Wednesday, December 4, 2013

மோசடி மனைவியை காப்பாற்றுவதற்காக அப்பாவி பெண் படுகொலை; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் -

மோசடி வழக்கில் மனைவியை காப்பாற்ற, உதவி கேட்டு வந்த அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளதுடன்,அவரையும் அவரது மனைவியையும் பிடிக்க 2 தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ராஜ வேல்.இவரது மனைவி மோகனா.இருவரும் வக்கீல்கள் இவர் களுக்கு 3 குழந் தைகள்.

ராஜவேலின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த ஈங்கூர். கடந்த 11.12.2011 அன்று மனைவி மோகனா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக கூறி, ஒரு சடலத்தை வக்கீல் ராஜவேல் வீட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் அந்த சடலம் தகனம் செய்யப்பட்டது.சடலம் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் அது மோகனாதான் என உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் நம்பினர்.அதன்பின்,மோகனா இறந்ததற்கான இறப்பு சான்றிதழை ராஜவேல் பெற்றார்.

இந்நிலையில்,சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி உயிரோடு இருப்பதால் இறப்பு சான்றை ரத்து செய்ய வேண்டும் என ராஜவேல் விண்ணப்பித்து அதற்கான சான்றையும் பெற்றார்.அப்போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.விசார ணையில்,கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மணிவேல் கொலை செய்த வழக்கில், ராஜவேல் மீது வழக்கு உள்ளது. மணிவேலிடம் இருந்து அபகரித்த 26 சென்ட் நிலத்தை, மனைவி மோகனா பெயருக்கு மாற்றுவதற்காக, இறப்பு சான்றை ராஜவேல் ரத்து செய்தது தெரிந்தது.இதனால் ராஜவேலுவை போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.

தீவிர விசாரணையில், ராஜவேலுவின் மனைவி மோகனா ரூ.12 கோடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடி வழக்கில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்ற,ஒரு பெண்ணை கொலை செய்து மனைவி பெயரில் இறப்பு சான்று பெற்றதும்,பின்னர் அபகரித்த நிலத்தை மனைவி பெயருக்கு மாற்ற இறப்பு சான்றை ரத்து செய்ததும் அம்பலமானது.

கொலை செய்யப்பட்ட பெண்,கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி அம்மாசை.கணவனை பிரிந்து வாழ்ந்த அம்மாசை, வழக்கு தொடர்பாக வக்கீல் ராஜவேலுவை சந்தித்துள்ளார். கடந்த 11.12.2011ல் வக்கீல் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது வக்கீல் ராஜவேலுவும், அவரது நண்பரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான பொன்ராஜும் சேர்ந்து கொன்றுள்ளனர்.

பின்னர் வக்கீலின் கார் டிரைவர் பழனிசாமி மூலமாக சடலத்தை வீட்டுக்கு எடுத்து சென்று, மோகனா உடல்நலக் குறைவால் இறந்ததாக நாடகமாடி உள்ளனர். இதுதொடர்பாக பொன்ராஜையும் (28), பழனிசாமியையும் (40) தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். வக்கீல் ராஜவேலுவும், மோகனாவும் தலைமறை வாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் ராஜவேல் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது இன்று விசாரணைக்கு வருகிறது. வக்கீல் தம்பதி சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் கனகசபாபதி, ராஜவேல் தலைமையிலான 2 தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர். மோசடி வழக்கில் மனைவியை காப்பாற்ற, தனது கட்சிக்காரரையே வக்கீல் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அம்மாசையை பிரிந்து வாழும் கணவர் மாரிமுத்து, மகன் ராஜேந்திரன், மகள் சகுந்தலா ஆகியோர் நேற்று மதியம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். கமிஷனர் முன்னிலையில் மூவரும் கதறி அழுதனர். எங்களது தாயை கொன்றவர்களை தூக்கில் போடுங்கள் என மகளும் மகனும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com