Saturday, May 3, 2014

அமெரிக்க ஆதரவிலான எகிப்திய ஆட்சி கூடுதலாக இன்னும் 683 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது! Bill Van Auken

திங்களன்று, எகிப்தில் இராணுவ அதிகாரத்தின் கீழுள்ள ஒருதலைபட்சமான நீதிமன்றம், ஒரு ஐந்து-நிமிட விசாரணைக்குப் பின்னர், முஸ்லீம் சகோதரத்துவத்தின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் 683 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தது. அந்த விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பிலிருந்து ஒரு வார்த்தை உச்சரிக்கவோ அல்லது எந்தவொரு சாட்சிய துணுக்கை சமர்பிக்கவோ நீதிபதி அனுமதிக்கவில்லை என்பதோடு, தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பலர் விசாரணையின் போது அங்கே ஆஜர்படுத்தப்படக் கூட இல்லை.

பெருந்திரளான மக்கள் மீதான இந்த விசாரணையும், முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட அதன் தீர்ப்பும் மற்றும் தண்டனையும், கடந்த மாதம் நடந்த இதே போன்ற ஒரு நீதித்துறை கேலிக்கூத்தைப் பின்தொடர்ந்து நடக்கிறது, அதிலும் இதே நீதிபதி சையத் யூசெப்பால் 529 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. திங்களன்று வழங்கிய வேறொரு தீர்ப்பில், யூசெப் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 37 நபர்களின் தண்டனையை உறுதி செய்தோடு, ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

கெய்ரோவிலிருந்து தெற்கே சுமார் 150 மைல்களுக்கு அப்பால் மின்யாவில், கடுமையான பாதுகாப்பின் கீழ் இருந்த நீதிமன்றத்திற்கு வெளியே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, ஆளும் இராணுவ ஆட்சியையும், அதன் நடைமுறை தலைவரும், முபாரக்-சகாப்தத்திய முன்னாள் இராணுவ உளவுத்துறை தலைவருமான ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல்-சிசியையும் தூற்றி கூச்சலிட்டனர்.

தூக்கு மேடையை அல்லது எகிப்தின் இழிவார்ந்த கொடூர சிறைச்சாலைகளில் ஓர் ஆயுள் தண்டனையை முகங்கொடுத்து வரும் 1,200க்கும் மேற்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், இராணுவ ஆட்சி சதிக்கு எதிராக முஸ்லீம் சகோதரத்துவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்களின் போது இறந்த ஒரேயொரு பொலிஸ்காரரின் மரணத்தில் வேரூன்றி உள்ளது, அந்த ஆட்சி சதியின் போது தான் எகிப்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும், முஸ்லீம் சகோதரத்துவ அங்கத்தவருமான மொஹம்மது முர்சி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே காலக்கட்டத்தின் போது, எகிப்திய பாதுகாப்பு படைகள் ஏறத்தாழ 2,000 போராட்டக்காரர்களை படுகொலை செய்தது, அவர்களில் 1,000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டதும் அதில் உள்ளடங்கும்.

மின்யாவில் நடந்த நீதிமன்ற கேலிக்கூத்து மிக வெளிப்படையாக தெளிவுபடுத்துவதைப் போல, சிசியின் கீழ் வெறுமனே கொடுங்கோன்மை ஆட்சி மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடு, அது மிகவும் உறுதியாக அமைப்புரீதியாக ஆக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு மோசடி ஜனாதிபதித் தேர்தல்களாக ஆக இருக்கின்ற தேர்தல்களில் ஒரு வேட்பாளராக பதிவு செய்ய சிசி சமீபத்தில் அவரது பதவியை இராஜினாமா செய்தார்.
2000க்கும் மேற்பட்டவர்கள் சிசியின் இராணுவ ஆட்சியால் கொல்லப்பட்டதற்கும் அப்பாற்பட்டு, மேலும் 21,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் "நிழலுலக முகாம்கள்", இரகசிய சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதை கூடங்களின் ஒரு வலையமைப்பிற்குள் காணாமல் போக செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பரந்த ஒடுக்குமுறை எந்திரத்தின் இலக்கு முஸ்லீம் சகோதரத்துவம் மட்டுமே அல்ல, மாறாக பெப்ரவரி 2011இல் முன்னாள் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு இட்டு சென்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த அனைத்து போராட்டக்காரர்களுமே இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு — ஜோடிக்கப்பட்ட தேசத்துரோகம் மற்றும் அரச அவமதிப்பு குற்றச்சாட்டுக்களில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஏப்ரல் 6 இளைஞர் இயக்கத்தின் தலைவர்களான அஹ்மத் மஹீர் மற்றும் மொஹம்மது அடெல், மற்றும் அஹ்மத் டௌமா என்பவர் — அனுமதியில்லாத அனைத்து போராட்டங்களுக்கும் தடை விதித்திருந்த ஒரு கட்டளையை மீறியமைக்காக மூன்று ஆண்டு கால கடுமையான உழைப்பு தண்டனை மற்றும் 7,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களின் சிறை அதிகாரிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த கொடூர ஒடுக்குமுறையானது, அதன் பாரிய வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக, முபாரக் ஆட்சியை கவிழ்ப்பதில் பிரதான பங்கு வகித்த சமூக சக்தியான எகிப்திய தொழிலாள வர்க்கத்தையே நோக்கமாக கொண்டுள்ளது. ஜவுளித்துறை, எஃகு, அரசு போக்குவரத்து துறை, தபால் துறை மற்றும் மூலோபாய சூயஸ் கால்வாய் உட்பட துறைமுக தொழிலாளர்களை முன்னனிக்கு கொண்டு வந்த, இத்தகைய வேலை நிறுத்தங்கள் இன்னமும் தொடர்கின்றன. ரொட்டி, மின்சாரம் மற்றும் எரிவாயுவின் மானியங்களைக் குறைப்பது உட்பட, IMFஆல் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்தும் சட்டங்களை இயற்ற ஆளும் இராணுவ ஆட்சி தயாரிப்பு செய்து வரும் நிலைமைகளின் கீழ், அரசு வன்முறையோடு எகிப்திய தொழிலாளர்களை மிரட்ட அது பெரும் பிரயத்தனம் செய்கிறது.

