Monday, January 27, 2014

காரணமின்றி வடமாகாண பிரதம செயலரை மாற்ற முடியாது- கமால் பத்மசிறி


வடக்கு மாகாண பிரதம செயலாளரை தகுந்த காரணம் இன்றி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது என இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மூத்த நிர்வாக அதிகாரியுமான கமால் பத்மசிறி தெரிவித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று யாழ்.செயலக கேட்போர் கூடத்தில் வடமாகாண இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட கருத்தரங்குக்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இக்கருத்தரங்கு வடக்கில் பணியாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளின் திறன்களை மேலும் விருத்தி செய்யும் முகமாகவும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை எட்டும் நோக்குடனும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தரங்கில் தொடர்ந்து உரையாற்றும் போது வடக்கு மாகாண பிரதம செயலாளரை மாற்ற வேண்டும் என்று வடக்கு முதலமைச்சரால் கோரப்பட்டிருக்கிறதே தவிர அதற்கான சரியான காரணம் எதுவும் இதுவரை முன்வைக்கப் படவில்லை எனவே குறித்த அதிகாரி மீது ஒழுங்கீனம், மோசடி, கடமை புறக்கணிப்பு போன்ற எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை எனவே வெறுமனே தமது அரசியல் காரணங்களுக்காக பிரதம செயலாளரை அகற்றவேண்டும் என்று கோருவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்குறிப்பிட்டார். 

மேலும் இவ்வாறான அரசியல் காரணங்களுடனான அழுத்தங்கள் வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் ஏற்படுவதுண்டு இதற்கு உதாரணமாக கொழும்பு கடுவல்ல என்ற பகுதியில் கடமைபுரியும் நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை அகற்றும்படி சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுத்தார் அதேபோல மண் முனைப்பற்றுப் பகுதியிலும் பௌத்த பிக்கு ஒருவர் அப்பகுதி நிர்வாகசேவை அதிகாரியை மாற்றும்படி வற்புறுத்தி வந்தார் என்பதுடன் இதேமாதிரியான அழுத்தம் கலவான பிரதேசத்திலும் ஏற்பட்டது என்பதுடன் இவை அனைத்தும் எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

எனவே இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு நிர்வாக சேவை அதிகாரிகள் எவரும் வீதியில் இறங்கிப் போராடப் போவதில்லை என்பதுடன் நாம் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் புரிந்துணர்வுடனும், இணக்கப்பாட்டுடனும் கூடிய சாத்தியமான அணுகுமுறைகளுக்கூடாகவே இந்தவிடயத்தை கையாளுவோம் என்பதுடன் அதிகாரிகள் நாட்டின் இதயம் போன்றவர்கள் என்பதுடன் பிரதேச செயலகங்கள் முதல் ஜனாதிபதி செயலகம் வரை நிர்வாக விடயங்களை இந்த அதிகாரிகளே கவனித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்கள் உட்பட வடக்கின் அனைத்து நிர்வாக சேவை அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com