Sunday, February 23, 2014

ஒரு கொலைஞனின் வாக்குமூலம்! சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று

புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சக்கைசாத்திரி என்பர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருக்கின்றார். அவர் அங்கு அருளினியன் எனப்படும் ஆனந்தவிகடன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரை சந்தித்திருக்கின்றார். இந்திய இராணுவ காலத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கொலைகளின் பங்காளியான சாத்திரி அருளினியருக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றினை வழங்கியுள்ளார். இப்பேட்டி அருளினியனின் இணையத்தில் தொடர்சியாக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.


‘சாத்திரி” எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுக மாகியிருக்கலாம். ‘அவலங்கள்’ எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர். புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் ‘சியாம்’ என்கிற புனை பெயரில் இயங்கினார். புலிகள் அமைப்பில் வெடி பொருள் பிரிவில் பணியாற்றிதால் ‘சக்கை’ என்கிற பெயரும் சேர்ந்து ‘சக்கை சியாம்’ என பலராலும் அழைக்கப்பட்டார். புலிகளின் சர்வதேசப் பிரிவிலும் பணியாற்றி அதில் இருந்து வெளியேறிய பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கத் தொடங்கியதும் ‘சாத்திரி’ என்கிற புனை பெயரில் பத்திரிகைத் துறையிலும் எழுத்து துறையிலும் வலம் வருகிறார்.சாத்திரியாரை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். மூன்று தசாப்தகாலமாக போராடிய ஈழத் தமிழர் இனம் தமது தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தப் பேட்டி என்னால் எடுக்கப்பட்டது. இந்தப் பேட்டி உங்களிற்கு ஈழப் போராட்டம் சம்பந்தமான இன்னொரு முகத்தை பதிவு செய்யும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள் தயவு செய்து தொடர்ந்து படிக்க வேண்டாம்.

அன்புடன்,

அருளினியன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளத் தூண்டுதலாக அமைந்த சம்பவம் என்ன?

அந்தக்கால ஏனைய இளைஞர்கள் போல ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ள எனக்கும் தூண்டுதலாக அமைந்த சம்பவம் இலங்கையில் 83 ம் ஆண்டில் நிகழ்ந்த இனக் கலவரம்தான். 83 கலவரத்திற்கு முன்பே ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்திருந்தாலும் அது பற்றிய அக்கறைகள் ஏதுமற்ற சாதாரண பாடசாலை மாணவனாகவே இருந்தேன். ஆனால் 83 கலவரத்தின் தமிழர்களின் பாதிப்புக்கள் பற்றிய செய்திகள். தமிழ் சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்திகள் மற்றும் அகதிகளாக ஆயிரக் கணக்கில் கப்பலில் காங்கேசன் துறையில் வந்திறங்கிய கொழும்புத் தமிழர்களின் துயரங்களை நேரில் பார்த்ததும் ஒரு இளைஞனுக்கேயுரிய கோபமும் பழிக்கு பழிவாங்கும் உணர்ச்சியும் ஒன்று சேர என்னை ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.

பல விடுதலை இயக்கங்கள் இருந்த போதும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் இணைந்து கொள்ளக் காரணம் என்ன?

அன்று பல விடுதலை இயக்கங்கள் இருந்தது உண்மை. முதலில் அன்றைய கால கட்டத்தில் பெரிய இயக்கமாக இருந்த புளொட் அமைப்பில் சேருவதற்காகவே போயிருந்தேன். இயக்கத்திற்கு போனதுமே கையில் ஆயுதம் தருவார்கள் என எதிர்பார்த்து போயிருந்த எனக்கு அவர்கள் ஒட்டுமொத்த மக்கள் போராட்டம் நடக்கவேண்டும் என்று சொல்லி அரசியல் வகுப்புக்களை வைத்து வாழ்க்கையை வெறுக்கப் பண்ணி விட்டார்கள். அடுத்ததாக தீவிர இடதுசாரிக் கொள்கைகளை கொண்டிருந்த ஈ.பி. ஆர்.எல்.எவ்.அமைப்பிடம் போயிருந்தேன். அவர்களோ செஞ்சீனம். கியூப விடுதலைப் போராட்டம் என்கிற இரண்டு பெரிய புத்தகங்களை கையில் தந்து அதனை படித்து மனப் பாடம் செய்துகொண்டு வரச் சொல்லி அதில் கேள்விகளை கேட்டு சரியான பதிலை சொன்னால்தான் இயக்கத்தில் இணைப்போம் என்றார்கள். ‘செஞ்சீன’ புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன் சாதுவாக தலை சுற்றியது. புரியாத சொற்கள் கொண்டு எழுதப்பட்டிருந்த அதனைப் படிக்க தனி தமிழ் அகராதி ஒன்று தேவைப் பட்டது. கியூப விடுதலைப் போராட்டத்தை தூக்கிப் பார்த்தேன் வலு பாரமாக இருந்தது. இந்தப் புத்தகங்களை படிக்கின்ற நேரம் பேசாமல் பாடசாலைக்கே போய் படித்திருக்கலாம் என்று மனம் சொன்னது. இது வேலைக்காகாது என்று தோன்றிய கணத்தில் அவற்றை தூக்கியெறிந்து விட்டு புலிகள் அமைப்பை சேர்ந்த அன்பு என்பவரை சந்தித்தேன். அவர் உடனடியாகவே எனது கைகளில் 3.8 றீற்றா வகை கைத் துப்பாக்கியை கொடுத்து குறி பார்த்து சுடும்படி சொன்னார். புத்தகங்கள், பாடமாக்கல்கள், சொற்பொழிவுகள் எதுவுமே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. எனவே புலிகள் அமைப்பில் இணைந்து விட்டேன். இணைந்த பின்பு பயிற்சிகள் கடினமாக இருந்தது.

உலகப் புரிந்துணர்வு இல்லாத, நல்லது கெட்டது புரியாத இளைஞர்கள் கைகளில் ஆயுதம் கொடுத்ததது சரியா?

இந்தக் கேள்வியை நீங்கள் இந்திய உளவமைப்பான ரோவிடம் அல்லது ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுக்க முடிவு செய்த இந்திரா காந்தி அம்மையாரின் ஆவியிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அன்று ஈழ விடுதலை இயக்கங்களிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் இந்தியா கொடுக்காது விட்டிருந்தால் பிரபாகரன் மட்டுமல்ல மற்றைய இயக்கத் தலைவர்களும் இப்போது எங்காவது ஒரு வெளிநாட்டில் அகதி தஞ்சம் கோரி வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அல்லது எண்பதுகளிலேயே இறந்துபோயிருப்பார்கள். அதுவும் இல்லா விட்டால் இலங்கை சிறைகளில் இருந்திருப்பார்கள்.

இந்திய உளவு அமைப்பான ”றோ’வின் பங்களிப்பு போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிப் போர் வரை எப்படி இருந்தது?

இலங்கையில் அன்றிருந்த ஜே.ஆர். தலைமையிலான அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவே ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொடுக்க ‘ரோ’ அமைப்பு முன் வந்தது. இது அனைவரிற்கும் தெரிந்த விடயம். ஆனால் எம்மில் பலர் இந்திரா அம்மையார் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஏனெனில் இந்திய உளவமைப்பானது தனியாக ஒரு இயக்கத்திற்கு பயிற்சி கொடுக்காமல் புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ், ரெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ்

என ஜந்து விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சி கொடுத்ததன் மூலம் ஒரு இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போனாலும், இன்னொரு இயக்கத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்து தங்கள் சொற்படி இயக்கலாம் என்ற நரித்தனமான நோக்கம் இருந்தமையாலே ஆகும். இந்த இந்தியாவின் தந்திரத்தை உணர்ந்த புளொட் அமைப்பும் புலிகளும் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவோடு விலத்தியிருக்கவே விரும்பினார்கள். மற்றைய அமைப்புக்கள் பொருளாதார ரீதியாக முழுக்க முழுக்க இந்திய உளவமைப்பையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களிற்கு இருந்தது. பின்நாளில் புலிகளால் தடை செயயப்பட்ட பின்னர் தங்கள் பாதுகாப்பிற்காகவும் ‘றோ’ வோடு உறவுகளை கொண்டிருக்கவேண்டிய கட்டாயமும் அவர்களிற்கு இருந்தது. அதே நேரம் புலிகள் அமைப்பும் கூட ‘றோ’ வினது கட்டளைகளிற்கு இணங்க பல தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக புலிகள் 1985 ம் ஆண்டு அனுராத புரத்தில் பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதல். மருதானை மற்றும் புறக்கோட்டை குண்டு வெடிப்பு ஆகியனவற்றை நாங்கள் உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக மாலை தீவை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக புளொட் அமைப்பை வைத்து மாலை தீவு மீது இந்திய உளவமைப்பான ”றோ’ நடாத்திய நாடகத் தாக்குதல்கள் முக்கியமானவை. அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் தனது கைப் பிடிக்குள் வைத்திருப்பது, மீறிப் போகிறவர்களை அழித்து விடுவது இதுவே ‘றோ’ அமைப்பின் நோக்கம். புலிகள் அவர்கள் கட்டுப் பாட்டிற்கு அடங்க மறுத்தார்கள். ராஜீவ் காந்தி கொலையால் இழந்த கெளரவத்தையும் புலிகள் அமைப்பினை அழித்து முடித்ததன் மூலம் அவர்கள் தீர்த்துள்ளனர். ஆனால் இலங்கைத் தீவு இந்தியாவிற்கு அருகில் இருக்கும் வரை இந்தியாவின் அரசியல் தாக்கமானது இலங்கையில் இருந்து கொண்டே தானிருக்கும். அதனை ஈழத் தமிழர் தரப்பு எப்படி கையாள்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஈழத் தமிழரின் எதிர்கால அரசியலும் அவர்களின் வாழ்வும் அமையும்.இந்திய உளவமைப்பான ”றோ’ தான் புலிகளை அழித்து முடித்தது என்கிறீர்களா?இல்லை வேறு பல நாடுகளோடு இந்திய உளவமைப்பும் சேர்ந்தே அழித்தது. இலங்கையரசோடு சேர்ந்து இந்தியா மட்டுமே புலிகளை அழித்து முடித்ததாக எங்களில் பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் புலிகளை அழித்து முடிக்க அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும் வழங்கி அவர்களது சர்வதேச ஆயுத வழங்கல்களை தடுத்து நிறுத்தி புலிகளின் வானொலித் தொடர்புகளை ஒட்டுக் கேட்டு, அவர்களது கனரக ஆயுத நகர்வுகளை கண்காணித்து அனைத்தையும் உடனுக்குடன் இலங்கையரசிற்கு தெரியப் படுத்தி இலங்கை அரசு புலிகளை அழிக்க பேருதவி செய்தது அமெரிக்காவும் கனடாவுமே ஆகும். மேலும் நேரெதிர் முரண்பாடுகளைக் கொண்ட இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கியூபா, சீனா, ஜப்பான் என உலகமே ஓரணியில் திரண்டு இலங்கையரசிற்கு தேவையான அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து புலிகளை அழித்து முடித்தார்கள். ஆனால் இவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என நினைக்கிறேன். தங்களிற்கான குழியை புலிகள் தாங்களே தோண்டியிருந்தார்கள்.

நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக செய்த வேலைகளை கூறுங்கள் ?

புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சியை முடித்த பின்னர் இயக்கத் தலைமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரிற்கு வெடிபொருட்கள் பற்றிய விசேட பயிற்சிகள் கொடுக்கப் பட்டது. அதில் நானும் ஒருவன். அது பற்றிய பயிற்சி முடிந்ததும் ஈழத்திற்கு திரும்பிய நாங்கள் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான வெடி பொருள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த அப்பையா அண்ணையோடு இணைந்து மானிப்பாய் பகுதியில் ஒரு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கி அங்கு இயக்கத்திற்கு தேவையான கண்ணி வெடிகள், கைக்குண்டுகள், பொறி வெடிகள் எறிகணைகள் என அனைத்து வெடிபொருட்களையும் தயாரிக்கத் தொடங்கியிருந்தோம். முதன் முதலாக ஒரு விமானத்தையும் தயாரித்து பரிசோதனை பறப்புக்களும் செய்திருந்தோம்.பின்னர் 1987 ம் ஆண்டு இந்தியப் படையின் வருகையோடு விமானம் செய்யும் முயற்சிகள் கைவிடப் பட்டது மட்டுமல்ல அந்த தொழிற்சாலையும் இந்தியப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அடுத்ததாக 89 ம் ஆண்டு காயமடைந்து நாட்டை விட்டு வெளியேறிய நான் வெளி நாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு பிரிவில் முக்கியமாக வழங்கல் பிரிவில் இணைந்து வேலை தொடங்கியிருந்தேன்.

புலிகளுக்கு யுத்தத்தை நடத்த தேவையான வருமானம் எங்கிருந்து வந்தது?

அனைத்து இயக்கங்களினதும் ஆரம்ப கால தலைமறைவு வாழ்க்கை என்பது மிகவும் சிரமமானதாக இருந்தது. போராளிகள் தங்கள் பணத் தேவைகளை தங்கள் உறவுகள் மற்றும் குடும்பத்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள். பின்னர் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யப் பண்ணைகளை அமைத்தார்கள். இயக்கங்கள் வளரத் தொடங்க நிதித் தேவை அதிகரித்தது. அப்போது வங்கிக் கொள்ளைகளிலும், அரச நிறுவனங்கள், செல்வந்தர் வீடுகள் என கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். இதில் பிரபாகரன் கூடகுட்டிமணியோடு இணைந்து குரும்பசிட்டி என்னுமிடத்தில் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு பிடிபடாமல் இருக்க ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு ஓடிய சம்பவமும் நடந்திருக்கின்றது. ஆனால் எம் மக்கள் மத்தியில் இந்தக் கொள்ளைகள் இயக்கங்கள் மீதான வெறுப்பை விதைக்கத் தொடங்கியிருந்தது. அதனால் புலிகள் அமைப்பானது கொள்ளையடிப்பதை கைவிட்டுவிட்டு வேறு வழிகளில் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சுய உற்பத்திகளாக சவர்க்காரம், விளக்குமாறு, தும்புத்தடி, குளிர்பானங்கள் என உற்பத்தி செய்து விற்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் அவற்றின் தரம் குறைந்திருந்த காரணத்தால் மக்கள் அதனை பெரிதும் விருப்பத்தோடு வாங்கவில்லை. 84ல் ஒரு ரூபாய் சவர்க்காரத்தை விற்பதற்காக நான் ஒருவரோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பேசி உலக விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், நாம் ஏன் போராடவேண்டும் என்றும் நா வறண்டு போகுமளவிற்கு விளக்கம் கொடுத்தும் அவர் கடைசிவரை சவர்க்காரம் வாங்கவில்லை நிலைமை இப்படியாகத்தான் இருந்தது. அதே காலகட்டத்தில் தான் இந்தியா மற்றும் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்களின் உதவி புலிகளிற்கு பேருதவியாக இருந்தது. ஆனால் புலிகளின் தேவைகள் அதிகரிக்க அவர்கள் உலகளாவிய ரீதியில் போதைப் பொருட் கடத்தலில் ஈடுபட்டு அந்த வருமானத்தில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். இலங்கையரசே உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஆயுதம் வாங்கிக் கொண்டிருந்த போது புலிகள் தங்கு தடையின்றி நவீன ஆயுதங்களை தங்கள் பணத்தில் வாங்கியதன் இரகசியம் இதுதான். அதே நேரம் வெளிநாடுகளிலும் பெரிய சிறிய வியாபார நிறுவனங்கள், கோயில்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வைத்திய சாலைகள் என வருமானம் வரும் அனைத்தையும் பினாமிப் பெயர்களில் புலிகள் இயக்கினார்கள். 94 ம் ஆண்டுகளிற்கு பின்னர்தான் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெருமளவான நிதி சேகரிப்புக்கள் புலிகளால் மேற்க்கொள்ளப்பட்டது. புலிகளிற்கு அடத்தபடியாக பெருமளவு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது புளொட் அமைப்பாகும்.

விடுதலையின் பெயரால் மனித குலத்திற்கு எதிரான போதைப் பொருட் கடத்தலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டது அறம் கிடையாது அல்லவா?

புலிகளின் விடுதலைப் போராட்டம் என்பது முழுக்க முழுக்க ஆயுதத்தை யுத்தத்தை மட்டுமே நம்பியது. இங்கு யுத்தம் என்று வரும் போதே அங்கு அறம் அடிபட்டுபோய் விடுகிறது. யுத்தத்திற்கான ஆயுதத்தை எதிரே நிற்பவனை கொன்று எடுத்தாலென்ன கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவனை போதைக்கு அடிமையாக்கி அந்தப் பணத்தில் ஆயுதம் வாங்கினாலென்ன எல்லாம் ஒன்றுதான் என்ற மன நிலை இருந்தது .சுருக்கமாக சொன்னால் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதைப் போலத்தான் இதுவும்.

விடுதலைப் புலிகளின் போதைப் பொருள் கடத்தலுக்கான உலகளாவிய வலைப்பின்னல் இன்று யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது?

அந்த வலைப் பின்னல் புலிகள் அமைப்பானது 2001 ம் ஆண்டு தனது சர்வதேச அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்த பின்னர் புதிதாக பொறுப்பெடுத்தவர்களின் விவேகமற்ற செயற்பாடுகளால் இன்று சர்வதேச உளவமைப்புக்களாலும்.சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவாலும் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டதோடு அதன் பொறுப்பாளர்களும் இன்று பல நாடுகளிலும் கைது செய்யப் பட்டு சிறைகளில் வாழுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் புலிகள் அமைப்பால் செய்யப்பட்ட சகோதரப் படுகொலைகளை எப்படிப் பார்கிறீர்கள்?

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முதற் படியாக அமைந்த விவேகமற்ற பக்கங்கள் அவை. வேகம் மட்டுமே இருந்த இளைஞர்களான எங்களிடம் அன்று விவேகம் இருந்திருக்கவில்லை. சரியான வழிநடத்தல்கள் இருந்திருக்கவில்லை. இந்திய இலங்கை உளவுப் பிரிவுகளின் சூழ்ச்சிகளை சரியாக இனம் கண்டு அவற்றை முறியடிக்கும் ஆளுமை இருந்திருக்கவில்லை. இவற்றின் தொடர்ச்சியே சகோதரப் படுகொலைகளிற்கு காரணங்களாக இருந்தது. ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களிற்குள் மோதிக் கொள்ளாமல் ஓரணியில் நின்று இயங்கியிருந்தால் 86 ம் ஆண்டே தமிழீழம் கிடைத்திருக்கும். இன்னொரு விடயம் சகோதரப் படுகொலைகள் என்பது புலிகளால் மட்டுமல்ல அனைத்து இயக்கங்களாலுமே நடத்தப்பட்டது. ஆனால் புலிகள் அதனை அதிகமாகவும் மோசமாகவும் செய்தார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நீங்கள் நேரடியாக எத்தனை கொலைகள் செய்துள்ளீர்கள்?

