Saturday, August 3, 2013

என்னை திருமணம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?; 11 வயது யெமன் சிறுமி கேள்வி (காணொளி இணைப்பு)

சனா: யெமனிலுள்ள 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக யூரியூப்பில் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இளமையான இச் சிறுமி மிகவும் அகந்தையுடனும் அச்சத்துடனும் கமராவை நோக்குகின்றார். ஆனால், அவரது கேள்வி அதிர்ச்சிதரும் ஒன்றாகஉள்ளது. என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? என 11 வயதுடைய அச் சிறுமி கேள்வியெழுப்பியுள்ளார்.

யெமனில், பால்ய வயது திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடா அல்ஆடல் என்ற இந்தச் சிறுமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

யெமனின் பால்ய வயது மணமகள்களிலொருத்தியாக நடா இருக்க விரும்பவில்லை. இந்த 11 வயது சிறுமியின் கேள்வி ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாகும். இந்த பால்ய வயது திருமணத்தை விட, மரணிப்பது சிறந்ததாகுமெனவும் நடா தெரிவித்துள்ளார்.

பணத்துக்காக திருமணம் செய்து கொடுக்க தனது பெற்றோர் முயற்சி செய்து வருவதாகவும் நடா குற்றஞ்சாட்டியுள்ளாள். இரண்டரை நிமிடங்கள் நீடிக்கும் நடாவின் நேர்காணல் யூ ரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யெமனிய சிறுமிகளின் பாடசாலைக் கல்வியை இடைநடுவே அவர்களுடைய பெற்றோர் நிறுத்திவிட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அவர்களுடைய ஆரம்பக் கல்விக்கு இடையூறு ஏற்படுகின்றது. அத்துடன், உடல் நல பாதிப்புகளும் ஏற்படுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண் உரிமைகளுக்கான பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யெமனில், பால்ய வயது திருமணம் என்பது பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்றது. நடா, தற்பொழுது தனது பெற்றோரை விட்டு வந்து, அவளுடைய மாமனாரின் வீட்டில் வசித்து வருகின்றாள்.

நான் திருமணத்திலிருந்து ஓடி வந்து விட்டேன். நான் அப்பாவித் தனத்திலிருந்து தப்பி விட்டேன். நான் விற்கப்படவோ, வாங்கப்படவோ வேண்டிய நிலையிலிருந்து தப்பி விட்டேன் எனவும் நடா தெரிவித்துள்ளார். தற்பொழுது நடா மகிழ்ச்சியாகவும் ஓய்வாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com