Monday, November 25, 2013

கவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....-ரூபனா-

முன்னாள் புளட் அமைப்பின் முக்கியஸதர் பின்னாள் கவிஞர் இந்நாள் நடிகர் ஜெயபாலன் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி கவலை அளிப்பதாக இருந்தாலும் சிலரை சிந்திக்கவும் பலரை சிரிக்கவும் வைத்துள்ளது.

இந்த கைது புலியை பிடிப்பதாக நினைத்து எலியை பிடித்ததாக ,இவரை கைது செய்த அதிகாரிகள், மேல் மட்டத்தினால் தண்டிக்கவோ ,கண்டிக்கவோ படுவதற்கான வாய்பை ஏற்படுத்தினாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜெயபாலன் கைது செய்யப்பட்டு விட்ட விடயம் தெரிந்ததும், பல பகுதிகளிலுமிருந்த பல்வேறுதுறை சார்ந்த நண்பர்களிடமும் ஒரேவிதமான எண்ணமே இருந்தது. ஜெயபாலன் எதை விரும்பினாரோ எதை நோக்கி நகர்ந்தாரோ அது நடந்து விட்டது. அவர் எதிர்பார்த்து இலங்கை வந்த, காவல்த்துறையின் வாகனத்தில் ஏறுவது என்கின்ற அவா நிறைவேறியதன் மூலம் நானும் ரௌடிதான் என வடிவேலு பாணியில் உரத்து கூவி தமிழகத்திலும் புலம் பெயர் தேசியவாதிகள் மத்தியிலும் மீசையை முறுக்கிக்கொண்டு வீர நடை போடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார். ஒரு தியாகியாக, சிறைமீண்ட செம்மலாக, பயிற்சி பெறாத போராளியாக உலா வரப்போகிறார். இவையே அவரை 1970களில் இருந்து அறிந்த பலரின் கருத்தாக இருந்தது

எல்லா நண்பர்களும் சொல்லி வைத்ததைப் போல வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைத்தான் நினைவுகூர்ந்தார்கள். ஒரு மருத்தவர் சொன்னார்- 'என்ன இந்தாள் நான் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன் என சந்தோசமாக சொல்லிக் கொண்டு போறார்' என. இலங்கை வருவதான ஜெயபாலனின் பகிரங்க அறிவிப்பு, அதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட கருத்துக்கள், இலங்கையில் அவர் நடந்து கொண்ட முறைமை எல்லாம் அவர் ஜெயிலுக்கு போவதை இலக்காக கொண்டே இலங்கை வந்தார் என்கின்ற தோற்றப்பாட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தியருந்தது

இலங்கை ஜெயில்கள் அத்தனை சாதாரணமானதா......? ஜெயிலுக்குப் போவதெல்லாம் சகஜமான விடயமா......? ஜெயபாலனின் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தலாமா.....? எனப்பலர் முறுகலாம்.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற, செயல்களால் அல்லாமல் எழுத்துக்களினால் மடடும் சீவிப்பவர்கள்- இவை பற்றி எல்லாம் அச்சப்படத் தேவையில்லை. இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்த 2009இன் பின்னர் உருவாகியிருக்கும் , குறிப்பாக தமிழர்கள் தொடர்பான அரசாங்கத்தின் 'பொறுப்புக்கூறல்' என்பதுதான் இவர்களின் கவசம். அவர்கள் இலங்கைக்குள் வேண்டப்படாதவர்கள் என அரசாங்கம் கருதும் பட்சத்தில் அவர்களை பிடித்து வெளியே அனுப்பிவிடும். போரின் பின்பு கைது செய்யப்பட்ட, பொதுவிடயம் (அரசியல் - கலை - இலக்கியம்) சார்ந்த அனைவரின் விடயத்திலும் நமது தமிழ் அப்புக்காத்துக்களை போல சட்டநுணுக்கம் பார்த்துத்தான் அரசாங்கம் செயற்பட்டிருக்கின்றது. நமது தமிழ்வீரர்களிற்கு இதனை சகித்துக்கொள்ள சற்று சிரமமாகத்தான் இருக்கும்.

