Thursday, November 28, 2013

அடுத்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதியுடன் கனடா பிரதமர் இணைந்தே செயற்பட வேண்டும் : அரசாங்கம்

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை கனடாவின் பிரதமர் பகிஷ்கரித்தாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கனடாவின் பிரதமர் இணைந்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கிராமிய அலுவல்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன தெரிவித்தார்.

இந்தியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளமையின் காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டுக்கு வருகை தரவில்லை. இலங்கைக்கு வருவதைவிட மன்மோகன் சிங்கிக்கு தேர்தல் முக்கியம் என்பதனை நாங்கள் ஏற்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

பொதுநலவாய மாநாட்டை இலங்கை நடத்தியதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய புகழ் ஏற்பட்டது. அதனை பணத்தினால் அளவிட முடியாது. பொதுநலவாய மாநாட்டுக்காக நாங்கள் மிகப்பெரிய நிதியை செலவிடவில்லை. எம்மிடம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் இருந்தன.

கனடா இந்த மாநாட்டை பகிஷ்கரிப்பதாக அறிவித்தாலும் அந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாடும் அதனை பின்பற்றவில்லை. அவுஸ்திரேலிய பிரதமரும் அந்த கோரிக்கையை ஏற்காமல் இலங்கை வந்ததுடன் சிறந்த உரையையும் நிகழ்த்திச் சென்றார். கனடாவில் ஐந்து இலட்சம் இலங்கை தமிழ் மக்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே கனேடிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரித்தார்.

ஆனால் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை கனடாவின் பிரதமர் பகிஷ்கரித்தாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கனடாவின் பிரதமர் இணைந்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

பல்வேறு நாடுகளின் பிரதமர்கள் ஜனாதிபதிகள் வெளிவிவகார அமைச்சர்கள் ஆநளுநர்கள் என பிரதிநிதித்துவங்கள் இடம்பெற்றன. எந்தவொரு நாடும் பங்கு பற்றுதலை தவிர்க்கவில்லை. இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்துப் பேசிய நாடுகள் கூட இங்கு வந்தன. சனல் 4 ஊடகவியாளர்களும் வருகை தந்தனர். உண்மையில் செனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரேவை யாழ்ப்பாணம் அனுப்பியிருக்கலாம். யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்று அவருக்கு காண்பித்திருக்கலாம்.

ஆனால் எமது நாட்டிலேயே சிலர் கெலும் மெக்ரேவுடன் இணைந்துகொண்டு சில செயற்பாடுகளை முன்னெடுத்தமை கவலையளிக்கும் விடயமாகும். ஐககிய தேசிய கட்சி இவ்வாறு செயற்பட்டது. இதனால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுநலவாயம் என்பது தொண்டு அடிப்படையில் நாடுகள் இணைந்துகொண்டு செயற்படும் அமைப்பாகும். இந்த அமைப்பினால் மனித உரிமை மீறல் விவகாரங்களை வைத்துக்கொண்டு நாடுகளுக்கு தண்டனை வழங்க முடியாது.

இதேவேளை இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளமையின் காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டுக்கு வருகை தரவில்லை. உண்மையில் இந்தியாவில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். அங்கு ஒரு கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாது.

மாநில கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகின்றது. எனவே தேர்தலைக் காரணமாகககொண்டே இந்திய பிரதமர் இலங்கை வரவில்லை. இலங்கைக்கு வருவதைவிட மன்மோகன் சிங்கிக்கு தேர்தல் முக்கியம் என்பதனை நாங்கள் ஏற்கின்றோம். அவர் வருகை தராததன் காரணமாக நாம் இந்தியாவுடன் கோபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com