Tuesday, February 4, 2014

இன்று பெப்ரவரி 04 உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) - பீ.எம். புன்னியாமீன்

செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. 2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். 3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

சர்வதேச ரீதியில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 2014ம் ஆண்டுக்கான இத்தினத்தின் தொனிப்பொருள், 'மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்' என்பதாகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.

நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் எதிர்பார்ப்பாகும். இத்தினத்தை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு (Union for International Cancer Control, UIIC) முன்னின்று நடத்துகிறது. இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது.

புற்றுநோய் என்பது (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி ஏனெய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும், எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை சுருக்கமாக நோக்குவோமாயின் கலங்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று, சில வேளைகளில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்று நோய் தொடர்பான அறிகுறிகளில் சில
* உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம்.
* உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள்:
* ஆறாத புண்கள்.
* தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்.
* மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம்.
* தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல்.
* உடல் எடையில் மாற்றம்.
* இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு.
நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்

புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனிமேல் தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன்படி வருடாந்தம் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 25 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது. இவர்களுள் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழந்ததாகவும் பணியகத்தின் வைத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடி வருவதே வைத்தியசாலைகளிலிருந்து தமக்கு கிடைக்கும் பொதுவான முறைப்பாடு எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் எம்மால் நோயாளிகளை முன்னரை விடவும் அதிகமாகவே குணப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமயிர் கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையேயாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகையினால் சமூகத்திற்கு வெட்கப்பட அல்லது அஞ்சியோ சிகிச்சைகள் ஆரம்பிப்பதனை காலம் தாழ்த்தவோ அல்லது தவிர்ப்பதோ பிழையான கொள்கையெனவும் புற்றுநோய் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் தமது பிரதேச செயலகத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் இலவசமாக முன்னெடுக்கப்படும் முழுமையான உடல் மருத்துவ பரிசோதனைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டுமெனவும் வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தனர்.
பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோயும், இரண்டாவதாக கர்ப்பப்பை புற்றுநோயுமே பாரிய அச்சுறுத்தலாகவுள்ளன. புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஷிரந்திக்கா வித்தான கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் வருடந்தோறும் 2 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதாக கூறினார்.

மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவோரில் 470 பேர் வருடந்தோறும் உயிரிழப்பதாகவும் சுமார் 12 ஆயிரம் பெண்கள் முறையான சிகிச்சைகளுடன் தொடர்ந்தும் உயிர் வாழ்வதாகவும் அவர் கூறினார்.

2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாமெனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வருடந்தோறும் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர் புதிதாக இனங்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்காலத்தில் நோயின் உண்மையான பரிமாணத்தை அறியவும், அது பரவியுள்ள இடங்களை அறியவும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சிடி ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல், நோயைக் குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்களும் கவனம் செலுத்தி தமக்கு ஏற்படும் நோய்களின் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாது உடனடியாகவே மருத்துவமனைகளை நாடவேண்டும்.

இன்றைய புற்றுநோய் தினத்தில் நாம் சில விடயங்களை நாம் கருத்திற்கொள்வோம்.

புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விடயம் என நினைக்கிறோம். ஆனால் அது சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

புற்றுநோய் என்பது உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் அது தாக்குகிறது.

புற்றுநோய் என்பதை ஒரு மரண தண்டனையாக சிலர் என நினைக்கின்றார்கள். ஆனால் புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.

புற்றுநோயை சிலர் என் விதி என நினைக்கின்றார்கள். ஆனால் நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான் உண்மை.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடுவோம். எமது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதை வாழ்நாள் பழக்கமாக கொள்வோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com