கோத்தபாய ராஜபக்சவையே இரண்டுநாள் தூக்கமில்லாமல் கலங்கடித்த கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் அவரிற்கிருந்த வெளிநாட்டு பிரஜாவுரிமையாலும், அதன் அடிப்படையிலான மேற்குநாடுகளின் சில சக்திகளின் அழுத்தத்தினாலுமே காப்பற்றப்பட்டார்.

அடுத்து தோழர் அ.மார்க்ஸ் விவகாரம். மார்க்ஸ் அவர்கள் ராஜபக்ச குடும்பம் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளை பெயர்த்தெறிபவரோ அல்லது அப்படியான நோக்கத்துடன் வந்தவரோ அல்ல. கூட்டமொன்றில் பேச வந்த அழைப்பை மதித்து இங்கு வந்தவர். இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் பிரயாணம் செய்யும் இருநாட்டவர்களுமே, பெரும்பாலும் சுற்றுலா விசாவில்த்தான் செல்கிறார்கள். இலகுத்தன்மையான இந்த வழியில் இங்கு வந்த தோழர் மார்க்ஸை இலங்கைக்கு அழைத்த குழுவிற்குள் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை, சிக்கலில் மாட்டியது. ராhஜபக்சவின் விசுவாசி என்ற பழிச்சொல்லிற்குக் கூட ஆளாகிக் கொண்டிருந்தவரை ராஜபக்சவே போராளியாக்கி விமானமேற்றி அனுப்பி விட்டார். மார்க்ஸ் பேசவிருந்த கூட்டத்துடன் தொடர்புடைய யாரோ ஒரு கறுப்பாடு, குடிவரவுத்துறையில் இருந்த தனது நண்பர்களிற்கு சுற்றுலா விசாவில் வந்து பகிரங்ககூட்த்தில் பேசப்போகிறார் என போட்டுக் கொடுக்க , இலகுவான போராளிப் பட்டத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

இந்தியா உடபட உலகின் பல நாடுகளிலும் சுற்றுலா விசாவில் வந்தவர் சுற்றுலா மட்டுமே செல்லலாம் என்பது பொதுவிதியாகவே உள்ளது. கூட்டங்களில் பேசுவது, மாநாடுகளில் கலந்து கொளவது, அரசியலில் ஈடுபடுவது, பத்திரகையாளர் சந்திப்புகளை நடாத்துவது போன்றனவற்றிற்கு வேறுவிதமாக விசா பெற வேண்டியுள்ளது. இந்த சட்டம் அமுலில் உள்ள நாடுகள் அனைத்திலுமே, அது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறதா......? கண்காணிக்கப்பட வேண்டுமா....? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

உலகின் அனைத்து நாடுகளும் தனது எதிரிகளை பழிவாங்க, அல்லது தனக்கு உவப்பில்லாதவர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள இது போன்ற சட்டங்களை துணைக்கழைக்கின்றன. பல நாடுகளில் உள்ளூரிலேயே சில சட்டங்கள் சிலருக்கு மட்டுமே அல்லது சில நேரங்களில் மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் பிரித்தானியாவிலும் இலங்கையிலும் ஒரே அளவான சட்ட ஆட்சிதான் நடக்கின்றது என்பதோ இலங்கையில் நடக்கும் ஜனநாயகமீறல்களிற்கு சமாதானம் சொல்வதோ அல்ல

சுற்றுலா விசாவில் வந்து வேறு பொது விடயங்களில் ஈடுபடக்கூடாது என்பது ஒரு சட்டவிதியாகவே இருக்கின்றபோது, அதை நீக்க அல்லது மீற வேறு மார்க்கங்கள் இல்லாத நிலையில் ஒருவர் இலங்கையில் என்ன செய்யப் போகிறாரோ அதற்கு தோதான விசா பெற்று வருவது மட்டுமே மார்க்கம்.

