Thursday, February 6, 2014

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடாமல் தவிர்த்து வருவது நாட்டுபற்று மிக்க தனக்கு கவலையாம்! ஜனாதிபதியிடம் சங்கரியார்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு வடிவம் பின்வருமாறு,

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 3.


மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே,

59ஆவது சுதந்திர தினநிகழ்வில் நீங்கள் உறுதியளித்தபடி எதுவித தாமதமுமின்றி மிகமுக்கியமான இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுவீர்கள் என்ற நம்பிக்கையோடு பெப்பிரவரி 4ஆம் நாளாகிய இன்றைய தினத்தை தெரிவுசெய்து தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

இன்றைய தினம் எனக்கு மிகமுக்கியமான நாளாகும். 66ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனிடமிருந்து எமது நாடு சுதந்திரம் அடைந்ததென்பதோடு இனமதவேறுபாடின்றி சகலமக்களும் மிக உற்சாகமாக கொண்டாடிய தினமாகும். 59ஆவது சுதந்திர நினைவு தினத்தைக் கொண்டாடிய இன்றைய நாளில் தான் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்களின் உள்ளங்களில் மிக நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் இப்படிக் கூறியிருந்தீர்கள்.

´தமிழ் இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை வளம்பெறச் செய்ய வேண்டும். மொறகஹ கந்த சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது கூறியது போல பயங்கரவாதத்தை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே என்பதனை வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதற்கு தெற்கே வாழுகின்ற சிங்கள மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதனை நான் அறிவேன். இரத்த வெறிபிடித்த விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றத் தயாராக இல்லை. இருப்பினும் குறைந்த பட்சமாக திரு ஆனந்தசங்கரி அல்லது கௌரவ டக்ளஸ் தேவானந்தா கூறுவதற்கு இசைய வேண்டியதே நியாயமானதும் நேர்மையானதுமாகும்.´

இந்தப் பேச்சை நீங்கள் நிகழ்த்திய வேளையில் திரு. டக்ளஸ் தேவானந்தா உங்கள் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர். ஆனால் நானோ பாராளுமன்ற உறுப்பினராகவோ அன்றி எந்த ஒரு உள்ளுராட்சி மன்றத்திலோ உறுப்பினராகவோ இருக்கவில்லை. நான் எனது நாட்டை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும், என்னுடைய தியாகத்தையும் நீங்கள் விளங்கிக் கொண்டிருந்ததை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

சில நபர்கள் சமஷ்டி ஆட்சிமுறையும் ஒற்றையாட்சி முறையும் தமக்கு ஒவ்வாது எனக் கூறிய காலத்தில் நான் இந்திய முறையிலான ஆட்சிமுறையே பொருத்தமான ஒரேயொரு மாற்றீடு என பிரச்சாரம் செய்துவந்தேன். அந்த நேரத்தில் நீங்கள் நியாயமாகவும் விசுவாசமாகவும் செயற்படுவதாக இருந்தால் நாங்கள் குறைந்தபட்சம் ஆனந்தசங்கரி அல்லது டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது வேண்டுகோளுக்காவது இணங்கிப்போகவேண்டும் என்றீர்கள்.

அதனால் நான் நீங்கள் ஒரு நியாயமான தீர்வுக்கு இணங்குவீர்கள் என திடமாக நம்பியிருந்தேன். இத்தோடு சமஷ்டி ஆட்சி என்ற சொற்பிரயோகத்தை விடுத்து இந்திய அமைப்பிலான முறை என்ற வார்ததையை உங்கள் இஷ்டம்போல உபயோகியுங்கள் என்று நீங்கள் ஒருநாள் என்னிடம் கூறியது எனக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

15.11.2011திகதி என்னால் எழுதப்பட்ட கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். நான்குறிப்பிட்ட பலவிடயங்களில் ´சிங்கள தமிழ் மக்களின் பூர்வீக தொடர்பு´ என்ற தலைப்பிட்ட கருத்துமொன்றாகும். கடிதத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் தனது மகளாகிய அராச குமாரியை அரசிளங்குமரர் விஜயனுக்கு மணமுடித்துவைத்ததோடு, விஐயனின் தோழர்கள் 700 பேருக்கும் தகுதியான மதுரைக் கன்னியரை மணமுடித்துவைத்து பல்வேறுதரப்பட்ட அவர்களது தேவைகளைப் பூர்திசெய்யும் அத்தனை வசதிகளையும் கொடுத்ததுடன், பதினெட்டு வகையான தொழில் புரியும் இனக்குழுக்களைச் சேர்ந்த 1000 தமிழ்க் குடும்பத்தினரையும் அனுப்பிவைத்தார்.

எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால் அனேகருக்கு தமது சரித்திரம் தெரியாது. உண்மையில் பதியப்பட்ட இலங்கையின் வரலாற்றுச் சரித்திரமாகிய மகாவம்சத்தில்தான் இக்கூற்று உள்ளது. இலங்கைத் தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இடையிலான தொப்பூழ்கொடி உறவைப் போன்றே சிங்கள மக்களுக்கும் மதுரைத் தமிழருக்கும் தொடர்புகள் உண்டு. மதுரை இன்றுவரை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

ஜனாதிபதி அவர்களே! மேலும் பலவிடயங்கள் ´நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை´ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் அடங்கியுள்ளது. அதாவது பல்வேறு தேவைகள், பொது மக்களின் காணிகளை அரச படையினர் சுவீகரிப்பது, இராணுவத்தின பலத்தையும், முகாம்களின் எண்ணிக்கையையும் குறைப்பது, குற்றமற்ற அப்பாவிப் பொதுமக்கள் விடுதலைப் புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறைகளில் இருப்பவர்களை விடுவித்தல், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவற்றை உடைத்து சேதமாக்குவோர்கள், மற்றும் இனத்துவேஷத்தை தூண்டுவோர் உடன் கைதுசெய்யப்பட்டு நீதியின்முன்நிறுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுப்பது, இறுதி நடவடிக்கையாக இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் எவருக்கும் விசேட சலுகை இன்றி சமமாக – சமஉரிமையோடு வாழ சட்டங்களை ஏற்படுத்தி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும்.

15.11.2011 எழுதிய கடிதத்தில் எழுதப்பட்ட மேலும் பல விடயங்களும், அதற்கான பரிகாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சகல பிரச்சனைகளையும் தேசியப் பிரச்சனையாக கவனத்திலெடுத்து மக்களையும் நாட்டையும் பாதிக்கும் விடயங்கள் சீர்செய்யப்பட வேண்டும்.

ஒரு ஒடுக்கப்பட்ட இனமான சிறுபான்மைத் தமிழ் மக்கள், சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு பங்கு கொள்ளும் உரிமையை இழந்துவிட்டதாகக் கருதி பங்குகொள்ளாது தவிர்த்துவருவது, நாட்டுப் பற்றுமிக்கவனாகவும், 1948 பெப்ரவரி 4ஆந் திகதி முதல் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்ட எனக்கு தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.

இந்நாட்டில் நான் 80 வருடங்களாக வாழ்ந்திருக்கிறேன். கடைசியாக நான் எந்தவருட சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன் என்பது எனக்கு ஞாபகமில்லை.

அன்புடன், வீ.ஆனந்த சங்கரி

3 comments :

Anonymous ,  February 6, 2014 at 8:21 PM  

கடிதம் எழுதி எழுதியே வாழ்க்கையை ஓட்டிவிட்டார். VS.Drammen

Anonymous ,  February 6, 2014 at 9:03 PM  

இந்த முதியவர் இலங்கையரசியலில் பல காலம் வெள்ளை வேட்டி கட்டி பவனிவந்தவர்.

இந்த பவனி தொடரமுடியாமல் போனது புலிகளின் அடாவடித் தனத்தால் என்பது மறக்க முடியாத உண்மை.

தமிழ்மக்களுக்கு "உரிமை இல்லை" "உரிமை இல்லை" என ஒரு கூட்டம் பிதற்றி திரிந்த காலத்தில் இந்த கூட்டத்தில் ஒருவராக தான் இந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் இருந்திருந்தார்.இந்த கூட்டமே! பிற்காலத்தில் புலிகளாக உருவெடுத்தது.

வழிகாட்டியவர்களையே வழி அனுப்பி வைத்தது. இதில் இந்த முதியவர் தப்பிப்பிழைத்தது ஆயுள்பலமாகவே கருத வேண்டியுள்ளது.

திரும்பவும் தமிழன் என்கிற மேளத்தை தூக்கி அடிக்க வெளிக்கிட்டிருக்கிறார். வடமாகணத் தமிழனுக்கு அரசியல் என்பது எதுவுமே இல்லை. இருந்தால் ஆதாய-வாழ்வு அரசியல் தான்.

தமிழனைவிட சிங்களமக்கள் கேவலமான நிலைமையிலே வாழ்வு நடத்துகிறார்கள். இதை உணரும் போது சிலவேளைகளில் தமிழனின் அரசியல் போக்கு மேன்மைப் படலாம்.

அதுவரைக்கும் கிளிநொச்சியை திரும்பவும் ஒருமுறை தரிசிக்க வழி தேடிக்கொடுத்த மகிந்தராஜபக்சாவை வழிபடுவதே! ஆனந்தசங்கரி அரசியலுக்கு அழகானது.

தமிழன் தமிழன் தமிழன் உரிமை..சுகந்திரம் என ஓலமிடுவது வெறும் கப்சா. இது தமிழனின் அறிவிலிகளை ஏத்துப்பிழைக்கும் ஒருவகை சுரண்டல்-அரசியலே!.

Vani Ram ,  February 10, 2014 at 10:46 AM  

அதுவரைக்கும் கிளிநொச்சியை திரும்பவும் ஒருமுறை தரிசிக்க வழி தேடிக்கொடுத்த மகிந்தராஜபக்சாவை வழிபடுவதே! ஆனந்தசங்கரி அரசியலுக்கு அழகானது.

தமிழன் தமிழன் தமிழன் உரிமை..சுகந்திரம் என ஓலமிடுவது வெறும் கப்சா. இது தமிழனின் அறிவிலிகளை ஏத்துப்பிழைக்கும் ஒருவகை சுரண்டல்-அரசியலே!.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com