ஏனிந்த கொலை வெறிக் கேள்வி?, நான் எனக்காக எந்தக் கொலையையும் செய்திருக்கவில்லை. நான் செய்த கொலைகள் அனைத்துமே நான் சார்ந்து இயங்கிய அமைப்பிற்காகவே செய்யப்பட்டன. நான் நேரடியாக செய்த கொலைகள் இந்திய அமைதிப் படைக் காலத்தில்தான் நடந்தன. இந்தியப் படைகளிற்கு எங்களை அல்லது நாங்கள் பதுங்கியிருக்கும் இடங்களை. எங்களிற்கு உணவளித்து எம்மை பாதுகாத்தவர்களை காட்டிக் கொடுத்து இந்தியப் படைகளோடு சேர்ந்து இயங்கியவர்களை அழிக்கவேண்டிய தேவை இருந்தது. அப்படி எனது பொறுப்பில் இருந்த கிராமங்களில் பதினைந்து அல்லது பதினாறு பேர் என்னால் நேரடியாக அழிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு உயிரைப் பறிக்கும் உரிமையை, உங்களின் வார்த்தைகளில் சொன்னால் அழிக்கப்பட வேண்டியவர்களை அழிக்கும் உரிமையை விடுதலையின் பெயரில் நீங்கள் எடுத்துக் கொண்டது சரியா?

நான் இணைந்திருந்தது ஆயுதத்தால் மட்டுமே பேசத் தெரிந்த ஒரு அமைப்பு. அங்கு பட்டையும் கொட்டையும் (உருத்திராட்சம்) அணிந்து கொண்டு பஜனை பாட முடியாது. ஆயுதத்தை வைத்து ஆராதனை செய்துகொண்டிருக்க முடியாது. ஆயுதம் தூக்கிய இயக்கம் மட்டுமல்ல ஆயுதம் தூக்கிய ஒரு தனி மனிதன் ஆனாலும் அடுத்தது வன்முறை அல்லது கொலைதான். இது உலக நியதி. உலகம் இப்படித்தான் இயங்குகிறது. சரி பிழை என்பதெல்லாம் அடுத்த கட்டம்.

ஆகவே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்களா?

இல்லை யாருடைய உயிரையும் எடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மரண தண்டனை உட்பட. ஆனால் என்னை ஒருவன் கொல்ல வரும்போது அதனை எதிர்த்து போராட வேண்டிய தேவை எனக்குண்டு அல்லவா?

நீங்கள் நேரடியாக செய்த ஒவ்வொரு கொலையையும் விபரிக்க முடியுமா?

இது மனம் விட்டு விபரிக்கிற ஒரு சம்பவம் அல்ல. மோசமான ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாத சம்பவங்கள். ஒருவரை போட வேண்டும்[ கொலை செய்யவேண்டும்] என முடிவு செய்து விட்டால் அவரைப் பற்றிய தகவல்கள் அவரது நடமாட்டம் என்பவற்றை திரட்டுவோம். பின்னர் ஒரு கணத்தில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது தலையை பிளக்கும் அவ்வளவுதான். சில நேரங்களில் தவறுதலான தகவல்களால் தவறுகளே செய்யாதவர்களும் தவறான முறையில் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றது.

ஒருவரை கொலை செய்யும் கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது சங்கடத்தை அல்லது பதற்றத்தை போக்க மது அருந்தவேண்டியிருந்தது (கள்ளு) பின்னர் போகப்போக பழகிப்போனது.

விடுதலைப் புலிகள் மது அருந்த மாட்டார்கள் என கூறுவார்களே?

புலிகள் அமைப்பில் மது அருந்தக்கூடாது புகைப் பிடிக்கக்கூடாது என்பது ஒரு பொதுவான விதிதான். பிரபாகரன் தேனீர், காப்பி கூட அருந்தமாட்டார். ஆனால் பல முன்னாள் போராளிகள் இதில் விதி விலக்காக இருந்தார்கள். களவாக புகைபிடிக்கவும் மது அருந்தவும் செய்தார்கள். போராளிகளிடையே சிகரற்றிக்கு ‘சயன்ஸ்’ என்கிற சங்கேத மொழி கூட இருந்தது. நான் முதலாவதாக காயமடைந்த அன்று வடமராச்சி பகுதியில் நாங்கள் பதினைந்து பேர் பல நூறு இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தோம். அன்று முழுதும் எமக்கு உணவு கிடைக்கவில்லை தென்னையில் இருந்து இளநீரைக் குடித்து தேங்காயை சாப்பிட்டதுடன் பனையில் இருந்து கள்ளையும் இறக்கிக் குடித்திருந்தோம். அன்றிரவு முற்றுகையை தகர்த்து வெளியே வரும் போது எமது போராளிகளில் பலர் இறந்து போனார்கள். நான் கடுமையாக காயமடைந்திருந்தேன். போதையில் இருந்ததானால் அதிகளவு இரத்தம் வெளியேறியதால் மயக்கமடைந்திருந்தேன்.

நீங்கள் நேரடியாக சம்பந்தப்படாமல் மறை முகமாக சம்பந்தப்பட்ட கொலைகள் எத்தனை?

கண்ணி வெடிப் பிரிவில் இருந்ததனால் கண்ணி வெடியை வைத்து அடிச்சிட்டு போய்க் கொண்டே இருக்கவேண்டியது தான். கணக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உங்கள் உயிர் நண்பனை கொலை செய்ததாக ஒரு முறை கூறியிருந்தீர்கள், அந்தக் கணத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆம். அவன் எனது சிறு வயது நண்பன். அவனை நானே கொலை செய்தேன். அவன் வேறு இயக்கத்தில் இணைந்திருந்தான் புலிகள் அமைப்பால் அந்த இயக்கம் தடை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவில் தங்கியிருந்தவன் இந்தியப் படைகள் ஈழத்திற்கு வந்தபோது அவனும் இந்திய உளவமைப்பால் ஈழத்திற்கு அழைத்து வரப் பட்டிருந்தான். அவனை நோக்கி துப்பாக்கி நீண்டது ஒரு கணத்தில் நான் எடுத்த முடிவு. ஏனெனில் கொல் அல்லது கொல்லப் படுவாய் என்கிற கால கட்டம் அது. ஆனால் அந்தக் கொலையால் எனது மனதில் உள்ள தாக்கம் என் மரணம் வரை தொடரும். அய் மிஸ் ஹிம்.

நீங்கள் செய்த கொலைகளுக்காக எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?

தம்பி! ஒரு முக்கியமான விடயம் கொலைகள் என்பது எவையுமே எனது தனிப்பட்ட காரணங்களிற்காக செய்யப்பட்டது அல்ல. நான் செய்த கொலைகள் எல்லாமே ஒட்டு மொத்த ஈழத் தமிழ் மக்களின் விடுதலை என்று உதித்த, அந்த மக்களின் பிரதிநிதிகள் என்று செயற்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினராக இயங்கிய எனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளாகும். ஒரு இராணுவமாகட்டும், ஆயுத குழுவாகட்டும் கட்டளைக்கு கீழ்படிதல் என்பது மிக முக்கியமானது. அதன்படி எனக்கான கட்டளைகளிற்கு நான் கீழ்ப்படிந்து இயங்கினேன். கொலைகள் என்பன எனக்கு வழங்கப்பட்ட கட்டளைகள். ஆனால் குற்ற உணர்வு என்பது இருக்கத்தான் செய்கின்றது. தினமும் அதற்காக வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

விடுதலையின் பெயரால், விடுதலைப் புலிகள் எத்தனை சக தமிழர்களை கொலை செய்து இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

அதுபற்றிய சரியான தரவுகள் யாரிற்கும் தெரியாது என நினைக்கிறேன். நான் உட்பட.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார அமைப்பு என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?

ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் அமைப்புக்களுமே கொலைகளை செய்த அமைப்புக்கள்தான். அதில் விடுதலைப் புலிகள் விதி விலக்கல்ல.

நீங்கள் உலகத்தில் அதிகம் நேசிப்பவர் யார்?

எனது மகள்.

உங்களின் மகளை நீங்கள் நேசிப்பது போல நீங்கள் கொலை செய்தவர்களை சில உயிர்கள் நேசித்திருப்பார்கள், நேசிப்பவர்களை கொலை செய்தது மூலம் அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது சரியா?

தவறுதான். இதற்கான பதிலை ஏற்கனவே கூறிவிட்டேன். அதாவது கட்டளைகளிற்கு கீழ்படிதல். இன்றும் நான் செய்த கொலைகளுக்காக மிகவும் வருந்துகிறேன்.

நீங்கள் கொலை செய்த ஒருவரின் உறவினரை, அல்லது நீங்கள் கொலை செய்த ஒருவரை நேசிப்பவரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

சொல்லத் தெரியவில்லை.

புலிகள் அமைப்பானது இலங்கை இந்தியா தவிர்ந்து வெளி நாடுகளிலும்.குறிப்பாக பிரான்சிலும் சில கொலைகளை செய்ததாக அறிய முடிகிறது அதைப் பற்றி சொல்ல முடியுமா?

பிரான்சில் மாத்திரம் சபாலிங்கம், நாதன் , கஜன் என மூன்று பேரை புலிகள் கொலை செய்துள்ளார்கள்.

