Thursday, September 26, 2013

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் திட்டத்தில் அமெரிக்கா: பாதுகாப்பு செயலர் சீற்றம்

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“30 வருடங்கள் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயகத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு எல்லாவற்றையும் செய்த போதிலும், அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளது.

நாம் ஒரு பலகட்சி நாட்டில் இருக்கிறோம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது கூட நாம் தேர்தல்களை நடத்தினோம். ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

தெற்கில், அமெரிக்க தூதரகத்தின் பின்புலத்துடன் எந்தவொரு மட்டத்திலும் தேர்தல்களில் அவர்களால் வெற்றி பெறமுடியாது. சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கூட அமெரிக்கத் தூதரகத்தைப் போன்றே குற்றம்சாட்டுகின்றன.

18வது திருத்தச்சட்டத்தின் மூலம், இலங்கை ஜனாதிபதி பதவி வரம்பு நீடிக்கப்பட்டதை மேற்கு நாடுகள் விமர்சிக்கின்றன. ஆனால் அண்மையில் ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்க்கல், மூன்றாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகளும் அவர்களின் பதிலிகளும், தமிழ் மக்களுக்கு உத்தரவிட்ட போது, மேற்குலக சக்திகள் மைளனம் காத்தன.

போரில் பிரபாகரன் உயிர் தப்பியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறைக்கைதியாகவே இருந்திருக்கும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது.

வடக்கு மாகாணசபைத் தேர்லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பதாக தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டால், மோசமான தவறாகி விடும்" என்றும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜாக்ஷ எச்சரித்துள்ளார்.

2 comments :

Anonymous ,  September 26, 2013 at 3:44 PM  

எமக்கு இதுவரை காலமும் கஷ்டம், துன்பம், இழப்புக்களை தேடித்தந்த பேயிகளும் வேண்டாம், பிசாசுகளும் வேண்டாம்.
பேய்களிடமிருந்து விடுவித்த ராஜபக்ச அரசாங்கம், அவர்களின் பிசாசுகளிடமிருந்தும் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்.

எமக்கு ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடனான, சமஷ்டி முறைபடியான ஒரு மாநில சுய ஆட்சி வேண்டும். அத்துடன் இதுவரைக்கும் நடந்துள்ள இழப்புகளுக்கும், அநியாயங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

அதை ராஜபக்ச அரசாங்கம் ஏற்று, எமக்கு இதய பூர்வமாக உதவுமாயின் நாம் ராஜபக்சாவை ஒரு கடவுளாகவே மதிப்போம், அதனால் உலக நாடுகளும் அவரை புகழ் பாடும் என்பதில் சந்தேகமில்லை.

சர்வ அதிகாரமும், அரசியல் பலமும் வாய்ந்த எமது ஜனாதிபதியால் ஏன் முடியாது?

தற்போதைய உலகில், சிந்திக்கும் ஆற்றலுள்ளவர்கள் எல்லோரும் எதையுமே இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
எமது ராஜபக்சாவும் புரிந்து கொள்வார் என நம்புகிறோம்.

Anonymous ,  September 26, 2013 at 6:48 PM  

கூடுதலான மேற்குலக நாடுகள் நேர்மை, நீதியான வழிகளை மற்றைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதையே விரும்புகிறது.

இலங்கையில் நடக்கும் குடும்ப ஆட்சியின் செயல்பாடுகளை உலகம் நன்கு கவனித்து வருகிறது.

உலக சரித்திரத்தில், மேற்குலக நாடுகளை இலகுவில் ஏமாற்றி விடலாம்
என்று நினைத்தவர்கள், மேற்குலக நாடுகளை எதிர்த்தவர்கள் எவரும் மிஞ்சிய சரித்திரம் இல்லை.

ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் மக்களை ஏமாற்றி, மகிந்த குடும்பம் காணும் கனவும், சுகமும் பல காலம் நிற்சயமாக நீடிக்க மாட்டாது.

அநீதியான செயல் பாடுகள், அநீதியான நடவடிக்கைகள், அநீதியாக சேர்க்கும் பணம், சொத்து, சுகம் எல்லாம் ஒரு நாள் அவர்களை ஆபத்தில் மாட்டும் என்பதே உலக நியதி.

அடோல்ப் கிட்லர் தொடக்கம் கெர்னல் கடாபி வரையிலான சர்வாதிகளின் வாழ்க்கையின் கசப்பான, கீழ்த்தரமான முடிவுகளை எல்லோரும் அறிவர்.

தயவு செய்து இக் கருத்தை மற்றைய பத்திகைகளுக்கும் அனுப்பி, மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com