Thursday, May 29, 2014

சிறுமியொருவரை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞன் கைது.....

திருமணம் செய்து கொள்வதற்காக சிறுமியொருவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனதும், சிறுமியினதும் பெற் றோர்களது விருப்பத்துடன் திருமண விருந்து வைபவத்தை நடத்திக் கொண்டிருந்த 19 வயது இளைஞன் கைது செய்யப் பட்டுள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு சாலியவௌ பொலிஸ் பிரிவின் 19 ஆம் கட்டை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருவலகஸ்வௌ 16 வயதான இச்சிறுமி பாடசாலை செல்லும் நிலையில் சந்தேக நபருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதும் தம்மை திருமணம் செய்ய அனுமதிக்காவிடின் தற்கொலை செய்து கொள்வதாக இவ்விருவரும் தமது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அச்சமடைந்த இருவரது பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். திருமணப் பதிவுக்காகச் சென்ற போது மணமகள் சிறுமியாக இருப்பதால் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என பதிவாளர் மறுத்துள்ளார். பின்னர் சிறுமியின் வீட்டுக்கு வந்து இரு வீட்டாரும் அங்கு நேற்று முன்தினம் பகல் திருமண விருந்து வைபவத்தை நடத்தியுள்ளதுடன் நேற்று முன்தினமிரவு இரவு விருந்தினை சந்தேக நபரின் வீட்டில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமி ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் விருந்துபசாரம் நடத்துவதை அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு தகவல் வழங்கியுள்ளதையடுத்து சாலியவௌ பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபரான இளைஞரைக் கைது செய்துள்ளனர். மணமகளான சிறுமியையும் தம் பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார் சிறு வயது சிறுமியைத் திருமணம் செய்து வைக்க முயன்ற குற்றச்சாட்டில் இருவரது பெற்றோர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com