சாபாலிங்கம் புலிகளால் கொல்லப் படவில்லையென்று நீங்களே முன்பு சில இடங்களில் மறுத்திருக்கிறீர்களே?

உண்மைதான் காரணம் அன்று புலிகள் அமைப்பு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது அதற்கென பல தேவைகளும் நோக்கங்களும் இருந்தது. அதன் காரணமாக புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சபாலிங்கம் புலிகளின் அன்றைய சுவிஸ் பொறுப்பாளரின் வழிநடத்தலில் கொல்லப்பட்டார். அந்த சுவிஸ் பொறுப்பாளர் இப்பொழுது வேறொரு நாட்டில் வசிக்கிறார். அதனை புலிகள் தாம் செய்யவில்லையென மறுத்ததோடு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த என் போன்றவர்களிற்கும் சபாலிங்கத்தின் கெலையை மறுக்கும்படி உத்தரவு கிடைத்திருந்தது. ஆனால் இன்று புலிகளோ அவர்களின் தேவைகளோ நோக்கங்களோ எதுவும் இல்லாத காரணத்தால் நான் அதனை மறுத்துக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை. சபாலிங்கத்தை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான்.

நாதன், கஜன் கொல்லப் பட்டதற்கான காரணங்கள் தெரியுமா?

உண்மையில் நாதன்தான் புலிகளில் இலக்கு. காரணம் நாதனே புலிகளின் பிரான்சிற்கான நிதிப் பொறுப்பில் இருந்தவர். இவர் புலிகளின் பெருமளவு நிதியை கையாடல் செய்ததால் பல தடைவை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளரால் எச்சரிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தொடர்ந்தும் நிதி கையாடல் செய்ததால் அவரை பாரிசில் வைத்து புலிகள் கொலை செய்தனர். ஆனால் அவரோடு கூடவே நின்றிருந்த கஜன் கொலையாளியை அடையாளம் கண்டுவிட்டிருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்து விடும் என, அதன் அமைப்பில் அங்கத்தவராக இருந்த காலங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

இல்லை கனவிலும் நினைத்திருக்கவில்லை. புலிகள் அமைப்பு மிகத் திறமையான போராளிகளின் வீரத்தாலும், தியாகங்களாலும் திறைமைகளாலும் நன்கு திட்டமிடப்பட்டு சிறுகச் சிறுக கட்டியமைக்கப்பட்டதொரு விடுதலை அமைப்பு. ஒற்றைக் கைத் துப்பாக்கியோடு தொடங்கப்பட்டு ஆட்லெறிகள்.பல குழல் எறிகணைகள், ஏவுகணை, விமானம் என கண் முன்னாலேயே வளர்ந்து நின்ற இயக்கம். இப்படி அழிந்து போகும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்விக்கு பிரதான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன?

அதற்கு நிறைய அக புற காரணிகள் உள்ளன.பிரதான காரணங்களில் முதலாவது சர்வதேச அரசியல் ஓட்டத்தை சரியாக கணித்து அதற்கேற்ப சில ராஜதந்திர நகர்வுகளை செய்து புலிகள் தங்களிற்கானதொரு நெளிவு சுழிவு அரசியலை செய்யாதது. இரண்டாவது, புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அவர்கள் ஒரு நிழல் அரசை அமைக்கத் தொடங்கியபோது இயக்கத்தினுள் எழுந்த அதிகார குழுக்கள் தங்களில் யார் அதிகம் பிரபாகரனை புகழ்ந்தும் போற்றியும் அதிக அதிகாரங்களை தங்கள் கைவசப்படுத்த முயல்வது என்பதில் போட்டியிட்டனர். இந்தப் புகழ்ச்சிகளிற்கு இறுதிக் காலங்களில் பிரபாகரனும் மயங்கத் தொடங்கியிருந்தார் என்பது கவலைக்குரிய விடயம். இந்த அதிகாரக் குழுக்களில் முக்கியமானவை வெளிநாட்டு பிரிவுகளை கையகப்படுத்திய கஸ்ரோ தலைமையிலான அனைத்துலகச் செயலகம். மற்றும் சூசை தலைமையிலான கடற்புலிகள். இந்த அதிகாரப் போட்டியில் அதுவரை உண்மையாக விசுவாசத்தோடு உழைத்த தலைமையை புகழ்ந்து கொண்டிருக்காமல் மக்கள் விடுதலையை முன்வைத்து வேலை செய்த பல மூத்த போராளிகள் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் . வெளிநாட்டு கட்டமைப்பு பொறுப்பாளர் கே.பி. போன்றவர்கள் உட்பட பலர் புலிகள் இயக்கத்தை விட்டு தூக்கியெறியப்பட்டனர். அதே போல 2001 ம் ஆண்டு என்னையும் புலிகளின் தலைமை வெளியேற்றியது.

சூசை தலைமையிலான கடற்புலிகள் அமைப்பு விட்ட தவறு என்ன?

சூசை தலைமையிலான கடற் புலிகளின் தவறு என்று சொல்லமுடியாது, சூசையின் பேராசை என்றுதான் சொல்லவேண்டும். புலிகளின் கே.பி கம்பனியின் சர்வதேச வலையமைப்பில் 96 களிற்கு முன்னர் இருந்த பெரும்பாலானவர்கள் சம்பளத்திற்கு பணிபுரிபவர்களாகவே இருந்தனர். ஆனாலும் அவர்கள் விசுவாசத்தோடும், நேர்மையாகவும் வேலை செய்தனர். 96 களின் பின்னர் பெருமளவான பயிற்றப்பட்ட கடற்புலிகள் சர்வதேச வலையமைப்பில் இணைக்கப் பட்டனர். சர்வதேச கடலோடிகளில் பெரும்பாலானவர்கள் கடற்புலிகளாக இருந்தார்கள். ஆனால் ஆயுதச்சந்தை முகவர்களுடான தொர்புகள், பேரம் பேசுதல் என்பன பழையவர்களிடமே இருந்தது. ஆனால் சூசையோ கப்பல் ஓடத் தெரிந்து விட்டால் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கிவிடலாமென நினைத்தார். அதனால் பல குழுக்களாக இயங்கிய சர்வதேச வலையமைப்பை மொத்தமாக பறித்தெடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார். அதுவரை பல நவீன ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு போய் சேர்த்தவர்களை ஒட்டு மொத்தமாக நீக்கி சூசை பொறுப்பெடுத்த பின்னர் ஒரு ஆணியைக் கூட சூசையால் வன்னிக்குள் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லையென்பது சோகமான உண்மை.

இறுதி போரின் முடிவை எப்படிப் பார்கிறீர்கள்?

30 ஆண்டுகாலம் இடைவிடாத யுத்தம் முடிவிற்கு வந்தது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த 30 ஆண்டு காலம் ஈழத் தமிழினம் கொடுத்த விலையின் பலாபலன் என்னவென்று பார்த்தால் எதுவும் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். உயிரிழப்புக்களை தவிர்த்து எமக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்க்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் புலிகள் அமைப்பு அதனை சரியாக தமக்கு சாதகமாக பயன்படுத்தாமல் நழுவ விட்டது. இன்று அந்த அமைப்பும் முழுதாக அழிந்துபோனதோடு ஈழத் தமிழ் மக்களையும் ஒரு அரசியல் சூனியத்திற்குள் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இதிலிருந்து தமிழினம் மீண்டு வருவதற்கு பல காலங்கள் எடுக்கும். ஈழத் தமிழ் மக்களை சரியாக வழி நடத்தும் ஒரு தலைமையும் அமையவேண்டும். அமையுமா என்பது கேள்விக் குறிதான்?.

பாகம் 2

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?


ஆம் வெளியேறினார்கள். இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையான சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கி, ஆரம்ப இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் தாய்லாந்தில் நடைபெற்றது. தாய்லாந்தில் நடந்த இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையின் போதே, மேலதிகமாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதி கருணாவும் புலிகளின் பேச்சு வார்த்தை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தை நோர்வே 'ராடிசன்' விடுதியில் நடைபெற்றிருந்தது. அங்கு புலிகள் இலங்கை அரசாங்கம் இடையான பேச்சு வார்த்தைக்கு ஆதரவும் அனுசரணையும் கொடுத்த சுமார் 30 நாடுகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். இங்கு வைத்துத்தான் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகள் அன்ரன் பாலசிங்கத்திடம் தனி நாட்டுக் கோரிக்கையை தவிர்த்து, தமிழர்கள் சுதந்திரமாகவும் சமாதானத்தோடும் வாழும் வகையிலான ஏனைய தீர்வுகளை புலிகள் தரப்பிலிருந்து முன்மொழியும்படியும் அதனை தாம் பரிசீலிப்பதாகவும், ஆனால் தனி நாட்டுக் கோரிக்கையை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக கூறி விட்டார்கள். சர்வதேசத்தின் பொறியில் மாட்டாமல் அதே நேரம் ஸ்ரீ லங்கா அரசிடம் ஏமாந்து போகாமல் இருப்பதற்காக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமயோசிதமாக புலிகள் சுயநிர்ணய உரிமையை பரிசீலிக்கத் தயார் என்றும் அதில் உள்ளக சுய நிர்ணயம், வெளியக சுய நிர்ணயம் என இரண்டு வகையுண்டு எனவும் இந்த இரண்டு வகையில் தமிழர்களிற்கு எது சாதகமானதோ அதனை தாம் பரிசீலிக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதனைக் கேட்ட இலங்கை அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளிற்கு குழப்பம் ஏற்பட்டது. அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா "சுய நிர்ணயத்தில் உள்ளகம், வெளியகம் என்று எதுவும் இல்லை இப்போதுதான் இதைப்பற்றி நான் கேள்விப்படுகிறேன்" என்று அறிக்கையும் விட்டார். உண்மையில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்ட ' உள்ளக சுயநிர்ணய உரிமை' என்பது பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களை வழங்குகிறது. ஆனால் அன்ரன் பாலசிங்கத்துடன் புலிகள் சார்பாக பேச்சு வார்த்தையிலில் கலந்து கொண்ட தமிழ்ச்செல்வன் உடனேயே பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு "பாலசிங்கத்தார் தமிழீழக் கொள்கையை கை விட்டு விட்டார்" என்று போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 'சுயநிர்ணயம்' என்பது பாலசிங்கம் அவர்களின் சொந்தக் கருத்தேயன்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருத்து அல்ல என்றும் அறிக்கையும் விட்டிருந்தார். அதற்கடுத்ததாக மீண்டும் தாய்லாந்தில் நடந்த நான்காவது பேச்சு வார்தையிலும், ஜந்தாவதாக ஜேர்மன் பேர்லினில் நடந்த பேச்சு வார்த்தையிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஓரம் கட்டப்பட்டது மட்டுமல்லாது, அந்தப் பேச்சு வார்த்தை முடிந்ததும் வன்னிக்கு அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கும் பிரபாகரனிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நடந்த கடும் விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் திரும்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நிலை காரணமாக அவர் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிவிட்டாரெனவும், அவரது பொறுப்பினை தமிழ்ச்செல்வன் ஏற்பார் எனவும் புலிகளின் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர்.