எகிப்தில் பெருந்திரளான மக்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகள் மற்றும் பெருந்திரளாக வழங்கப்படும் மரண தண்டனைகளின் படுமோசமான அளவும், சமீபத்திய வரலாற்றில் நிகரற்றதாக உள்ளது. இது நாஜிக்களின் கீழ் நடத்தப்பட்ட ஒருவித அட்டூழியங்களை நினைவூட்டுகிறது. அதன் ஆறுதல் வார்த்தைகளோடும், அதன் கடுமையான ஒப்பந்தங்களோடும், வாஷிங்டனின் நிலைப்பாடு இந்த குற்றத்தில் நேரடி உடந்தையாளர் என்ற விதத்தில் அம்பலப்பட்டுவிட்டது, ஜனாதிபதி பராக் ஒபாமா சுருக்கு கயிறைக் கழுவி வைப்பவராக அம்பலப்பட்டுள்ளார்.
ஆத்திரத்தை அள்ளி தெளிக்கும் ஓர் அறிக்கையில், எகிப்தில் வழங்கப்பட்ட பெருந்திரளான மரண தண்டனைகள் குறித்து ஒபாமா "மிகுந்த கவலை" கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

“நீதித்துறை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அத்தியாவசிய பாகமாகும், இருந்த போதினும் இந்த தீர்ப்பு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் எகிப்தின் கடப்பாடுகளுக்கு பொருந்தியதல்ல,” என்று வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது. "இந்த தர்க்கரீதியாக அல்லாத நடவடிக்கைக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்குமாறு" அது சிசி மற்றும் அவரது சக இராணுவ ஆட்சியாளர்களிடம் முறையிட்டது.

அவர்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள்? “நீதித்துறை சுதந்திரத்தின்" நல்லிணக்கங்கள் எகிப்தில் ஒரு பிரச்சினையே அல்ல. வெகுஜனங்களால் "கசாப்பு கடைக்காரர்" என்று அறியப்படும் தூக்கிலிடும் நீதிபதி யூசெப், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை துல்லியமாக செய்வதற்காகவே இராணுவ ஆட்சியால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். அனைத்திற்கும் மேலாக, அந்த கொடூர வாக்கியங்கள் ஒரு மிகத் தெளிவான தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன: அதாவது, அவை எகிப்திய மக்களை மிரட்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட அரச கொடுங்கோன்மை நடவடிக்கைகள் ஆகும்.

அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது: “ஜனவரி 25 புரட்சிக்குப் பின்னரில் இருந்து, நேர்மையோடு ஆட்சி புரியும், எகிப்திய மக்களின் கண்ணியத்தை மதிக்கும் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் ஒரு அரசாங்கத்தால் பிரதிநிதித்துவப்பட்டிருப்பதாக எகிப்திய மக்கள் உணர்கிறார்கள். அமெரிக்கா இந்த அபிலாஷைகளை ஆதரிப்பதோடு, எகிப்திய மாற்றம் வெற்றிகரமாக நடந்தேற விரும்புகிறது.”

பொய்க்கு மேல் பொய்கள் அடுக்கப்பட்டுள்ளன. உண்மை என்னவென்றால் ஒபாமா நிர்வாகம் அதன் "பற்றுறுதியான கூட்டாளி" முபாரக்கை அதிகாரத்தில் தக்க வைக்க மற்றும் ஜனவரி 25 புரட்சியையும் தகர்க்க அதனால் என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ததோடு, அந்த எகிப்திய சர்வாதிகாரிக்கு அதை செய்ய படை தளவாடங்களையும் அனுப்பியது.

