Friday, April 18, 2014

சர்வதேச ரீதியாக தேடப்படும் 96 இலங்கையர்கள்!

96 இலங்கையர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் பொலிஸார் ஊடாக சிகப்பு பிடிவிராந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்களில் 40 பேர் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எனவும் ஏனைய 56 பேர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணைய செய்யும் விடயத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன், சர்வதேசத்தில் இயங்கும் புலிகளின் உறுப்பினரான நெடியவனுக்கு எதிராகவும் இந்த சிகப்பு பிடிவிராந்து அறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பல உறுப்பினர்களுக்கு எதிராக இந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளுக்கு இண்டர்போல் பொலிஸார் இந்த சிகப்பு பிடிவிராந்து அறிக்கைகளை பிறப்பித்துள்ளனர்.

போர் முடிவடைந்த பின்னர், கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரம் இல்லாத சிலரை நாங்கள் விடுதலை செய்துள்ளோம். ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுக்கவே நாங்கள் இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com