இலங்கை அரச எதிர்ப்பாளர்களும், தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் எத்தனைபேர் சத்தமின்றி நாட்டிற்குள் வந்து தேனெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். எத்தனை அரச எதிர்ப்பு ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் வந்து வேண்டியதை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள்.

ஏன் ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிராக செங்கடல் படம் எடுத்து உலகம்முழுக்க புலிஆதரவாளாகள் மத்தியில் காணபித்து அவர்கள் ஆசீர்வாதத்தை பெற்ற லீனா மணிமேகலை என்பவர் அதன்பின்னர் இதே சுற்றுலா விசாவில் மூன்று தடவை இலங்கை வந்து மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக படம் தயாரிக்கவில்லையா.....? அது அவர்களின் புத்திசாதுரியம் வியாபார தந்திரம்.

புலம் பெயர் நாடுகளின் எண்ணற்ற புலி ஆதரவு பொது அமைப்புக்களும் பல அரச எதிர்ப்பாளர்களும் சத்தமின்றி சுற்றுலாவில் வந்து இங்குள்ள பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்து செல்கிறார்கனே. இது அவர்களின் பொது நோக்கு.

அண்மையில் இலங்கை வந்த இந்தியாவின் தெஹல்கா ஊடகவியலாளர் ஒருவரை சந்தித்த போது, என்ன விசாவில் வந்தீர்கள் என கேட்க. சிரித்துக் கொண்டு பாக்கிலிருந்த சில பட்டுப்புடவைகளை காட்டினார். அவர் இங்கே வந்தது ஒரு அப்பாவி வியாபாரியாக. இதுதான் செயல் பாட்டாளர்களுக்கும் வேடதாரிகளுக்குமிடையிலான வேறுபாடு.

இலங்கை அரசை கடுமையாகசாடும் கருத்துக்களையும் குறிபபாக வன்னியுத்தத்தின் பின்னர்

"நீதியற்ற வெற்றியில் களி கொண்ட வீடுகளில் நாளை ஒப்பாரி எழும். வெண்புறாக்களாய்க் கொல்லப் படுபவர் புலம்பி அழுத தெருக்களில் நாளை குதூகலம் நிறையும்.தீப்பட்ட இரும்பென் கண்கள் சிவந்தேன் சபித்துப் பாடவே வந்தேன். முகமூடிகளும் ஒப்பனையுமற்ற உருத்ர தாண்டவப் பாடலிது. என் தமிழின் மீதும் என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு நான் அறம் பாடுகிறேன். எனது சமரசங்களிலாத சத்தியத்தின் பெயரால் சபிக்கிறேன் எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே உங்களுக்கு ஐயோ. தர்மத்தின் சேனையே என்னை களபலியாக எடுத்துக்கொள்".

என்கின்ற வரிகள் அடங்கிய அறம்பாடலை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தவர் ஜெயபாலன். கருத்து வெளியிடுவதும் அறம்பாடுவதும் அவரவர் சுதந்திரம். ஆனால் இப்படி அதிதீவிர அரச எதிர்பாளனாக இருக்கும் இவர் பகிரங்கமாக நான் இலங்கை போகிறேன் என அறிவித்து விட்டு வந்ததும் இங்கு வந்த பின்னர் அவர் நடந்கொண்ட விதமும் இவரது கபட நாடகத்தை வெளிப்படுத்துகிறது. ஜெயபாலன் தனது தாயாரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை தடுப்பது சரியென்று வாதிடுவதோ அல்லது பல்லாயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களும் பல வாழ்விடங்களும் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதோ அல்லது மரணித்தவர்களிற்கான அஞ்சலி உரிமைகள் மறுக்கப்படுவதை நியாயப்படுத்தவதோ நியாயமானதாகாது.

