Wednesday, May 7, 2014

கர்ப்பிணி பெண்ணை வாகனத்தால் மோதி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றவரை கைதுசெய்ய INTERPOL உதவி!! (Video)

கொழும்பு குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் வாகனத்தால் மோதி பலியான கர்ப்பிணிப்பெண் பூஜாபிட்டியைச் சேர்ந்த மொஹமட் முஜிபா (வயது 27) என்ற பெண்ணை மோதி படுகொலை செய்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி (இன்டர்போல்) பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனது கணவருடனும் 6 மாத குழந்தையுடனும், சகோதரனுடனும் கடந்த 27ம் திகதி குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் சென்ற போது வெள்ளை நிற மிட்சுபிஷி ஜீப் ரக வாகனமொன்று இவர்கள் மீது மோதி விபத்தானது. கணவரினதும் தனது சகோதரனினதும் பாதுகாப்பில் இருவருக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது மோதியது மட்டுமல்லாமல் தூக்கியெறியப்பட்ட பெண் மீது மீண்டும் வாகனத்தை ஏற்றி கொலை செய்துள்ளார்.

அதிவேகமாக வந்து வாகன விபத்தை ஏற்படுத்திய பின்னர் நிறுத்தாமல் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றுபவர் என்றும் தெரியவந்துள்ளது. விபத்து நடைபெற்ற அன்றே சந்தேக நபர் சிங்கப்பூருக்கு தப்பியோடியுள்ளார்.

சீ.சீ.ரி.வி. கமராக்கள் மூலம் பதியப்பட்ட ஒளிப்படங்களை வைத்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜனக வீரசிங்க, போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களான தனுஷ்க்க, ரத்நாயக்க ஆகியோர் இறந்த பெண்ணின் கணவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க வரையிலான சீ.சீ.ரி.வி. கமராக்களை ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு கமராக்களிலும் பதிவான ஒளிப்படங்களை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்ட போது வெள்ளை நிற ஜீப் ரக வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு வாகனத்தின் இலக்கத்துக்கு முன்னாலுள்ள றிஙி என்ற எழுத்து மட்டுமே தெரியவந்துள்ளது. இந்த எழுத்தின் கீழ் பதிவாகியுள்ள 545 வாகனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது சந்தேக நபரின் வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபரின் வீட்டுக்கு பொலிஸார் சென்ற போது வாகனம் இருக்கவில்லை. சந்தேக நபரும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை சந்தேக நபரின் நண்பர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்துவிட்டே சென்றுள்ளார். எனினும், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தவே நண்பர் வாகனத்தை மீண்டும் சந்தேக நபரின் வீட்டில் சேர்த்துள்ளதையடுத்து பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

இரவு களியாட்ட விடுதியொன்றில் மது அருந்திவிட்டு போதையில் வந்தவரே மொஹமட் ராசிக் மொஹமட் முஜிபா என்ற 27 வயது அப்பாவி கர்ப்பிணி பெண்ணை மோதி கொலை செய்துள்ளார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார். இந்தக் குறித்த வாகனம் வரிவிலக்களிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் வேறொருவரிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com