Tuesday, November 19, 2013

இந்தியாவை இலக்கில் வைத்த பாரிய NSA உளவுவேலைகளின் ஆதாரங்களைப் புதுடெல்லி குறைத்து காட்டுகிறது. By Wasantha Rupasinghe

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்எஸ்ஏ) அதன் சட்டவிரோத உளவுவேலைகளில் இந்தியாவை (இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளையும் கூட) ஒரு முக்கிய இலக்காக வைத்திருந்தது என்ற வெளியீடுகள் குறித்து வாஷிங்டனுக்கு எவ்வித உத்தியோகபூர்வ எதிர்ப்பையும் காட்ட இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் தவறி உள்ளது.

என்எஸ்ஏ உளவுவேலைகளுக்கு அந்த அரசாங்கம் பகிரங்கமாக காட்டும் அலட்சியம் ஐரோப்பிய மற்றும் இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்களால் காட்டப்பட்ட உரத்த எதிர்ப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக நிற்கிறது. அங்கே அந்நாட்டு அரசு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என்எஸ்ஏ உளவுவேலை இலக்குகளுக்கு உள்ளாகி இருந்தனர். உண்மையில், வாஷிங்டனுடன் இந்தியா அதன் வெளியுறவு கொள்கைகளை மேலும் நெருக்கமாக்கி கொள்ள வேண்டுமென்று வாதிடும் பெருநிறுவன ஊடகங்களின் பிரிவுகளில் இருந்தும் கூட விமர்சன கருத்துக்கள் வெளிப்படாத அளவிற்கு புது டெல்லியின் விடையிறுப்பு ஊனமாகிப் போயிருந்தது.

செப்டம்பரின் இறுதியில், சென்னையை மையமாக கொண்ட தி ஹிந்து நாளிதழ், முன்னாள் என்எஸ்ஏ ஒப்பந்ததாரரும், விஷயங்களை அம்பலப்படுத்தியவருமான எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்தியாவின் மீது என்எஸ்ஏ உளவுவேலைகள் குறித்த புதிய வெளியீடுகளை பிரசுரித்தது. தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் பாரிய சட்டவிரோத உளவு நடவடிக்கைகளின் மையத்தில் இந்தியா வைக்கப்பட்டிருந்ததை முந்தைய அறிக்கைகள் அம்பலப்படுத்தி இருந்த போதினும், ஹிந்து கட்டுரைகளின் சமீபத்திய பல வெளியீடுகள் இந்திய அதிகாரிகளும் அமைப்புகளும் கூட பெருமளவிற்கு இலக்கில் வைக்கப்பட்டிருந்ததற்கு ஆதாரங்களை வழங்கின.

என்எஸ்ஏ இந்திய இராஜாங்க அலுவலங்களின் மீது உளவு பார்த்ததாக ஹிந்து செய்தி குறிப்பிட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் நிரந்தர நடவடிக்கைகளைக் கண்காணிக்க மிக நவீன வேவு பார்க்கும் சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சாதனங்களைப் பயன்படுத்தி என்எஸ்ஏ ஆல் "ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்கும் நகலெடுக்கப்பட்டு இருக்கலாம்" என்று சந்தேகிக்கப்படுகிறது.

என்எஸ்ஏ உளவுவேலைகள் நாட்டின் இராஜாங்க நடவடிக்கைகளில் "பாரிய சேதத்தை" உள்ளாக்கி இருக்குமென்று தி ஹிந்து நாளிதழிடம் ஓர் இந்திய இராஜாங்க அதிகாரி ஒப்புக்கொண்டார். தி ஹிந்துவிற்கு ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட ஆவணங்களை மீளாய்வு செய்து பார்த்துவிட்டு ஓர் இந்திய உளவுத்துறை அதிகாரி கூறுகையில், "நேரடியான உளவுவேலைகளின் அடிப்படையில் என்எஸ்ஏ அறிக்கைகளைத் தயார் செய்கிறது. அதாவது, நம்முடைய அரசியல் தலைவர்கள், அதிகாரத்துவ அந்தஸ்தில் இருப்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் என்ன தகவல் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை உடனுக்குடன் அவர்கள் கவனித்து வருகிறார்கள்," என்றார்.

இந்தியாவின் அணுசக்தி மற்றும் விண்வெளி திட்டங்கள் மற்றும் அந்நாட்டின் அரசியல் உட்பட வாஷிங்டனின் மூலோபாய நலன்களோடு சம்பந்தப்பட்ட அமைப்புகள் குறித்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் என்எஸ்ஏ செய்திகளைத் திரட்டி இருந்ததை என்எஸ்ஏ இன் ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்திய இராஜாங்க நடவடிக்கைகள் மற்றும் அரசாங்க தலைவர்களை உளவு பார்த்ததன் மூலமாக என்எஸ்ஏ க்கு கிடைத்த தகவல்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில், வாஷிங்டனின் கையை உயர்த்தி வைக்க உதவி இருக்குமென்று இந்திய உள்நாட்டு விவகார அமைச்சரவையின் ஒரு மூத்த அதிகாரி தி ஹிந்துவிற்கு தெரிவித்தார். “நாங்கள் கூட்டத்தில் அமர்வதற்கு முன்னரே, நாங்கள் என்ன கொண்டு வரவிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அது நம்முடைய இறைமையை மீறியது மட்டுமில்லை, அது நம்முடைய முடிவெடுக்கும் நிகழ்முறைக்குள் முழுமையாக ஊடுருவியதும் ஆகும்," என்றார்.

வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு நிறங்களை அளித்தும், அவை எந்தளவிற்கு உளவு வேலைகளுக்குள் உட்படுத்தப்பட்டு இருக்கின்ற என்பதைக் குறிக்க வெவ்வேறு வண்ணந்தீட்டியும் என்எஸ்ஏ "உலகளாவிய துரித வரைபடங்களைப்" பயன்படுத்துகின்றது. இதில் பச்சை நிறமென்பது குறைந்தபட்ச கவனத்தில் இருப்பதைக் குறிக்கிறது; மஞ்சள் என்பது ஓரளவிற்கு உளவுவேலைகளுக்கு உட்பட்டிருப்பதையும், ஆரஞ்ச் என்பது அதிகளவில் உளவு கண்காணிப்பின்கீழ் இருப்பதையும் குறிக்கின்றன. சமீபத்திய என்எஸ்ஏ வரைபடத்தில், இந்தியா அதிக ஆரஞ்ச் நிறத்தில் குறிக்கப்பட்டு, உலகளவில் என்எஸ்ஏ இன் "மிக முக்கிய இலக்குகளில்" ஒன்றாக ஆகி இருந்தது.

ஸ்னோவ்டெனால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆவணங்கள், இந்திய தகவல் தொடர்புகளில் உளவுவேலை செய்ய என்எஸ்ஏ குறைந்தபட்சம் இரண்டு திட்டங்களைப் பயன்படுத்துவதாக காட்டுகின்றன. ஒன்று எல்லையற்ற தகவலாளி (Boundless Informant), அதாவது "பாதுகாப்பு முகமையால் எத்துணை தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஈமெயில்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை கணக்கில் வைக்கும் ஒரு டேட்டா மைனிங் சிஸ்டம் ஆகும்.” மற்றொன்று PRISM என்பது, இந்த திட்டம் வலையமைப்பிலிருந்து அசல் உள்ளடக்கங்களை இடைமறித்து சேகரிக்கும்—அதாவது, நேரடியான தொலைபேசி அழைப்புகள், ஈமெயில்கள் மற்றும் சேதிகளை இடைமறித்து சேகரிக்கிறது.

“இந்தியா போன்ற ஒரு நட்பு நாட்டின் மீது ஏன் இந்தளவிற்கு உளவு வேலைகள் செய்யப்படுகின்றன,” என்று ஹிந்து நாளிதழால் கேட்கப்பட்ட போது, அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்ககத்தின் ஓர் அமெரிக்க செய்தி தொடர்பாளர் அந்த பிரச்சினையைத் தட்டிக்கழித்தார். அந்த குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்காது என்று கூறிய அவர், “எல்லா நாடுகளும் சேகரிப்பதைப் போலவே தான் அமெரிக்காவும் அன்னிய உளவுத் தகவல்களைச் சேகரிக்கிறது,” என்றார்.

அமெரிக்காவிலும் உலகளவிலும் குடிமக்களின் மீது என்எஸ்ஏ இன் உளவுவேலைகளைக் குறித்த ஸ்னோவ்டெனின் ஆரம்ப வெளிப்படுத்தல்களின் ஒரு பாகமாக, இந்தியாவை இலக்கில் வைத்து என்எஸ்ஏ ஆல் நடத்தப்பட்ட பாரிய உளவு நடவடிக்கைகள் கடந்த ஜூனில் அவரால் அம்பலப்படுத்தப்பட்டன. அப்போது, இந்தியாவின் வெளியுறவு விவகாரத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் துல்லியமாக என்எஸ்ஏ ஐ பாதுகாத்தார். அது வெறுமனே மெட்டாடேட்டாவை மட்டுமே இலக்கில் கொண்டிருந்தது என்ற அடித்தளத்தில் முதலில் அவர் என்எஸ்ஏ உளவு வேலைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டினார். அவர் கூறியது, “அது உண்மையில் யாருடைய சேதிகளின் அல்லது உரையாடல்களின் குறிப்பிட்ட தகவல்களையும் உளவு பார்க்கவில்லை,” என்றார். பின்னர் அவர், எவ்வித உதாரணங்களையோ அல்லது ஆதாரங்களையோ மேற்கோள் காட்டாமல், “பல நாடுகளின் படுபயங்கரமான தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்க வாஷிங்டனால் சில தகவல்களைப் பெற முடிந்தமைக்கு" அமெரிக்க உளவு முகமையின் உளவு வேலைகளுக்கு நன்றி கூற வேண்டுமெனக் கூறி, என்எஸ்ஏ இன் உளவு வேலைகளை நியாயப்படுத்தினார்.