தனது தயாரை இறுதிநாட்களில் தவிக்க விட்ட வெப்பியாரத்தை ஜெயபாலன் முகப்புத்தகத்தில் ஏற்கனவே எழுதி, தாயின் கல்லறையிலிருந்து புதிய கல்வெட்டு எழுத ஆரம்பிக்கப் போவதாக வேறு சொல்லியிருக்கிறார். தாய்மாரின் கண்ணீருக்கு மகன்களே காரணமாயிருப்பதும், அனாதையாய் தாய்மார் இறந்து போகும் துயரக்கதையும்தானே நமது மரபாகவே ஆகிவிட்டிருக்கின்றது. அவர் எதையும் எழுதட்டும். ஆனால் இப்படி நாள், இடம் ,நேரம் எல்லாம் குறித்து எழுதப்படுமளவிற்கு நமது தமிழ்கவிதைச் சூழல் இயந்திரத்தன்மையாகிவிட்டது என்பதுதான் வேதனை.

உண்மையில் அவர் தனது தயாரின் கல்லறைக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்தால், அதனை ஆர்ப்பாட்டமின்றி செய்திருக்கலாம். அதனை ஒரு புரட்சி செயலாகவோ அல்லது அரசியல் செயற்பாடாகவோ பிம்ப உருவாக்கம் செய்திருக்க வேண்டியதில்லை. ஒருவன் தனது தாயாரின் கல்லறையில் வந்து அஞ்சலி செலுத்துவதில் என்ன புரட்சி இருக்கிறது. சில வேளைகளில் அஞ்சலி செலுத்தாதவன்தான் எதாவது புரட்சி நியாயங்கள் சொல்லலாம்.

பகிரங்க முன்னறிவுப்புடன் இலங்கை வந்த ஜெயபாலன் விமானநிலையத்தில் தனக்கு எதுவும் நடக்கவில்லையே என்கின்ற வேக்காட்டுடன் அன்று மாலையே கொழும்பு தமிழ்சங்கத்தில் நடந்த விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக நுழைந்து அரச எதிர்ப்பு கருத்துக்களை ஆவேசத்துடன் வெளிப்படுத்தி அங்கே பரபரப்பு எற்பட முறைத்துக் கொண்டு வெளியேறினாராம்.

சில வாரங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள (புலிகள் அமைப்பில் செயல்பட்டு இன்று அமைதியாக இருக்கும்) நண்பர்கள் சிலரை வற்புறுத்தி, அவர்களுக்கிருந்த தொடர்புகளை பயன்படுத்தி யாழ் ஊடக மையத்தில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இவர் வெளியிட்ட கருத்துக்களும் காட்சிகளும் (இவராலேயே அனுப்பப்பட்டு) வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களில் வெளிவந்த நிகழ்வே இவர் கைதுக்கு காரணமாக அமைந்தது எனலாம்.

அதே வேளை கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் வவனியா காவல்த்துறையினருக்கு நோர்வேயில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புத்தான் ஜெயபாலன் பற்றிய விபரங்களை காவல்த்துறைக்கு தெரியப்படுத்தியது எனவும் இது கவிஞரின் ஏற்பாடே எனவும் சொல்லப்படுகிறது.

நடக்கும் சம்பவங்கள் இதனையும் நம்பவைக்கும் வகையிலேயே உள்ளன. ஜெயபாலன் கடத்தப்பட்டார் என்பது முதல் செய்தி, ஓரிரு மணித்தியாலங்களில் அவர் வவுனியா காவல்நிலையத்தில் உள்ளார், லண்டனுக்கு கதைத்தார், இந்தியாவுக்கு கதைத்தார் ,அமைச்சர் பசீர் சேகாதாவுத் தொடாபில் உள்ளார் இப்படி தொடர், தொடர்பு அறிவிப்புக்கள்

குமார்குணரட்ணம் பற்றிய மர்மம் எத்தனைநாள் நீடித்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கே கடத்தப்பட்டதாக சொல்லப்பட்டவர் உடனேயே உலகமெல்லாம் தொலைபேசி ,'நான் காவல்நிலையத்தில் இருக்கிறேன்' ஆரம்பிக்கிறது அளப்பறை.

