று அதிகாரத்தின் கடிதங்களையே மதிப்பதில்லை. நடைமுறைப்படுத்துவதில்லை. அவ்வாறானதோர் நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com