Thursday, August 28, 2014

லக் சதொசக்களினால் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது! - ஹேமால் குணசேக்கர

நுகர்வோரின் தேவைகளை நிறைவு செய்வதுடன், அவர்களைப் பாதுகாப்பதற்காகவே கூட்டுறவு வியாபார நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. வெலிகமவில் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ள லக் சதொசவினால் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக நல்லதொரு போட்டியே ஏற்படும்.

வெலிகம புகையிரத நிலையத்திற்கு .அருகாமையில் நேற்று (27) லக் சதொசவின் புதிய கட்டடம் நேற்று (28) புதன் கிழமை திறந்து வைத்து, பிரதி கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார அமைச்சர் ஹேமால் குணசேக்கர உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த கூட்டுறவு வியாபார நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக பலர் பல இடங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளனர். என்றாலும், அவை தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொள்ளவில்லை.. காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லடியும் பொல்லடியும் படும் என்பார்கள். இவ்வாறு பலரும் எங்களுக்கு எதிராக செயற்பட முனைந்தாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. நாங்கள் கெட்ட வேலை ஒன்று செய்யவில்லை. வெலிகம மக்களுக்கு நன்மையே செய்திருக்கின்றோம்.

வெலிகமையில் நல்ல புரிந்துணர்வு உள்ளவர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள்.. இங்கு முஸ்லிம்களும், சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வோடுதான் செயற்படுகின்றார்கள். இன்று வெலிகமையில் திறக்கப்பட்டுள்ள கூட்டுறவு வியாபார நிலையமானது 300 ஆவது கூட்டுறவு வியாபார நிலையமாகும். இந்த கூட்டுறவு நிலையமானது பொதுமக்களின் நன்மை கருதியே திறக்கப்பட்டுள்ளது. மாறாக, வியாபாரிகளின் வயிற்றுக்கு அடிப்பதற்கு அல்ல. இதன் மூலம் நல்லதொரு போட்டியை வெலிகமையில் எதிர்பார்க்கலாம். நாளுக்கு நாள் நல்ல வளர்ச்சிப்படியை நோக்கிச் செல்கின்ற வெலிகமையில் இன்னும் பல பாரிய செயற்றிட்டங்களை செய்வதற்கு நான் தீர்மானித்துள்ளேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து ஆகியோருடன் நான் பொதுமக்களினதும், விவசாயிகளினதும் நன்மை கருதி பல திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அநீதி ஏற்படாத வண்ணம் அரிசியின் விலையை வெகு விரைவில் குறைக்கவுள்ளோம்.

கூட்டுறவுத் துறையில் மிகவும் கூடுதலாகக் கடமையாற்றுபவர்கள் பெண்களே.. எனவே மிக இலகுவில் எங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியம். பெண்களுக்காக தனியானதொரு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்பதும் எங்கள் எண்ணப்பாடாக உள்ளது.

இன்னும் 14 - 15 நாட்களுக்குள் அரசாங்கம் விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் செயற்றிட்டமொன்றை முன்கொணர உள்ளது. ” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் புஷ்பகுமார பெட்டகே, வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத், வரையறுக்கப்பட்ட வெலிகம கூட்டுறவு வியாபார நிலையத்தின் தலைவர் சுசில் வீரசேக்கர ஆகியோரும், வெலிகம பிரதேச செயலகத்தின் செயலாளர் உட்பட மற்றும் சிலர் கருத்துரைத்தனர்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com