அதாவது அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார் எனக் கூறுகிறீர்களா?


அன்ரன் பாலசிங்கம் பலவந்தமாகத்தான் வெளியேற்றப் பட்டார். பேச்சு வார்த்தைகளின் போக்கை கவனித்தபடியே இருந்தவர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பல தடைவை காப்பாற்றிய தன்னால் இந்தத் தடைவை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என தனது இறுதிக் காலங்களில் பலரிடம் சொல்லி கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.

நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப்படுத்தியது யார்?

புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவு பொறுப்பாளராகவும் பிரான்ஸ் பொறுப்பாளராகவும் இருந்த லோறன்ஸ் திலகரே நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப் படுத்தினார். ஆனால் இந்தக் கொலைகளை பல கோணத்தில் ஆராய்ந்த பிரெஞ்சு காவல் துறை புலிகளே இதனை செய்தார்கள் என்று தீர்மானித்து அவர்களை நோக்கி விசாரணைகளைத் திருப்பினர். கைதாவதில் இருந்து தப்பிக்கும் முகமாக லோறன்ஸ் திலகர் வன்னிக்கு தப்பிச் சென்றார். நாதன், கஜன் கொலையை நன்கு திட்டமிடாமல் சொதப்பியதற்காக தலைமையால் திலகரின் பதவி நிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிலகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். வன்னி சென்றிருந்த திலகரின் தொடர்புகள் ஏதும் கிடைக்காததால், பிரான்சில் வாழ்ந்து வந்த அவரின் மனைவி அவரின் உறவினர்களிடம் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் திலகர் இப்போது எங்கே?


இறுதியுத்தம் வரை புலிகளுடன் இருந்த இவர் இறுதி யுத்தத்தில் இறந்து போய் விட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

சபாலிங்கத்தின் கொலையை வழிப்படுத்தியது யார்? சபாலிங்கத்தை கொலை செய்யும் கட்டளை தலைமையிடம் இருந்து வந்ததா?


சபாலிங்கத்தை கொல்லும் கட்டளை தலைமையிடமிருந்தே வந்ததாகத்தான் அறிகிறேன். காரணம் சபாலிங்கமும் ஈழபோராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தமிழ் மாணவர் பேரவையில் இருந்தவர் ஆரம்ப காலத்தில் பிரபாகரனிற்கும் நெருக்கமாக இருந்ததோடு அவரது தலைமறைவு வாழ்க்கை காலத்தில் பரந்தன் உப்பள பகுதியில் பிரபாகரன் மறைந்திருக்க உதவியவர். இவர் பின்னர் பிரான்சிற்கு இடம்பெயர்ந்த பின்னர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் பற்றி ஒரு ஆவணப் படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆவணப்படம் வெளியானால் பிரபாகரனின் பெயரிற்கு களங்கம் ஏற்படும் என்பதாலேயே சபாலிங்கத்தை கொலை செய்யும் படி பிரபாகரன் உத்தரவிட்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தை விபரமாக தாராகி சிவராம் அவர்களே தாயகம் பத்திரிகையில் முன்பு எழுதியிருந்தார். அதனை இனியொரு டொட்.கொம் சபாநாவலன் மீள் பிரசுரம் செய்துள்ளார்.

பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக இருந்த பரிதி என்கிற றேகனைக் கொன்றது யார்?

பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்த பரிதி (றேகன்) கொலை பற்றி நான் ஏற்கனவே கனடாவிலிருந்து வெளியாகும் பூபாளம் பத்திரிகையில் பங்கு பிரிப்பும் படுகொலையும் என்றொரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன், அது இன்னமும் எனது வலைப் பக்கத்தில் உள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது பல மில்லியன் டாலர் பெறுமானமுள்ள சொத்துக்களை யார் எப்படி பிரிப்பது என்பதில் பெரிய போட்டிகளும், அந்தச் சொத்துக்களுக்காக சண்டைகளும் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு போட்டியில் ஒரு குழுவினரால் கூலிக்கு அமர்த்தப் பட்டவர்களால் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார். இவரது கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டிந்தனர். ஆனால் பிரான்சில் இது போன்ற வந்தேறு குடிகளான வெளிநாட்டவர்களின் குழு மோதல்களையும் அதனால் நடக்கும் கொலைகளையும் பற்றி பிரெஞ்சு காவல்துறையினர் அதிகளவு அக்கறை கொள்வதில்லை, கொன்றவனும் வெளிநாட்டவன் செத்தவனும் வெளிநாட்டவன் என்பதால் அவர்கள் அதைக் கணக்கெடுப்பதில்லை. அதே நேரம் தங்கள் நாட்டிற்கோ தங்கள் மக்களிற்கோ பாதுகாப்பு பிரச்சனை என்று வரும்போது பிரெஞ்சு காவல்துறையினரின் நடவடிக்கைகள் இறுக்கமாக இருக்கும். எனவே பரிதி கொலையில் கைதானவர்களும் சத்தமின்றி விடுதலை செய்யப் பட்டு விட்டனர்.

பரிதியை கொன்ற குழு எது?

பரிதியால் வளர்க்கப்பட்ட வன்முறைக்குழுவான 'பாம்பு குறூப்' எனப்படும் குழுவில் இயங்கியவர்களே பரிதியைக் கொன்றார்கள்.

பரிதி வன்முறை குழுவை வளர்த்தாரா? விபரமாக அதைப்பற்றி கூற முடியுமா?

பரிதி மட்டுமல்ல வெளிநாடுகளில் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் அனைவருமே காலங் காலமாக தங்களிற்கென ஒரு வன்முறை குழுவை தங்களிற்கு கீழே இயக்கியபடிதான் இருந்தார்கள். அதில் பெரும்பாலும் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வெளிநாடு வந்துசேர்ந்தவர்களும், நிரந்தர வதிவிட உரிமையற்ற, அல்லது வேலையற்ற பல இளைஞர்களும் இருந்தார்கள். புலிகளிற்கு பணம் கொடுக்க மறுப்பவர்கள், புலிகளிற்கு எதிராக கருத்து வைப்பவர்களை, எழுதுபவர்களை மிரட்டுவது, அடிப்பதுதான் இவர்களதுவேலை. ஜரோப்பாவில் இப்படியான மிரட்டுதல், அடித்தல் போன்ற வன்முறை கலாச்சாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் சுவிஸ் பொறுப்பாளராக இருந்த முரளியும் பிரான்ஸில் சுக்குளா என்பவரும் மிக முக்கியமானவர்களாவார்கள்.

'சுக்குளா' பற்றி விபரமாக சொல்ல முடியுமா?