தற்போது இந்திய அதிகாரிகள் மற்றும் இராஜாங்க நடவடிக்கைகள் மீது நடத்தப்பட்ட அமெரிக்க உளவு வேலைகள் குறித்த புதிய வெளியீடுகள் வந்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் முற்றிலுமாக மௌனமாக இருந்து வருகிறது.

என்எஸ்ஏ உளவுவேலை பிரச்சினையைக் குறைத்து காட்டும் மேலும் ஒரு முயற்சியில், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் ஒரு பிரதிநிதி BBCக்கு கூறுகையில், ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் போன்று அவர் உளவு பார்க்கப்பட்டிருப்பது குறித்து "அங்கே எவ்வித கவலையும் இல்லை", ஏனென்றால் "அவர் [சிங்] மொபைல் போனோ அல்லது ஜிமெயிலோ பயன்படுத்துவதில்லை,” என்றார். இந்திய அதிகாரிகள் மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை இலக்கில் வைத்து செய்யப்பட்ட அமெரிக்க உளவு நடவடிக்கைகள் குறித்து ஏன் புது டெல்லி எவ்வித பொதுக்கருத்தும் வெளியிடவில்லை என்று கேட்கப்பட்ட போது, சிங்கின் அதே கூட்டாளி, “அது குறித்த எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் எங்களிடம் இல்லை,” என்றார்.

இந்தியாவின் சொந்த தகவல்தொடர்புகள் உட்பட இந்தியா மீதான என்எஸ்ஏ இன் சட்டவிரோத உளவுவேலைகள் குறித்து இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்தளவிற்கு மௌனமாக இருப்பதற்கு அங்கே இரண்டு காரணங்கள் உள்ளன.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடனான எவ்வித பகிரங்க முரண்பாடும் வாஷிங்டனுடன் அரும்பி வரும் புது டெல்லியின் "மூலோபாய கூட்டுறவை" பாதிக்கும் என்று அது அஞ்சுகிறது. இந்தியா அதன் வல்லரசாகும் ஆசையை அடைய வாஷிங்டனுடனான நெருக்கமான உறவுகள் மிக முக்கியமென்று இந்திய மேற்தட்டு காண்கிறது. மேலும் இந்திய பொருளாதாரத்தை எரிச்சலூட்டி வரும் தற்போதைய நெருக்கடி —கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி பாதியளவிற்கும் அதிகமாக அடைந்துள்ளது— இன்னும் அதிகமான அமெரிக்க முதலீட்டை ஈர்க்க புது டெல்லியை நெருக்கி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான அமெரிக்க உளவு நடவடிக்கைகளை எவ்விதத்திலாவது உத்தியோகபூர்வமாக அம்பலப்படுத்தினாலோ அல்லது குற்றஞ்சாட்டினாலோ அது மத்திய கண்காணிப்பு நடைமுறை (Central Monitoring System – CMS) என்றழைக்கப்படும் அதன் பாரிய சொந்த உள்நாட்டு உளவு வேலை திட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பும் என்பது புது டெல்லியின் அடுத்த கவலையாக உள்ளது. நாடாளுமன்ற ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் சிஎம்எஸ், அந்நாட்டின் 900 மில்லியன் லேண்ட்லைன் (landline) மற்றும் மொபைல் போன் பயனர்களை மற்றும் 120 மில்லியன் இணைய பயனர்களைக் கட்டுப்பாடின்றி அணுக இந்திய உளவுவேலை முகமைகளுக்கு உதவுகின்றது. அவர்களால் தேசியளவில் எந்தவொரு தகவல் தொடர்பையும் கேட்கவும், பதிவு செய்யவும் முடியும்; மேலும் இலக்கில் வைக்கப்பட்ட தனிநபர்களின் தகவல்களை தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.

ஒரு வலதுசாரி நாளிதழான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையில் நெருக்கமான மூலோபாய இராணுவ உறவுகளை உற்சாகத்தோடு ஆதரித்தாலும், என்எஸ்ஏ இன் உளவு நடவடிக்கைகளுக்காக அதை இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்க தவறியமைக்கு, அக்டோபர் 30 இன் அதன் தலையங்கத்தில் விமர்சித்தது. கண்டனம் தெரிவிக்க தவறியமையானது இந்தியாவின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுவதாக அது வாதிட்டது: “நமது இறைமையைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை மீது UPA அரசாங்கம் மௌனமாக இருப்பதானது தவறான இராஜாங்க நடைமுறையாகும்; அது நாட்டின் கௌரவத்தைத் தாழ்த்துவதோடு, அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் நம்மை சாதாரணமாக கையாளவும் ஊக்குவிக்கக்கூடும். அது நம்முடன் நட்புறவற்ற அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நம்முடைய பலவீனம் குறித்த ஒரு சேதியையும் அனுப்புகிறது.”

1 comments :

Anonymous ,  November 20, 2013 at 10:59 AM  

But easy to challenge a small country
like Srilanka

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com