Saturday, June 21, 2014

பாணந்துறை தீ விபத்தில் ஆடை வர்த்தக நிலையம் முழுமையாக சேதம்! விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில்!

பாணந்துறையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலைய (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அதிகாலை 3.15 மணிமுதல் 5 மணிவரையிலும் தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் முயன்றபோதிலும் அம்முயற்சி கைகூடவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை,கொழும்பு மற்றும் ஹோரணையிலிருந்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினருக்கு சொந்தமான ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றபோதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.

தீயணைப்பு படையினர் கொண்டுவந்த தண்ணீர் போதாமை காரணமாகவே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர்களால் முடியாமல் போனதாகவும் முழு கட்டடத்ததையும் காலை 5.30 க்கு தீ முழுமையாக சாம்பராக்கிவிட்டதாகவும்; தீ பரவியவேளையில் அந்த கட்டடத்திலிருந்த எழுவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலையம் (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்தே மேலதிக பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com