ஜெயபாலனுடன் இப்பொழுதுதான் பேசினேன், காரில் போகிறார், இப்பொழுது சிறுநீர் கழிக்கிறார், முதுகு சொறிகிறார், இப்பொழுது கொலைகார காவல்த்துறையின் ஒருவனின் அருகில் உட்கார்ந்திருக்கிறார் இப்படி பில்டப்புகள்.

அதிலும் ஒரு இணையத்தளம் சகித்து கொள்ளவே முடியவில்லை. இலங்கையில்- அதுவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கடத்தப்பட்ட ஒருவர், அவர்களின் வாகனத்தில் இருந்தபடி தொலைபேசியில் கதைக்கிறார்... அது ஒலிபரப்பப்படுகிறது..... இதற்கு இவர்களின் பெயர் கடத்தல்.

கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகள் போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்த்தான் இந்த 'மணல்விளையாட்டுக்களும்' நடக்கின்றன. இப்படியொரு கடத்தலும், இதன் தொடர்ச்சியான சம்பவங்களும் உலக வரலாற்றிலேயே இதுதான் முதன் முதலாக நடப்பது எனலாம்.

ஜெயபாலன் இலங்கைக்கு அச்சுறுத்தலானவர் என்பதாலோ இலங்கையின் தமிழர் அரசை மலர வைக்க வந்தவர் என்பதாலோ கைது செய்யப்படவில்லை என்பது இங்குள்ள அப்பாவிக்கும் புரிகிறது பாவம் அங்குள்ள மக்கள்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசினதும் அங்குள்ள ஜனநாயகத்தையும் நன்கு உணர்ந்தவர் ஜெயபாலன். இலங்கை ஒர் உயிராபத்துள்ள நாடு என்று அவர் உணர்ந்திருந்தால் அவர் இங்கு வந்திருக்க மாட்டார். இவர் இங்கு வந்து வலிந்து கட்டி தன்னை கைது செய்யப்பண்ணியுள்ளார். இதனுடாக இவர் புலம்பெயர்ந்திருக்கும் தேசத்தில் தன்னை ஓர் வீரனாகவும் தமிழ் தேசியவாதியாகவும் காட்டிக்கொள்வதே இவரது நோக்கமாக இருந்துள்ளது.

நன்றி தேனி

5 comments :

Anonymous ,  November 25, 2013 at 11:56 PM  

He is a terrorist from Norway and Sauth India! He should be in jail f minimum for 1 year in Sri Lanka.

There are many many issues from him regarding Sri Lankan Government.

he has bee in TV channels in Chenni, where he critisesed Sri Lanak

Anonymous ,  November 26, 2013 at 4:43 AM  

மூஞ்சீண்ட விருத்தத்தில் ஒரு வீரப்பன் மீசை வேற. பார்த்தால் சரியாக சுடலை பிசாசு போலவே தெரிகிறது.
இதுகள் எதற்காக இங்கு வரவேண்டும்? இதுகளின் தலையை கொத்தி, அதையும் அறுத்துவிட்டு, முண்டத்தை கோவணமும் இல்லாலாமல் கடலுக்குள் தூக்கி எறியவேண்டும்.

Anonymous ,  November 26, 2013 at 4:43 AM  

மூஞ்சீண்ட விருத்தத்தில் ஒரு வீரப்பன் மீசை வேற. பார்த்தால் சரியாக சுடலை பிசாசு போலவே தெரிகிறது.
இதுகள் எதற்காக இங்கு வரவேண்டும்? இதுகளின் தலையை கொத்தி, அதையும் அறுத்துவிட்டு, முண்டத்தை கோவணமும் இல்லாலாமல் கடலுக்குள் தூக்கி எறியவேண்டும்.

Anonymous ,  November 26, 2013 at 6:08 AM  

We have our inland tamil political comedians,in addition we import.Jokes are enough no use to import.

Anonymous ,  November 27, 2013 at 1:27 AM  

ஆடுகளம் திரை படத்தில் சேவல்களை துன் புறுத்திய குற்றத்திற்காக, இவனை மிருக வதை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் , சில ஊடகங்கள் தெரிவிப்பது போல் , இவன் ஒன்றும் பிரபல நடிகன் கிடையாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com