Friday, January 3, 2014

புதுடில்லி கற்பழிக்கும் காரைக்கால் கற்பழிக்கும் வெவ்வேறு நியாயம்…? ஊடகங்களைச் சாடுகிறான் ஒரு வாசகன்!

புதுடில்லியில் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ கல்லூரி மாணவி ஒரு பேருந்தில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார், உடனடியாக இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்த போதும் ஊடகங்களும், பொதுமக்களும் அரசியல் கட்சிகள், மாதர் சங்கங்கள் அனைத்தும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக அனைத்து ஊடகங்களும் உங்கள் ஊடகம் உட்பட‌ இது தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டனர், விவாத நிகழ்ச்சிகள் நடத்தினர்.

புதுடில்லியில் ஒரு சாதாரண ரவுடி கும்பல் நடத்திய கூட்டு கற்பழிப்பிற்கே ஊடகங்கள் இத்தனை வெளிச்சத்தை பாய்ச்சி இது குறித்த விவாதங்களை நடத்திய போது இதோ நம் அருகில் உள்ள காரைக்காலில் ஒரு பெண் அரசியல் பின்னணி உள்ள அதிகாரபலம் மிக்க‌ இரண்டு வேறு கும்பல்களால் மூன்று மணி நேரத்தில் 15 பேரால் பல முறை கற்பழிக்கப்பட்டுள்ளார், அந்த குற்றம் தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யாமல் காவல்துறை கட்டை பஞ்சாயத்து நடத்தியுள்ளது, புதுச்சேரி சீனியர் எஸ்.பி மோனிகா பாரத்வாஜ் தலையிட்டு தான் இந்த வழக்கை பதிவு செய்ய வைத்துள்ளார், இந்த காரணத்தினால் காரைக்கால் நகர சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் ஏட்டு சபாபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அ.மார்க்ஸ் மனித உரிமை குழுவினர் இந்த வழக்கில் அரசியல் தலையீட்டினால் காவல் நிலையத்தில் கட்டைபஞ்சாயத்து நடந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர், 15 பேர் கொண்ட இரண்டு கும்பல் மூன்று மணி நேரத்தில் ஒரு பெண்ணை பல முறை கற்பழிப்பது, அதுவும் காரைக்கால் நகர காவல்நிலையத்தின் அருகில் உள்ள அறையில் வைத்து கற்பழிப்பது என்பது எவ்வளவு துணிச்சலான செயல்?

இந்த துணிச்சல் எப்படி வந்தது? குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களின் ஒருவர் காரைக்கால் திமுக எம்.எல்.ஏ நஜீம்மின் நெருங்கிய உறவினர், இவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர், பாதிக்கப்பட்ட பெண் காரைக்காலுக்கு காண வந்தது மதன் என்பவரை, இந்த மதன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரின் தம்பி, கைது செய்யப்பட்ட இன்னொரு நபர் ஜெயகாந்தன் மீது இரண்டு பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தனை அரசியல் பின்னணி உள்ள அதிகாரம் மிக்கவர்கள் குற்ற செயலில் ஈடுப்பட்டிருந்த போதும் இது குறித்து உங்கள் ஊடகம் உட்பட அனைத்து தமிழ் ஊடகங்களும் அமைதி காப்பதன் மர்மம் என்ன?

சிறுபான்மை இஸ்லாமியர்களோ, ஒடுக்கப்பட்ட சமூகமான தலித் சமூகமோ ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் அந்த குற்றச்செயல் எத்தனை கொடூரமானதாக இருந்தாலும் அதை குறித்து ஒரு விவாதத்தை நடத்தாமல் கள்ள மெளனம் காக்க வேண்டும் என்பது தான் உங்கள் ஊடகத்தின் நிலைப்பாடா? இது தான் ஜனநாயகத்திற்கு ஊடகங்களாகிய நீங்கள் செய்யும் கடமையா?

இதே போன்ற நிலைப்பாட்டை தான் பிற குற்றசெயல்களுக்கும் இது வரை எடுத்திருந்தீர்களா? அல்லது இனி அப்படி தான் எடுப்பீர்களா? ஜனநாயகத்தின் நான்காம் தூணே, "தவறு யார் செய்தாலும் தவறு தான்" என்ற நிலைப்பாட்டை எப்போது எடுப்பீர்கள்? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்கவும் குற்றம் யார் செய்திருந்தாலும் குற்றம் தான் என்பது குற்றவாளிகளுக்கு அச்சுறத்தலை தரவும் மக்களுக்கு அறிவுறுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதை உங்களுக்கு எழுதுகிறோம்.

(குழலி புருசோத்தமன்)

1 comments :

Abdulla ,  January 3, 2014 at 6:08 AM  

It`s toilet india, avoid india and save our Country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com