Wednesday, June 18, 2014

கல்முனையில் கர்த்தால்! கல்முனைக்குடியில் இ.போ.ச பஸ்கள் மீது கல்வீச்சு.

அளுத்கம , பேருவள முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்து கல்முனை பிரதேசத்தில் (18) முழுக் கடையடைப்பு ,கர்தால் இடம்பெற்றது. கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள் ,பொதுசந்தை, அரச அலுவலகங்கள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது . வீதிகளில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு இன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் ஹர்த்தல் அனுஷ்ட்டிக்க அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கல்முனையில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்ட வேளை போக்குவரத்து சேவையில் ஈடு பட்ட இ.போ.சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களுக்கு கல்முனை குடியில் வைத்து கல்லெறிந்து கண்ணாடிகள் சேதமாக்கப் பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பஸ் சாரதிகள் கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கல்முனையில் இருந்து அக்கரைபற்று ,பொதுவில், அம்பாறைக்கான அரச தனியார் போக்குவரத்துக்கள் முற்றாக செயலிழந்துள்ளது .

கல்முனையில் உள்ள சகல வங்கிகளும் ,வர்த்தக நிலையங்களும் ,அரச அலுவலகங்களும் இழுத்து மூடப்பட்ட நிலையில் நகரம் வெறிசோடி காணப்படுகின்றது.

கல்முனை தனியார் பஸ் நிலையத்தில் டயர் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த கல்முனை பொலிசார் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் .

கல்முனை பிரதேச செயலக செயலாளர் பெரும்பான்மை சமுகத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் பிரதேச செயலகத்தை திறப்பதற்கு அனுமதிக்கவில்லை .எனினும் அதே வளவுக்குள் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்முனை மாநகர சபை திறக்கப் பட்டு அதிகாரிகளும் , ஊழியர்களும் கடமை செய்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

இதே நேரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை , மருதமுனை , கல்முனைக்குடி, சாய்ந்தமரு பிரதேசம் முற்றாக வெறிச்சோடி காணப் பட்டதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது முஸ்லிம் பிரதேச பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை இல்லாமல் இருந்தன

இதே வேலை முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் விசேட துஆ பிரார்த்தனைகள் இடம் பெற்றதுடன் நேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைவன் அருள் கிடைக்க நோன்பு நோற்றமையும் குறிப்பிடத்தக்கது



















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com