Monday, April 21, 2014

வெலிகம அறபாவின் 125 ஆம் ஆண்டு விழா மே 01 - 05 வரை!

வெலிகம அறபா தேசிய பாடசாலையின் (Weligama Arafa National School) 125 ஆவது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மே 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள இவ்விழா பரிசளிப்பு, கண்காட்சி, கடைத்தொகுதி, வினோத அம்சங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் இவ்விழாவினைக் கண்டுகளிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணியிலிருந்தும், ஏனையோருக்கு மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இக்கண்காட்சியைப் பார்வையிட முடியும்.

பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சி கூடங்களும், அரச தனியார் நிறுவனங்களின் கண்காட்சிக் கூடங்களும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நுழைவுச் சீட்டுக்களைத் தினமும் நுழைவாயிலில் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது பார்வையிட வருமாறும் கல்லூரி விழா ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரையும் வேண்டுகின்றனர்.

இவ்வைபவத்தையொட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு “அறபியன் பாத யாத்திரை” இடம்பெறவுள்ளது. 125 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முதல்நாள் கடிதவுறையும் முத்திரையும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1888 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, இலங்கையின் மூன்றாவது முஸ்லிம் பாடசாலையாகக் கருதப்படுகின்றது. தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் மாணவர், மாணவிகளுக்கான விடுதிகள் காணப்படுகின்ற, க.பொ.த. சா.த உயர்தர கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப்ப் பிரிவுகள் உட்பட ஆங்கில மொழிப்பிரிவையும் உள்ளடக்கிய ஒரேயொரு பாடசாலை அறபா தேசிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com