தற்சமயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வசிக்கும் இவர் புலிகள் அமைப்பில் வடமராச்சி பகுதியில் உள்ள நெல்லியடி மற்றும் கரவெட்டி பகுதிகளிற்கு பொறுப்பாளராக இருந்தவர். இந்திய ராணுவ காலத்தில் அன்ரன்பாலசிங்கம் அவர்களும் அவரது மனைவி அடேலும் இவரது பாதுகாப்பில்தான் இருந்தார்கள். இவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டதும் புலிகளின் ஏராளமான ஆயுதங்களை காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவிடத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டிருந்தார். இவரது தகவலை வைத்து அன்ரன் பாலசிங்கமும் அவரது மனையும் இருந்த மறைவிடத்தை இந்திய இராணுவம் சுற்றி வளைத்திருந்தனர். ஆனால் பொது மக்களின் உதவியால் அன்று அவர்கள் தப்பி விட்டிருந்தார்கள். அதன் பின்னர் நெல்லியடிசந்தியில் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து தலையாட்டியாக இருந்து புலி ஆதரவாளர்கள் பலரையும் காட்டிக் கொடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த புலிகளின தலைமை அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. சுக்குளாவை கொல்வதற்காக அன்று அந்தப் பகுதிகளில் இயங்கிய புலிகள் பல தடைவை குறிவைத்தார்கள், ஆனால் சுக்குளா தப்பிவிட்டார். பின்னர் இவர் காங்கேசன்துறை முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தார். இந்திய இராணுவம் இவரை விடுதலை செய்தபோது தனக்கு புலிகளால் உயிருக்கு ஆபத்து எனவே தன்னை கொழும்பில் கொண்டு போய் விடும்படி கோரிக்கை வைத்ததையடுத்து இந்திய இராணுவம் இவரை தங்கள் விமானத்தில் கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விட்டிருந்தார்கள். அங்கிருந்து வெளிநாடு வந்து சேர்ந்தவர் புலிகளிற்கு பயந்து அடங்கி இருந்தார். பின்னர் யாழ் மாவட்ட தளபதியக இருந்த கிட்டு ஜரோப்பா வந்திருந்த சமயம் இவரை தேடி கண்டு பிடித்து தலைமையிடம் கதைத்து இவருக்கு மன்னிப்பும் வழங்கியதோடு மீண்டும் வெளிநாடுகளில் இயக்கத்திற்கு வேலை செய்யும் பொறுப்பையும் கொடுத்திருந்தார்.

தலைமையால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு கிட்டு அவரைத் வலிந்து தேடிப்பிடித்து தலைமையிடம் மன்னிப்பு வாங்கிக் கொடுத்து அவரை மீண்டும் இயக்கத்திற்கு வேலை செய்யவைக்க வேண்டிய தேவை என்னவாக இருக்கும்?

சுக்குளாவும் கிட்டுவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அதே நேரம் அவர்களது ஆழமான நட்பிற்கு பின்னரான ஒரு கதையும் உண்டு. 1986 ம் ஆண்டு ரொலே இயக்கம் புலிகளால் அழிக்கப் பட்டதை கண்டித்து யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் யாழ் பல்கலைக் கழகத்தில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்யக்கூடாது என்றொரு சட்டத்தை புலிகள் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் சில மாணவர்கள் புதிதாக இணைந்த மாணவிகளை பகிடி வதை செய்திருந்தார்கள். அதற்காக பல மாணவர்கள் கிட்டுவால் தண்டனை பெற்றிருந்தனர். அப்படி தண்டனை பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இது யாழ்குடா நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக இருந்தது. ஆரம்பத்தில் இந்தக் கடத்தலை ஈ.பி.ஆர்.எல்.எவ்.இயக்கமே செய்ததாக புலிகளால் பரப்புரை செய்யப் பட்டது. ஆனாலும் புலிகளே கடத்தியதாக மாணவர்கள் நம்பினார்கள். அந்தக் கடத்தலை கிட்டுவின் உத்தரவின் பெயரில் நடத்தியவர்களில் சுக்குளாவும், தெல்லிப்பளை பிரதேச பொறுப்பாளராக இருந்த மதி என்பவரும் முக்கியமானவர்கள். விஜிதரன் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார். அந்த மாணவர் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ரயாகரனும் புலிகளால்கடத்தப்பட்டிருந்தார்.ஆனால் பல்கலைக் கழகத்தில் பல மாணவர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், விஜிதரன் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதற்கு ஒரே காரணம் அவர் பகிடிவதை செய்த பெண் கிட்டுவின் காதலியாக இருந்தார் என்பதேயாகும். அது எவருக்குமே தெரிந்திராத விடயம் இதற்கு கைமாறாகவே கிட்டு சுக்குளாவிற்கு மன்னிப்பு வாங்கி கொடுத்திருந்தார்.


வெளிநாடுகளில் மாற்றுக் கருத்தாளர்களை கொலை செய்வது அல்லது மிரட்டுவது அந்தந்த நாடுகளில் புலிகள் இயக்கம் மேல் மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கித்தரும் என்ற அடிப்படைப் புரிந்துணர்வு புலிகளிடம் இருந்திருக்கவில்லையா?



இல்லையென்றுதான சொல்லவேண்டும். காரணம் இது போன்ற செயற்பாடுகளால் புலிகளிற்கு வெளிநாடுகளில் கெட்ட பெயரும் அவர்களின் செயற்பாடுகளிற்கு தடைகளும் வரும் என பல தடைவை வெளிநாட்டு சட்ட திட்டங்களை அறிந்த வெளிநாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த புலிகளிற்கு ஆதரவாக வேலை செய்த பலராலும் வெளிநாடுகளில் இரகசியமாக வேலை செய்த என்னைப் போன்றவர்களாலும் தலைமைக்கு அடிக்கடி தெரியப் படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தலைமையால் இவற்றை கட்டுப் படுத்த முடியாமல் போயிருந்தது. அல்லது கட்டுப்படுத்தும் அக்கறையின்றி விடப்பட்டிருந்தது என்றுதான் சொல்லலாம். இந்த செயற்பாடுகளின் தொடர்ச்சியே வெளிநாடுகளில் புலிகள் மீதான தடைகள் வரக் காரணமாகும்.

வெளிநாடுகளில் இப்படியாக எத்தனை பேரை கொலை செய்திருப்பார்கள் புலிகள்?

இயக்கத்தில் என்னுடைய வேலைகள் தனியானவை என்பதால் புலிகள் இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் பிரான்சில் வசிப்பதால் இங்கு நடந்த விடயங்களின் தகவல்கள் மட்டுமே பெரும்பாலும் தெரியும்.

வெளிநாடுகளில் புலிகள் செய்யும் கொலைகள் தலைமையின் அனுமதியுடன் தான் நடந்ததா?

பொதுவாகவே புலிகளினால் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் தலைமையின் அனுமதி அல்லது கட்டளைக்கிணங்கவே நடைபெறும். தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக ஒருவர் ஒரு நடவடிக்கையை செய்திருந்தால் கட்டாயம் தலைமையால் அவரிற்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கும். அதுவும் வெளிநாடுகளில் நடந்த விடயங்கள் நிச்சயமாக தலைமையின் அனுமதியின்றி நடந்திருக்க முடியாது.

விடுதலைப் புலிகள் புலம் பெயர் நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி, அவர்களை கடத்தி, கப்பமாக பணம் பெற்று வந்தனர் என்பது உண்மையா?

ஜரோப்பாவில் ஒருவரை கடத்தி வைத்திருந்து பணம்பெற முடியாது. ஏனெனில் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் பணம் கொடுக்க மறுத்தவர்களை திடீரென கடத்திக்கொண்டு போய் தாக்கி விட்டு வீதியில் போட்டு விட்டு போயிருக்கிறார்கள். ஆனால் யாராவது பணம் கொடுக்காவிட்டால் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள அவரது உறவினர்களை கடத்துவோம், கொலை செய்வோம் என அச்சுறுத்தி பணம் பெற்ற நிகழ்வுகள் பல நடந்தது. அது பல நாடுகளிலும் வழக்குகளாக பதிவாகியும் இருக்கின்றது. இதனால் சம்பந்தப் பட்டவர்கள் கைதாகி தண்டனை பெற்றும் உள்ளனர். இதில் இயக்கத்திற்கு நிதி கேட்டு என்னையே ஒருவர் பாரிசில் மிரட்டிய நகைச்சுவையான விடயம் கூட நடந்தது.


பாகம் 3

புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?

ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின்போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப் பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையாக உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் உற்பத்தியாகும் போதைப் பொருட்களிற்கும். இமய மலைச் சாரலில் இயற்கையாக விளையும் கஞ்சாவிற்கும் மேலை நாடுகளில் ஏகப் பட்ட கிராக்கி இருக்கிறது. அவற்றை தரை மற்றும் கடல் வழியாக மும்பைக்கு கொண்டு வரப் பட்டு அவை சரக்கு கப்பல்கள் மூலம் மேற்கு நாடுகளிற்கு பயணமாகும்.

எந்த வருடத்தில் இருந்து புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்?

எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சிறிய அளவில் புளொட் அமைப்பும் புலிகளும் போதைப்பொருள் கடத்தலை தொடங்கியிருந்தாலும் 84 ம் ஆண்டு புலிகள் உறுப்பினர்கள் சிலர் மும்பையை மையமாக வைத்து கடத்தலை தொடங்கிய பின்னரே பரவலடைந்தது. சாதாரண கப்பல்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தலானது தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களே சொந்தமாக கப்பல்களை வாங்கி உலகளாவிய ரீதியில் செய்யத் தொடங்கியிருந்தனர்.

புலிகளின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை பொறுப்பாக நின்று வழி நடத்தியவர் யார்?

இது பல குழுக்களாக இயங்கியது. அதில் தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர் முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .


போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இறந்த புலிகளுக்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டதா?


யாரிற்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அது மட்டுமல்ல ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அதில் இறந்துபோனவர்கள், விபத்தில் மற்றும் கடுமையாக நோய்வாய் பட்டு இயற்கை மரணம் அடைந்த எவருமே முறையாகப் பெயர்கள் அறிவிக்கப்பட்டு மாவீரர்களாக கெளரவிக்கப்படவில்லை. விதிவிலக்காக கிட்டு சென்ற கப்பலில் இறந்தவர்களும் இறுதி சமாதான காலத்தின் போது தாக்கியழிக்கப்பட்ட ஒன்பது கப்பல்களில் இரண்டு கப்பல்களில் பயணித்தவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அவர்கள் மாவீரர்களாக கெளரவிக்கபட்டிருந்தனர்.

