Sunday, September 1, 2013

தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த

ஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் அவர்களிடம் தெரிவித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல்துறை அமைச்சர் கெஹலிய விற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக திருகோணமலையில் அண்மையில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நவநீதம் பிள்ளையுடன் வந்திருந்த உயரதிகாரிகளிடம் தெரிவித்தமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அத்தகைய ஒரு சம்பவம் திருமலையில் நடைபெற்றதா எனவும், அதன் பின்னணிக்கான காரணம் என்ன என்பது தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் உள்நாட்டில் இடம்பெறும் இதுபோன்ற சிறுசிறு சம்பவங்களை ஊடக அமைச்சரிடமோ அல்லது தனது கவனத்திற்கோ கொண்டு வராதிருந்த இந்தச் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருசிலர் அதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

மாதமொருமுறை தான் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்திக்கும் போது கூட தெரிவிக்கப்படாத இதுபோன்ற சிறு சம்பவ நிகழ்வுகள் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு முறையிடப்பட்டமை வருந்தத்தக்கதொரு விடயம் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

தன்னை இவர்கள் சந்திக்கும் வேளைகளில் பல விடயங்கள் தனிப்பட்ட முறையில்கூடக் கலந்துரையாடப்படுவதுண்டு. அவ்வேளை இவர்கள் இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தால் அவ்விடத்திலேயே அதற்குத் தீர்வு காணப்படும் சூழல் ஏற்படும். ஆனால் இதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிடும் அளவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒருசிலர் முயற்சித்தமை குறித்து ஜனாதிபதி தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.

எது எவ்வாறாயினும் குறித்த பத்திரிகை ஆசிரியரினால் முறை யிடப்பட்ட சம் பவம் தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எமது நாட்டின் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்திச் சில சக்திகள் முயன்று வரும் இவ்வேளையில் பொறுப்புள்ள ஊடக வியலாளர்கள் ஒருசிலர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது ஆரோக்கியமானதல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com