Thursday, January 30, 2014

கிடைத்துள்ள இந்தியன் வீட்டை இல்லாமல் செய்ய கூட்டமைப்பு முயற்சி: இதுவா மக்கள் சேவை என இன நல்லுறவுக்கான ஒன்றியம் சாடல்

இந்திய வீட்டுத்திட்டத்தில் 3 முஸ்லீம் கிராமங்களில் 100 வீடுகளும் 1114 வீடுகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(29) இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுசரணையில் இயங்கும் பிரஜைகள் குழு என்ற அமைப்பு மேற்கொண்டது. இவ்விடயம் தொடர்பில் எந்த சமூகத்திற்கும் பாராபட்சமான முறையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை வவுனியாவுக்கு வருகைத் தந்து நிலைமையினை நேரடியாக அவதானித்த அன்றைய உயர் ஸ்தானிகர் அசேக்.கே.காந்தா உறுதிப்படுத்தினார்.

அதே போல் பாதிப்புக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் கிராம அதிகாரிகளின் உறுதிப்படுத்தல் என்பவற்றுடன் மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியுடன் பயனாளிகள் இறுதி பட்டியல் தெரிவு இடம்பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டு தற்போது இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் இன சமச்சீர் நிலையினை பாதிக்கும் வகையில் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்ற போது, அம்மக்களுக்கு வீடு வழங்கியதை ஆட்சேபித்து அமைச்சரையும், அரச அதிகாரிகளையும் இழிவாக சித்தரிக்கும் பதாகைகளை ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் சில சமாதான சீர்குலைவாளர்கள் சென்றதை காண முடிந்தது.

இவர்கள் வவுனியாவில் நிரந்தர வீடுகளில் வசித்து வருபவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். இந்திய வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக கூறி பிரஜைகள் குழுவின் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்திருந்தததன் மூலம் இது அரசியல் லாபம் தேடும் ஒரு ஆர்ப்பாட்டம் என்பது உறுதியானது.

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமங்களில் பாதிப்புக்குள்ளான கிராமங்களின் விபரங்களை அந்ததந்த கிராம அதிகாரிகள் மூலம் பிரதேச செயலகம் பெற்றும் அதனை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி அங்குள்ள அதிகாரிகளினால் ஆராய்ந்து களத்துக்கு சென்று இந்த கிராமங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.

தற்போது வீடமைப்பு திட்டம் நடை முறைப்படுத்தப்படும் கிராமங்கள் பின்வருமாறு அமைந்துள்ளது .தரணிக்குளம், தாளிக்குளம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், பூம்புகார், மறவன்குளம், புளித்தறித்த புளியங்குளம், ஹிஜ்ராபுரம், அரபாநகர், சிவபுரம், செல்வாநகர், மகிலங்குளம் கிராம அதிகாரிப்பிரிவில் புதிய வேலன் சின்னகுளம், மகிலங்குளம், ரம்பைக்குளம், விளக்குவைத்தகுளம், பாக்குச்சொறிஞ்சான், பன்றிக்கெய்த குளம்(பெரியமடு) என்பனவாகும்.

இதில் 3 முஸ்லிம் கிராமங்கள் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இந்த 3 கிராமங்களுக்கும் 100 வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 1114 வீடுகள் தமிழ் கிராமத்துக்கும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் இன ரீதியான பிளவுகள எற்படுத்த அப்பாவி மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தமையானது கண்டனத்துக்குரியதொன்றாகும்.

குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்பதை அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் காணமுடிகின்றது. வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கோ எந்த வித அநியாயங்களோ, தட்டிப்பறிப்புக்களோ அமைச்சரினால் இடம் பெறவில்லையென்பதை தெரிவித்துக் கொள்வதுடன், வீடற்று வேதனைப்படும் தமிழ் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ள வீடமைப்பு திட்டத்தை இல்லாமல் செய்யும் ஆர்ப்பாட்டமொன்றை செய்துள்ளமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைக்கால இயலாத்தன்மையின் மற்றுமொரு வெளிப்பாடாக காணமுடிகின்றது.

இந்திய அரசாங்கத்துடன் பேசி வீடற்ற வவுனியா மாவட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதை செய்யாமல் கிடைத்தவற்றை இல்லாமல் செய்யும் பணியானது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாக கூறும் இக் கூட்டமைப்பின் உயர் சேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com