இப்படியாக எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

நூற்றியிருபதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். புலிகளின் தலைமை அவர்களை மாவீரர்களாக அறிவித்திருக்காவிட்டாலும். புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட புலிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையான உறவு எப்படி இருந்தது?

புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை.
அவரைப்பொறுத்தவரை ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும். அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.

வெளிநாடுகளில் புலிகள் மீதான தடை ஏற்பட்டதற்கு, புலியெதிர்ப்பாளர்கள் மற்றும் மாற்றும் மாற்றுக் கருத்தாளர்களின் பங்கும் பெரியளவில் இருந்ததாக கருதுகிறீர்களா?

இல்லை. புலிகள் மீதான தடைக்கு இந்த மாற்றுக் கருத்தாளர்களின் பங்கு என்பது ஒரு சதவீதம் இருக்குமா என்பது கூட சந்தேகமேயாகும். இந்த மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது புலியெதிர்ப்பாளர்கள் எனப்படுவோர், புலிகளிடம் ஜனநாயகம் இல்லை, அவர்கள் வன்முறையாளர்கள், படுகொலை செய்கிறார்கள் என வெளிநாடுகளில் கூட்டம் போட்டு பேசியும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியும், மனித உரிமை அமைப்புக்களிற்கு புகார் அனுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், இவற்றால் புலிகள் மீதான தடை என்பது சாத்தியமாகவில்லை. ஏனெனில் இவர்களிற்கு புலிகள் அமைப்பினுள் என்ன நடக்கின்றது என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை. அதே நேரம் அனேகமான ஜரோப்பிய நாடுகள் புலிகள் மீது மென்மை போக்கை கடைப்பிடித்திருந்ததோடு பல தனிப்பட்ட அரச மட்ட தொடர்புகளும் புலிகள் அமைப்பு சுதந்திரமாக இயங்கவும் வழி வகுத்திருந்தது. ஆனால் இந்த மென்போக்கை புலிகள் அமைப்பும் அவர்களது வெளிநாட்டு பொறுப்பாளர்களும் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. வெளிநாடுகளில் பொறுப்பாக இருந்தவர்களிற்கிடையேயான போட்டிகளும், பொறாமைகளாலும் அவர்களே உள்ளே நடக்கும் இரகசியங்களை வெளிநாட்டு காவல் துறையினரிடம் போட்டுக் கொடுத்தார்கள். தாங்களே குட்டி நீதிமன்றம் போல் செயற்பட்டு வெளிநாடுகளில் தமிழர் பிரச்சனைகளிற்கு தீர்ப்பு கூறி தண்டனை கொடுத்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவன் காவல்துறையில் போய் புகார் கொடுக்கத் தொடங்கினான். இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்ப்பு புலிகளிற்கு எதிராக சர்வதேசத்தில் உருவாகக் காரணம் புலிகளின் கரும்புலி தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டதும், தொடர்ந்தும் மக்களால் தேர்தெடுக்கப் பட்ட சிங்கள, தமிழ் ஆயுதம் தாங்காத அரசியல்வாதிகள் கொல்லப் பட்டதுடன், தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பே குழப்பியதுமே மிகப் பாரதூரமான குற்றங்களாக சர்வதேசம் பார்த்தது. அது மட்டுமல்லஇறுதியாக நடந்த பேச்சு வார்த்தைகளின்போது இந்த தடைகளை நீக்கி சுதந்திரமாக பேச்சு வார்த்தையில் புலிகள் ஈடுபடுவதற்கு சர்வதேசமும் இந்தியாவும் இரண்டு விடயங்ளை நிறைவேற்றுமாறு புலிகளிடம் கேட்டிருந்தார்கள். அவையிரண்டையும் புலிகளின் தலைமை நிராகரித்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் காலையில் பேச்சுவார்த்தைகளின் போது மேசையில் புலிகள் தரப்பு தாங்கள் சமாதானத்திலும் பேச்சு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறோம் வன்முறையில் எமக்கு விருப்பம் இல்லையென்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு, மாலையில் புலம்பெயர் தமிழர்களின் கூட்டங்களில் தமிழ்ச்செல்வன் உரையாற்றும் போது இனி வரப் போவதுதான் இறுதி யுத்தம். யுத்தம் மூலமே தீர்வு எனவே தமிழர்கள் அனைவரும் தாராளமாக நிதியை வழங்குங்கள் எமக்கு பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையில்லையென்று உரையாற்றுவார். அப்போது கை தட்டல் வானைப் பிளக்கும். இப்படிப் பேசவேண்டாம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் இவற்றை பதிவு செய்யும் என்று பல தமிழ் பத்திரிகையாளர்கள் தமிழ்ச்செல்வனிடம் எடுத்தும் சொல்லியிருந்தார்கள். அதற்கு அவரின் பதில் 'அவங்கள் விசரங்கள் கிடக்கட்டும்' என்பதாகவே இருந்தது. இதனால்தான் சர்வதேசம் புலிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டி வந்தது.

சர்வதேசமும் இந்தியாவும் புலிகள் மீதான தடையை எடுப்பதற்கு இரண்டு விடயங்களை முன் வைத்தாக கூறினீர்களே, அவை என்ன?

பேச்சு வார்த்தை காலத்தில் புலிகளோடு அதிகார பூர்வமாக சர்வதேச தரப்பில் ஒரு குழு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது இன்னொரு குழுவினர் புலிகளின் இன்னொரு வெளிநாட்டு பிரிவினருடன் இரகசியமாக நோர்வேயில் பேச்சு வார்த்தை ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் புலிகளிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். முதலாவது கரும்புலிகள் அமைப்பை முற்று முழுதாக கலைத்து விடவேண்டும். இரண்டாவது வான் புலிகள் அமைப்பை கட்டியெழுப்பும் முயற்சிகளை தற்காலிகமாக கைவிடவேண்டும் என்பதே. இங்கு இன்னொன்றை கவனிக்க வேண்டும் உலக விடுதலைப் போராட்டக் குழுக்களிலேயே முதன் முதலாக வான் படையை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்அமைப்பு மட்டுமே. அதனால் வான் புலிகள் என்பதனை மிக பலம் பொருந்திய ஒன்றாகவே அதீத கற்பனைகளை கொண்டதாக அன்றைய காலத்தில் சர்வதேசமும் இந்தியாவும் நம்பியிருந்தனர் என்பதும் உண்மை. இந்த கோரிக்கைகளை புலிகளின் தலைமை மறுத்திருந்தது. பேச்சு வார்த்தை காலங்களில் மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தங்களிற்கு பணிந்து குழந்தைப்போராளிகள் பலரை பத்திகையாளர்களின் முன்னால் விடுவித்ததைப் போல கரும்புலிகள் அமைப்பை கலைக்காவிட்டாலும், ஒரு ஒப்புக்காகவேனும் பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் முன்னால் ஒரு தொகை கரும்புலிகளை சாதாரண படையில் இணைத்து கரும்புலிகளை கலைத்து விட்டதாக புலிகளின் தலைமை அறிக்கையொன்றை விடச் சொல்லி பலர் வைத்த கோரிக்கையை புலிகளின் தலைமை கடுமையாக மறுத்து விட்டிருந்தது. அடுத்ததாக உலக நாடுகளில் இருந்து புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முதலாவதாக இந்தியா தனது தடையை நீக்கவேண்டும்.அதற்கு ராஜீவ்காந்தியின் கொலை ஒரு பெரும் தடையாகவும், இந்தியாவிற்கு பெரிய கெளரவ பிரச்சனையாகவும் இருந்தது. புலிகள் மீதான இந்தியாவின் தடையை நீக்குவதற்கு பொட்டம்மானை தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை வைத்தார்கள். பொட்டம்மானை ஒப்படைத்ததன் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியத் தரப்பு கேட்கக் கூடாது என்று எழுத்து மூலம் தரவேண்டும் என்றும் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த விபரங்களும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப் பட்டது. இந்தக் கோரிக்கையும் சுவரில் எறிந்த பந்தைப் போல புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டு திரும்பி வந்ததும் பெரும் பின்னடைவாக அமையக் காரணமாக அமைந்தது.


விடுதலைப் புலிகளின் முக்கிய தூண்களில் ஒருவரான பொட்டம்மானை, இந்திய அரசு சரணடையச் சொல்வதை எந்த விதத்தில் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைக்காக ஆயிரக் கணக்கான இளம் சந்ததியினர் மாவீரர்களாகியும் தங்கள் பெயர்களே வெளி உலகத்திற்கு தெரியாமல் பல கரும்புலிகள் உயிரைக் கொடுத்தும் உள்ளனர். அதே இனத்தின் விடுதலைக்காக அந்த மக்களின் எதிர்காலத்திற்காக பல தடைகள் நீங்கி அதற்காக இன்னாரு பாதை திறப்பதற்காகவும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன். அதே நேரம் பொட்டம்மானை இந்தியா உடனே தூக்கில் போட முடியாது. எனவே பல பிரபலமான வக்கீல்களை வைத்து வாதடியிருக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு வைத்த கோரிக்கை புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டிருந்தது இவையும் பேச்சு வார்தைகள் இறுக்கமடைய காரணமாக அமைந்தது.


புலிகளிற்கு ஆயுத வழங்கலில் முக்கியமாக ஈடு பட்டிருந்த உங்கள் நண்பரான கே.பி.(குமரன் பத்மநாதன்) என்பவர் உண்மையில் கைது செய்யப் பட்டாரா? அல்லது சரணடைந்திருந்தாரா?

