Friday, September 13, 2013

ஓபாமாவை தடுத்த வெற்றி புடினை சாரும்?? வீட்டோக்கு பயந்து ஓபாமா ஒடுங்கினாரா?

சிரியா நாட்டில், அதிபர், பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக் கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப் பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தைப் பதவி விலகும்படி வலியுறுத்தின.

ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன. இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் இந்தச் சண்டையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரசாயனக் குண்டு வீச்சில், நச்சுப் புகை பரவி, பலர் இறந்த இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து உள்ளனர். 'இது தொடர்பான அறிக்கை, வரும், 16ம் தேதி, வெளியிடப்படலாம்' என, பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது.

சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியா மீது, ராணுவத் தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. 'சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கவும் முன்வந்தால், தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியது, ஆசாதின் படைகள் அல்ல் பிரிவினைவாத அமைப்பு தான் என்று தெரியவந்தது. 'பிரிவினைவாத அமைப்புகளில் ரசாயன ஆயுதங்கள் இருந்தால் உலகத்துக்கே ஆபத்து. அதனால் உலக பாதுகாப்புக்காக சிரியா மீது போர் நடத்துவது முக்கியம் என்று கூறினார் ஒபாமா.

ஆனால், ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. மாநாட்டுக்கு வரவேற்ற புடின், வெளிப்படையாக, சிரியா மீது தாக்குதல் நடத்த சரியான நேரம் இல்லை நியாயமான காரணமும் இல்லை என்று கூறினார். இந்தியா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளும் தைரியமாக , ஐநா கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் கூடாது என்று சொல்லிவிட்டன. இதை ஒபாமா எதிர்பார்க்கவில்லை. வாஷிங்டன் திரும்பிய ஒபாமா யோசிக்க ஆரம்பித்தார். ஐநா கவுன்சில் ஒப்புதலுக்கு போனால், அதை கண்டிப்பாக ரஷ்யா 'வீட்டோ' அதிகாரத்தை வைத்து ரத்து செய்து விடும் என்று அவருக்கு புரிந்தது.

இந்த நிலையில், அவசர அவசரமாக டிவியில் அவர் புதன் அன்று பேசினார். 'போரை அமெரிக்காவும் விரும்பவில்லை தான். உலக பாதுகாப்புக்கு தான் அப்படி முடிவு எடுத்தேன். ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைக்கட்டும் போரை நிறுத்த தயார்; இல்லாவிட்டால், போரை சந்திக்கதான் வேண்டும்' என்று பேசினார்.

இதற்க்டையே ஒபாமாவின் இந்த பேச்சுக்கு காரணம் ரஷ்ய அதிபர் புடின் என்று தெரியவந்துள்ளது. சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு ரஷ்ய அதிபர் புடின் அளித்த நான்கு திட்டங்கள், ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு கூட்டமைப்பு குழுவில் சிரியாவை சேர்ப்பது. ரசாயன ஆயுதங்கள் தயார் செய்யும் இடங்களை சிரியா அடையாளம் காட்டும். அவற்றை இந்த குழு நேரில் சென்று ஆராய்ந்து, ஆயுதங்களை சேகரிக்கும். சேகரித்த ஆயுதங்களை அழிப்பது பற்றி குழு முடிவு எடுக்கும்.

இது தொடர்பாக சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வியாழன் அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு நடத்துவர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும். இந்த தகவல்களை தாங்கி தான் அந்த அறிக்கை புடினிடம் இருந்து ஒபாமாவுக்கு சென்றது. இதை பார்த்த ஒபாமா மனம் மாறினார். போரை தவிர்க்க சிரியாவுக்கு நிபந்தனை விதித்தார்.

இந்த வகையில் ஒபாமாவை தடுத்ததில் புடினுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சர்வதேச வெளியுறவு விவகார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜெனிவாவில் நடக்கும் பேச்சில், ஐநா அரபு லீக் தூதர் லக்தர் பிராமியும் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாட்டையும் ரஷ்யா தான் செய்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com