ஆனால் அதில் தோல்வியுற்றதும், அது, முபாரக்கின் உளவுத்துறை தலைவரும், CIAஇன் "உடைமையுமான" ஒமர் சுலைமானுக்கு அதிகாரத்தைப் பாதுகாப்பாக மாற்ற முயன்றது. அதிலும் தோல்வியுற்றதும், அது ஆயுதப்படையின் மேல் சபை (Supreme Council of the Armed Forces) அதிகாரத்தைக் கைப்பற்றியதை ஆதரித்தது. முர்சியின் வலதுசாரி முஸ்லீம் சகோதரத்துவ அரசாங்கத்தைப் பயன்படுத்தி எகிப்திலும் அந்த பிராந்தியத்திலும் அதன் நலன்களைப் பாதுகாக்க முயன்ற பின்னர், அது கடந்த ஜூலையில் அவரை தூக்கியெறிந்த இராணுவ ஆட்சி சதியை மௌனமாக ஆதரித்தது, அது ஓர் ஆட்சி சதியை ஆட்சி சதியென்று அழைக்க மறுத்து, அதற்கு சட்டப்பூர்வமாக இராணுவ உதவிகளை வழங்கியது.

“வெற்றிகரமான எகிப்திய மாற்றத்தை" விரும்புவதாக கூறப்படும் பேச்சுக்கள், முழு வெறுப்பு என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை. வாஷிங்டனால் உதவி வழங்கப்பட்ட, ஊக்குவிக்கப்பட்ட அந்த "மாற்றம்", ஒரு சர்வாதிகார இரத்தக்களரி என்பதையும், வெறுக்கப்பட்ட அமெரிக்க-ஆதரவு முபாரக்கினது ஒடுக்குமுறையை விட மிக மோசமான ஒடுக்குமுறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எகிப்திய இராணுவ ஆட்சிக்கு இந்த நிதியாண்டில் சுமார் 650 மில்லியன் டாலர் இராணுவ நிதியுதவி வழங்குவதென்று ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டமைக்கு மேலதிகமாக, 10 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு வாஷிங்டன் ஒப்புதல் அளித்த ஒருசில நாட்களில், திங்களன்று இந்த பெருந்திரளான மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது வெறுமனே ஒரு தன்னியல்பாக ஏற்பட்ட பொருத்தமல்ல. இந்த வினியோகம், அந்நாட்டின் ஒடுக்குமுறை படைகளுக்கு அந்த நிர்வாகம் வினியோகிக்க விரும்பியதில் வெறும் பாதியளவே ஆகும், மீதி பாதி இராணுவ ஆட்சி கவிழ்ப்புகள் மூலமாக அதிகாரத்திற்கு வந்த ஆட்சிகளுக்கு உதவிகள் வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களால் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் உடன்படிக்கை, அதன் கொடூரமான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டதாக, மிகச் சரியாக எகிப்திய இராணுவ ஆட்சியால் எடுத்துக் கொள்ளபட்டது.

ஒபாமா நிர்வாகத்தின் "மனித உரிமைகளுக்கான" வெளியுறவுக் கொள்கையின் போலித்தனமான மோசடியை இதை விட வேறொன்றும் இந்தளவிற்கு அவிழ்த்துக் காட்டாது. கடந்த பல மாதங்களாக, அது உக்ரேனில் ஜனநாயகத்தின் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலனாக காட்டி வருகிறது. உக்ரேனில் ஒரு பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பை நியாயப்படுத்த மற்றும் ஒரு மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி உலகை தள்ள அச்சுறுத்துகின்ற ஒரு தொடர்ச்சியான ரஷ்ய-விரோத ஆத்திரமூட்டல் கொள்கையை நியாயப்படுத்த, அது எகிப்தோடு ஒப்பிடுகையில், ஒப்பீட்டளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கொலைகளை — அவற்றில் இருந்த குற்றவாளிகள் மீதான விடயம் விவாதத்திற்குரிய ஒன்றாகும் — நடத்தியது.
அதேபோல வெனிசூலாவில், வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 41 நபர்களின் உயிரிழப்பு — மீண்டும் இங்கே இதற்கான காரணமும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது — "அதன் சொந்த குடிமக்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு பயங்கரவாத நடவடிக்கையை" நடத்தியது என்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி குற்றஞ்சாட்டுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த ஆகஸ்டில் கெய்ரோவின் வீதிகளில் நடந்த ஆயிரக்கணக்கானவர்களின் படுகொலையிலோ அல்லது கடந்த இரண்டு மாதங்களில் வழங்கப்பட்ட பெருந்திரளான மரண தண்டனைகளிலோ இந்த பயங்கரம் உணரப்படவில்லையே.
அமெரிக்க நிதியியல் மற்றும் பெருநிறுவன ஆளும் அடுக்குகளின் நலன்களை பின்தொடர மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூக போராட்டங்களை ஒடுக்க, இரத்தக் களரி நிறைந்த அரச வன்முறை மற்றும் இராணுவவாதத்தைப் பயன்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் நிஜமான முகத்தை எகிப்து அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com