கே.பி எனது நண்பர் என்பதைவிட நாங்கள் ஒரு அமைப்பில் இயங்கினோம் என்பதுதான் சரியானது. அதே நேரம் அவர் கைது செய்யப்பட்டதை செய்திகளில் அறிந்திருந்தேன். பின்னர் அவருடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தின் போதும் தான் கைது செய்யப் பட்டதாகவே என்னிடம் கூறியிருந்தார்.


கே.பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2001 ம் ஆண்டு புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அதற்குள் எழுந்த அதிகார போட்டிகள் காரணமாக புலிகளின் தலைமையோடு அருகாகவும், நெருக்கமாகவும் தலைவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்களின் கைகளிற்கு அதிகாரங்கள் கை மாறத் தொடங்கியிருந்தது. இந்தப் புகழ்ச்சியானது பிரபாகரன் என்பவர் தலைவர் என்பதைத் தாண்டி தேசியத் தலைவர் சூரியத்தேவன், முருகன் என்று கட்டவுட்டுகளாகவும் கவிதைகளாகவும் பாடல்களாகவும் வெளிவரத் தொடங்கியியுமிருந்தது. அதே நேரம் போராட்டத்தையும் மக்கள் விடுதலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தலைமைக்கு துதி பாடாமல் தூரமாக இருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் ஓரம் கட்டப் பட்டனர். அதன்போது கே.பியும் ஓரம் கட்டப் பட்டதோடு பரப்புரை. வர்த்தகம் .நிதி.வெளிநாட்டு அரசுகள் அமைப்புக்களுடனான தொர்புகள். ஆயுதபேரம்.வாங்குதல் .வழங்கல் .ஆவணங்களை தயாரித்தல்.மருத்துவம் மற்றும் மருந்து தொழில் நுட்ப உபகரண பிரிவு என பல குழுக்களாக இயங்கிய வெளிநாட்டு பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனை அனைத்துலக செயலகத்தின் கீழ் கொண்டு வந்து ஒரு நிறுவனமயமாக்கல் முறையாக்கி புலிகளின் முதுகெலும்பு என சொல்லக் கூடிய வானளாவிய அதிகாரங்கள் அனைத்தையும்.கஸ்ரோ பொறுப்பெடுத்திருந்தார்.


கே.பி நீக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன?

சொல்லப்பட்ட ஒரேயொரு காரணம், அதை நான் சப்பைக் காரணம் என்றே சொல்வேன். ஆயுதங்கள் வாங்கியதில் சரியாக கணக்கு காட்டவில்லையென்பதுதான். புலிகளின் மாதாந்த வருமானமே எவ்வளவு என்று தலைமைக்கே சரியாக தெரியாத போது கணக்கு சரியில்லையென்று கஸ்ரோ தலைமையிடம் வைத்த குற்றச்சாட்டும் அதனை தலைமை ஏற்றுக் கொண்டதும் நகைச்சுவையானது.


கே.பி கொம்பனியின் நீக்கம் நடைபெறாமல் போயிருந்தால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவு எப்படி இருந்திருக்கும்?

கே.பி கொம்பனி புலிகளின் தலைமையால் நீக்கப் படாது போயிருந்தால் புலிகள் நிலங்களை இழந்து பலவீனமடைந்திருந்தாலும், புலிகளிற்கு ஆயுதங்கள் தொடர்ந்தும் கிடைத்தபடியே இருந்திருக்கும்யுத்தம் நீண்டுகொண்டேயிருந்திருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் புலிகளின் தலைமை கூண்டோடு அழிந்து போகாமல் காப்பாற்றப் பட்டிருக்கும்.


கே.பியை தொடர்ந்து வெளிநாட்டு நிருவாகப் பொறுப்புக்கு தலைமையேற்ற காஸ்ட்ரோவின் செயற் பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு நாளின் 24 மணி நேரத்தில், சில நேரங்களில் 20 மணிநேரங்கள் விழித்திருந்து இயங்க வேண்டியதுதான் புலிகளின் வெளிநாட்டு பிரிவு. ஏனென்றால் புலிகளின் வெளிநாட்டு பிரிவுஅவ்வளவு முக்கித்துவம் வாய்ந்தது. ஆனால் ஒரு நாளைக்கு வெறும் அரை மணிநேரம் மட்டுமே எழுந்து உட்காரக் கூடிய கஸ்ரோவிடம் அனைத்துலக செயலக பொறுப்பு போய் சேர்ந்ததும், அவரின் கீழான அனைத்து பொறுப்பக்களும் புதியவர்களிடமும் புலிகள் அமைப்பால் வெளிநாடுகளிற்கு அனுப்பி கல்வி பயின்றவர்களிடமும் ஒப்படைக்கப் பட்டது. கணணித் தொழில் நுட்ப அறிவும், ஆங்கில அறிவும் இருந்தால் ஆயுதங்களை வாங்கி விடலாமென புதியவர்கள் நினைத்தார்கள். நவீன ஏவுகணைகள் வாங்குவதற்காக புதிய ஆயுத முகவர்களை தேடிப் போனார்கள். ஒரு காலத்தில் போலி மனிதர் என பழைய கட்டமைப்பினர் ஒதுக்கி வைத்திருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரையும் மீண்டும் தங்களுடன் இணைத்தார்கள். அவரும் பல ஆயுத முகவர்களை புதியவர்களிற்கு அறிமுகப் படுத்தினார். கஸ்ரோ தலைமையிலான புதியவர்கள் ஆயுத முகவர்கள் என நம்பி பேரங்கள் நடத்திய அனைவருமே வெளிநாட்டு உளவமைப்புளின் ஆட்களாக இருந்தனர். அவர்களால் இறுதியில் பணத்தையும் இழந்ததோடு, ஆயுதங்களை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக புலிகள் தரப்பில் ஆயுத பேரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதாகி சிறைகளில் வாடுகிறார்கள்.

தொடரும்...




7 comments :

கரன் ,  February 6, 2014 at 11:42 PM  

கண்கெட்ட பிறகு சண்ணுக்கு (சூரியன்) நமஷ்கார நாமதேய..

அண்ணன் கேபி க்கு நாமதேய..

அப்ப கேபி ய விலக்கி இருக்காட்டி புலிகளை மகிந்தர் அழித்திருக்க மாட்டார் என்றயளே..

Anonymous ,  February 7, 2014 at 1:08 AM  

Uvankal ellam pinam thinni pisaasukal, vuduraan kathai!

Porukkiyalukku oru vaalkai,uvanukkellaam peatti!

Kolai kaar koottaththukku oru vakkaalaththu!

Olungaana kudumpaththil piranthiruppaankalaa?

Anonymous ,  February 8, 2014 at 9:15 PM  

இவர் தண்டிக்கப் பட வேண்டியவர். படுகொலைகள் செய்து விட்டு இன்று, யாரோ சொன்னதால் செய்தேன் என்கிறார். இவர் செய்த கொலைகளிட்கு, இவரே பொறுப்பு ஏற்க வேண்டும். இவர் செய்த பாதக செயல்கள் கொலைகள் எல்லாம் சுய புத்தியுடன் செய்யபடுள்ளது. இதற்கு இவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

நான் என் நாட்டை விட்டு இவர்களை போன்றவர்களுக்கு பயந்தே வெளியேறினேன்.குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கவேண்டும்.

Vani Ram ,  February 10, 2014 at 10:43 AM  

இவர் தண்டிக்கப் பட வேண்டியவர். படுகொலைகள் செய்து விட்டு இன்று, யாரோ சொன்னதால் செய்தேன் என்கிறார். இவர் செய்த கொலைகளிட்கு, இவரே பொறுப்பு ஏற்க வேண்டும். இவர் செய்த பாதக செயல்கள் கொலைகள் எல்லாம் சுய புத்தியுடன் செய்யபடுள்ளது. இதற்கு இவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

நான் என் நாட்டை விட்டு இவர்களை போன்றவர்களுக்கு பயந்தே வெளியேறினேன்.குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கவேண்டும்.

சேது ,  February 23, 2014 at 12:12 PM  

கரன், நீங்கள்தான் உண்மையான சாத்திரி போல தெரியுது முதலாவது பாகத்தை வாசித்த உடனேயே சொல்லிட்டயள் கேபி யின் துதி பாடப்படப்போகுதென்று.

இவர் எப்ப இலங்கைக்கு போகப்போறார் என்றும் ஒருக்கா சொல்லலாமா?

கரன் ,  February 23, 2014 at 1:43 PM  

சேது நான் ஒன்று சாத்திரி இல்லப்பா,

இது சாதாரணமான விடயம் தானே. இவர் இப்ப நாட்டுக்கு போகப்போறார் , அதுக்கு கேபி யுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்கின்றார். கே.பி நான் நல்லவன் வல்லவன் என்று எழுதாப்பா என்று சொல்லியிருக்கின்றார்..

அருளினியன் என்ற பேரில் சாத்திரி எழுதுகின்றார் அருளினியன் தரவேற்றுகின்றார் அவ்வளவுதான் விடயம்.

மாறன் ,  February 23, 2014 at 4:41 PM  

அட இதுக்குள்ள வேற வரட்டுக்கௌரவமா? புலி எதிர்ப்பாளர்கள் ஒன்றும் எங்ளை அழிக்க வில்லை நாங்கள் தான் எங்களை அழித்துக்கொண்டோம் என்றார்.

இப்ப மஹிந்தவின் பின் பக்கத்தை நக்குறத்துக்கு வெளிக்கிட்டார் போல இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com